Wednesday, July 6, 2011

நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)

காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக.

இரா.பழனிசாமியின் வைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும். இதில் எதிமறைக் கதைப்பாத்திரங்களான காளிங்கராயரும் தளபதியும் பல சதித்திட்டங்களைத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.

முதலில், பொன்னிக்குத் தண்டனை பெற்றுத் தந்து சோழன் கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். கரிகாலன் போர் நெறியை மீறியதாகக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான். இருவரும் இரும்பிடர்த்தலையாரைத் தூண்டிவிட அவர் கரிகாலனைச் சந்தித்துப் பொன்னி சேரனின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார். ஆனால், கரிகாலனோ வழக்கு விசானைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க மறுத்து, தீர விசாரிப்பதாகக் கூறினான். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இஃது ஏமாற்றமாக முடிந்தது.

இரண்டாவதாக, பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று கூறி கரிகாலன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். பொன்னியின் வழக்கை இரண்டு நாட்களுக்குக் கரிகாலன் ஒத்திவைத்ததைச் சாதகமாக்கி, பொன்னி எழுதியதுபோல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதை அந்தப்புரத்தில் கரிகாலன் தவறவிட்டதாக வேண்மாளிடம் தருகிறார் தளபதி. அவள், அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய, அவர் கலிகாலனிடம் முறையிடுகிறார். அவ்வேளை பொன்னி உண்மையாக எழுதிய ஓலை வர கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது. இதனால் அவர்களின் இரண்டாவது திட்டமும் தோல்வியடைகிறது.

மூன்றாவதாக, பாண்டிய மன்னனின் சோழ நாட்டைக் காப்பாற்ற இருவரும் திட்டம் தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார். இருவரும் ஓலைகளை மாற்றிக் கொள்கின்றனர். அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் பூண்ட கரிகாலன், காளிங்கராயர் மீது மோதி ஓலையைப் பறிக்கிறான். அதன்வழி பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும் காளிங்கராயரின் துரோகத்தையும் அறிகிறான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஐயாயிரம் கொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்து விட்டுப் போன அந்த ஒற்றனைக் கலிகாலன் பின்னர் கைதுசெய்கிறான். பாண்டியனையும் அவனது படைகளையும் பின்னர் சிறைச் செய்து சதித்திட்டத்தை முறியடிக்கிறான்.

நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியை மன்னன் மீது போட விஷ வைத்தியன் கார்கோடனை ஏவுகின்றனர். கார்கோடனை அரசாங்க விடுதிக்கு அதிகாரியாக நியமித்துப் பொன்னியை விஷம் வைத்துக் கொல்லுமாறு தூண்டுகின்றனர். மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி அவன் சம்மதிக்கிறான். விருந்தினர் விடுதியில் கார்கோடகன் பொன்னியைத் தேடுகிறான். கோட்டைக் காவலர்கள் தீவட்டி, அமாவாசை மூலம் கார்கோடகனின் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு வருகிறான். கார்கோடகனிடமிருந்த சோற்று வட்டிலைப் பறித்துக் கரிகாலன் குருவிகளுக்கு உணவிடுகிறான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குருவிகள் துடிதுடித்து இறக்கின்றன. சதித்திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள, அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான்.

இறுதியாக, கார்கோடகனைச் சிறையில் அடைப்பதற்குக் காரணமான துறவியைக் (கரிகாலன்) கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர். வேங்கையன் என்னும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப் பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர். ஆனால், அவன் துறவியைக் கொல்ல முயன்ற பொழுது பொன்னி எச்சரித்ததால் துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் காப்பாற்றப்படுகிறார். பின்னர், கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடக்கிறான்.

இப்படி, எல்லாச் சதித்திட்டங்களும் தோல்வியடைய காளிங்கராயரும் தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். இருவரும் செய்த சதிகளை அரசவையில் அம்பலப்படுத்திய கரிகாலன் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான்.