Sunday, November 4, 2012

கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக.


கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார்.

இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார்.

சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார்.

சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார்.

இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம்.

கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார்.


ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார்.


- நன்றி :புஷ்பவள்ளி சக்திவேல், SMK Taman Selesa Jaya, Skudai, Johor Bahru
பொன் விலங்குகு நாவலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளை விளக்கி எழுது.


தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு நாவலாக அல்லாமல் அரிய சமுதாயச் சிந்தனைகளால் பின்னப்பட்ட சமூக நாவலாகத் திகழ்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் சிறந்த வாழ்வியல் இந்நாவலில் வலியறுத்தப்படுகிறது. இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைச் சத்தியமூர்த்தி காப்பாற்ற அது இருவரையும் ஆழமான அன்பில் பிணைக்கிறது. மோகினியை மனைவியாக மனத்தில் வரித்தபின் அவன் அன்புக்கு ஏங்கும் பாரதியிடமிருந்து விலகி நின்று கவனமாகப் பழகுகிறான். அதுபோல் சத்தியமூர்த்தியைத் தன் கணவனாக எண்ணி வாழும் மோகினி மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் அத்துமீறலாலும், சத்தியமூர்த்தி தன்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு போவதாலும் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவனும் மறுமணம் செய்யும் எண்ணமில்லாமல் மோகினி நினைவோடு வெளிநாடு போகிறான். உள்ளத்தால் இணைந்த இருவரின் தூய அன்பை இது தெளிவாக்குகிறது.

குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற சிந்தனை மோகினியின் மூலம் வெளிப்படுகிறது. மோகினி தாசிப் பெண்ணாகப் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் பெண்ணாகவும், விரும்பியவரையே மணந்து தூய வாழ்வை வாழத் துடிக்கும் கதை மாந்தராகவும் படைக்கப்பட்டுள்ளாள். பணத்துக்காக ஆண்களிடம் பேசவும் பழகவும் தன்னைத் தூண்டும் அம்மாவை மோகினி வெறுக்கிறாள். அவளின் சிறந்த குணத்தை அறிந்தே சத்தியமூர்த்தி அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறான்.

எளியாரை வலியார் அடிமைப்படுத்தி அவர்களின் இரத்ததை உறிஞ்சி வாழும் பண்ணை அடிமை வாழ்க்கையின் தீமை இந்நாவலில் காட்டப்படுகிறது. மஞ்சள் பட்டி ஜமீந்தார் பெரும் செல்வர். பழைய ஜமீன் பரம்பரையின் பிரதிநிதியாக வரும் அவர் பணபலத்தைக் கொண்டு மோகினியைத் தம்மக்கு அடிமையாக்கி மணமுடிக்க முயலுகிறார். சத்தியமூர்த்தியின் தந்தையைத் தமக்கு எடுபிடியாக்குகிறார். பூபதிக்குப் பின் கல்லூரியைத் தம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சத்தியமூர்த்திக்குக் கொடுதல் செய்கிறார். பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணிய அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.

1960இல் தமிழகத்தில் மொழிப்போராட்டமும் திராவிட எழுச்சியும் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இந்நாவலில் தாய்தமிழைப் போற்ற வேண்டும் என்ற உணர்வு பதிவாகியுள்ளது. பூபதி வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் மற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்ற சத்தியமூர்த்தி தமிழில் பேசி பூபதியின் பாராட்டைப் பெறுகிறான். அதிகப் பணம் ஈட்டக்கூடிய கணக்குத் துறையில் அவன் படித்துப் பட்டம் பெற வேண்டும் எனத் தந்தை எதிர்ப்பார்க்கிறார். ஆனால் சத்தியமூர்த்தியோ தமிழ் மீது மோகங்கொண்டு தமிழில் முதுகலைப்பட்டம் பெறுகிறான்.

தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு வேண்டும் என்ற சிந்தனை நாவலில் பதிவாகியுள்ளது. சத்தியமூர்த்தி தன் உயிர் நண்பனான குமரப்பனிடம் பல வேளைகளில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறான். சத்தியமூர்த்திக்கு மோகினி எழுதிய கடிதங்களை அனுமதியின்றி குமரப்பன் படித்துவிட்டு நண்பனிடம் மன்னிப்புக் கேட்கிறான். தன் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள உயிர் நண்பனுக்கு உரிமையுண்டு என்று சத்தியமூர்த்தி கூறுகிறான். வெளிநாடு செல்லும் சத்தியமூர்த்திக்குப் பண உதவி செய்வதோடு கண்ணாயிரத்திடம் பட்ட கடனையும் அடைக்க உதவுகிறான் குமரப்பன். இருவருமே தூய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.

தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல் மாணவர் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம் தேவை என்ற சிந்தனை நாவலில் வலியுறுத்தப்படுகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியை நடத்த வேண்டும் என்று பூபதி விரும்பினாலும் நிர்வாகக் குறைபாடுகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. சத்தியமூர்த்தி சிறந்த பணிகளால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான். இதைக்கண்டு நிர்வாகத்தினர் அவன் மீது பொறாமைப்படுகின்றனர். உதவி வார்டன் பொறுப்பிலிருந்து அவனை நீக்குவதோடு கல்லூரிக்குத் தீ வைத்ததாக வீண் பழி சுமத்துகின்றனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளைப் புறக்கணிக்கின்றனர்.

மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் தேவை என்ற கருத்து சத்தியமூர்த்தியின் மூலம் வெளிப்படுகிறது. கல்லூரி முதல்வரின் கடுமையான போக்கினால் மாணவன் ராஜாராமன் தன் தேர்வின் தோல்விக்கு அவரைக் காரணங்காட்டிக் கத்தியால் குத்துகிறான். சத்தியமூர்த்தியோ, சிறந்த போதனையாலும் நற்பணிகளாலும் அன்பான அணுகுமுறையாலும் மாணவர்களின் பாராட்டைப் பெறுகிறான். தமிழ் மன்ற விழாவுக்கு நவநீத கவியை வரவழைக்கிறான். மாணவர்களைச் சமூகப்பணியில் ஈடுபடடுத்துகிறான். இரவில் விடுதியை விட்டு வெளியேறும் மாணவர்களை அறிவுரை கூறித் திருத்துகிறான். இதனைக் காரணங்காட்டி கல்லூரி நிர்வாகம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைந்தபோது மாணவர்கள் அவனுக்காகப் போராடத் துணிகிறார்கள்.


அநீதி இழைப்போருக்குத் தண்டனை உறுதி என்ற கருத்தையும் நாவலாசிரியர் முன் வைக்கிறார். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்து, பணமொன்றே குறிக்கோளாகக் கொண்ட மனிதராக கண்ணாயிரம் திகழ்கிறார். புகழுக்காகப் பணத்தை வாரி இறைக்கும் ஜமீந்தார், பூபதி மறைவுக்குப்பின் கல்லூரியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகிறார். ஆயினும் நாவலின் இறுதியில், கள்ள நோட்டுக் கும்பலோடு தொடர்பு இருந்ததால் கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அறவழியைவிட்டு விழகி நடப்போர்க்கு இஃது எச்சரிக்கையாக அமைகிறது.

இலக்கியம் மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் ஆற்றல்மிக்கது. இத்தகையச் சிறப்பையும் சமுதாயச் சிந்தனைகளையும் பொன் விலங்கு நாவலில் காண முடிகிறது. படித்துச் சுவைப்பதோடு அவற்றை அசைபோடவும் அரிய செய்திகளாக விளங்குகின்றன.


ஆக்ககம்: குமாரி ஷோபனா,
தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.

Saturday, November 3, 2012

பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.

வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.
கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.

மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.

 
இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப் போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.

அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.

- நன்றி :புஷ்பவள்ளி சக்திவேல், SMK Taman Selesa Jaya, Skudai, Johor Bahru

Monday, January 30, 2012

யார் தமிழ் படிப்பார் (கவிஞர் பொன்முடி)

யார் தமிழ் படிப்பார்?
(கவிஞர் பொன்முடி, மலேசியா)

தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஓராண் டல்ல ஈராண் டல்ல
ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சோறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் என்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மாணவரே!

Sunday, November 13, 2011

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.


மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார். தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம்.


எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.


மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார். தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று.


பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ‘ஷி வாக்ஸ் இன் பியூட்டி’ என்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.


அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும், இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.


சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார்.


இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ‘ஏய் பூபதி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.


ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டு” என்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார். செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


குமாரி புஷ்பவள்ளி, ஜொகூர், மலேசியா

Tuesday, August 2, 2011

பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...

எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு இலக்கிய வகுப்பு,
தஞ்சோங் ரம்புத்தான் இலக்கியச் சங்கம் நடத்துகிறது
.


எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., தேர்வில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்திட பேராக், ஈப்போ அருகேயுள்ள தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்இலக்கியச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


தம்பூன், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், பெர்ச்சாம் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றனர்.


சங்கங்களின் பதிவிலாக்காவால் முறையாகப்பதிவு பெற்ற சங்கமான, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ் இலக்கியச் சங்கம், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபடுமென்று சங்கப் பொற்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 016-5944528.