Sunday, September 13, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 2

பயிற்சி 2
அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது. (1 புள்ளி)

ஆ. கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரை குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)

ஈ. "வாழ்வை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப்பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது."(அத்தியாயம் 13, பக்கம் 117)

(i) இச்சூழலில் இம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்கு நிலை / படர்கை நோக்கு நிலை (1 புள்ளி)

ஆ. மஞ்சள் பட்டி ஜமீந்தார், கண்ணாயிரம். (2 புள்ளி)

இ. மோகினியை தனைவியாக மனதில் ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறான் நோக்கத்தில் அக்கடித்ததைதக் கிழிக்கிறான். மேலும் பாரதி வீணாக தன் மீது அன்புகொண்டு ஏமாந்து போக்ககூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவள் கண்முன்னே அவள் எழுதுய கடிதங்களைக் கிழித்து வீசுகிறான். (4 புள்ளி)

ஈ.
(i) சத்தியமூர்த்தி, குமரப்பன்(2 புள்ளி)
(ii) மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்ததியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த புறகு மோகினியைச்சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைவதற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ, இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்திக்கு விளக்குகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான். (5 புள்ளி)

(பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1 - நன்றி பகாங் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ்ப் பணித்தியம்)

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு

மோகினியின் பாத்திரப்படைப்பை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாவலுலகில் முடிசூடா மன்னன் மணிவண்ணன் எனும் புனைப்பெயர் கொண்டவர் நா.பார்த்தசாரதி ஆவார். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பல படைப்புகளைப் படைத்து வெற்றி கண்டவர். அவற்றுள், குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், பொன் விலங்கு போன்ற நாவல்கள் தமிழர்களின் நெஞ்சங்களில் தனி ஓர் இடத்தைப் பிடித்த அற்புதப் படைப்புகள். பொன் விலங்கு நாவலில் துணைப்பாத்திரமாகவரும் பொன்னியின் பாத்திரம் தமிழ்ப்பெண்களின் தனிப்பெரும் அடையாளத்தின் சின்னம் என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்; படைத்துக் காட்டியிருக்கிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.

தமிழர்கள் மானத்தைப் பெரிதும் மதிப்பவர்கள். மானம் அவர்களுக்கு உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. அதைத்தான் திருவள்ளுவரும், ஒழுக்கத்தை உயிரினும் மேலானது என்று கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல்,

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

எனும் குறளில், மானம் இழந்த அடுத்த கணமே உயிரை இழப்பவர்கள் தமிழர்கள் அதுவும் குறிப்பாகப் பெண்கள். தமிழரின் இந்தத் தனிப் பெரும் குணத்தைத் திருவள்ளுவர் கவரிமானுக்கு ஒப்பிட்டுக் காட்டியிருப்பத்தை எண்ணிப்பார்த்தவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இந்தத் தத்துவத்தைத் தன் நாவலின்வழி தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டவர். எனவே, பொன் விலங்கு நாவலின் துணைப்பாத்திரமான மோகினியைத் தமிழ் மக்களின் ஒழுக்கத்தின் சான்றாண்மைக்கு உதாரணம் காட்டி உலாவிட்டிருக்கிறார்.

தாசி குலத்தில் பிறந்தவள் மோகினி. அழகுப் பதுமை. ஆடற்கலைகளிலும் இசைக்கலையிலும் தேர்ந்தவள். முத்தழகம்மாளோ குலத்துக்கே உரிய பண்பைப் போற்ற வேண்டும் எனும் நோக்கில் எல்லா ஆண்களோடும் சகஜமாகப் பழக வேண்டும்; ஆடிப்பாடி மயக்கிப் பொருளீட்ட வேண்டும் எனும் போக்கில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மோகினியைப் போகப் பொருளாக்கிப் பொருள் சம்பாதிப்பவள்.

ஆனால், மோகினியோ அதற்குக் கிஞ்சிற்றும்தும் உடன்படாதவளாக, சத்தியமூர்த்தியை மனதார விரும்புபவளாக, ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒப்பற்ற ஒழுக்கத்தைப் போற்றுபவளாக விளங்குகின்றாள். முத்தழகம்மாள் விபத்தில் மரணமடையவே திக்கற்றவளாக நிற்கும் அவளை மஞ்சள்பட்டியார் மோகினியைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொள்ள எண்ணம் கொள்கிறார். கண்ணாயிரத்தின் கபட வேசத்திலும் மஞ்சள்பட்டியாரின் வஞ்சக எண்ணத்திலும் வீழ்ந்து விடாமல் தன் மானத்துக்குப் பங்கம் வரும் வேளைகளில் கட்டுப்பாட்டுடன் கண்ணியம் காத்து நிற்கிறாள் மோகினி. சொல்லொணாத் துயர்வரினும் சத்தியமூர்த்தியையே தன் மனம் கவர்ந்தவனாக வணங்கி நிற்கிறாள். இருப்பினும், மஞ்சள்பட்டியாரின் சூழ்ச்சியில் சிக்குண்ட சத்தியமூர்த்தியே தன்னை வெறுக்கும் நிலைக்கு ஆளானதால் தன் மானத்துக்கு இனி யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனும் இறுதி முடிவுக்கு வந்த மோகினி தூக்க மாத்திரைகளை விழுங்கி தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். எனவே, தமிழ்ப் பெண்கள் உயிரைவிட மானமே பெரிதென நினைக்கும் மாண்புக்குரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரம்தான் மோகினி.

மேலும், தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரக் காப்பியத்தின் முதன்மைக் கருத்தாகத் திகழும் 'கற்புடைய மங்கையரைத் தேவரும் முனிவரும் போற்றுவர்' என்னும் கருத்தையும் வலியுறுத்தவே மோகினி எனும் பாத்திரத்தைப் பார்த்தசாரதி படைத்திருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில், மாதவியும் தாசி குலப் பெண்தான். மாதவியின் தாயாரோ மாதவியைப் பயன்படுத்தி பெருஞ்செல்வந்தனான கோவலனின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். பின்னர், கோவலனோ கொலையுண்டு போகிறான். மாதவியோ, கோவலனையே தன் கணவனாக ஏற்றிப் போற்றிய காரணத்தால், கோவலன் மாண்டான் எனக் கேள்விப்பட்டதும் தன் அழகிய கோலத்தைத் துறந்து துறவியானாள்; கற்பின் செல்வியாகி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தாள் என்பது நாம் அறிந்த வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் தன் நாவலில் நம் கண்முன் மோகினியின் பாத்திரப்படைப்பின்வழி நமக்கு காட்டுகிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.

தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் தமிழ்க்குலப் பெண்ணான மோகினியும் தன் அம்மா முத்தழகம்மாள் தன்னைப் பணம் காய்க்கும் பெண்ணாகவும் ஆண்களின் அடிமைப் பொருளாகவும் பாவித்துப் பொருள் ஈட்டுபவள். பிறப்பாலும் வளர்ப்பாலும் தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் மோகினி தூய்மையானவளாக ஒழுக்கத்தில் ஒப்பற்றவளாகத் திகழ்கின்றாள்; தன்மானத்துக்கு எள்ளளவேனும் இழுக்கு நேராத இயல்பினளாக விளங்குகின்றாள்.

அவள், தன் உயிரைக் காப்பாற்றிய சத்தியமூர்த்தியயே மனத்தளவில் கணவனாகப் போற்றி வாழ்கிறாள். ஒரு சூழலில் தான் தொழும் சத்தியமூர்த்தியும் தன் கற்பைப் பற்றி சந்தேகப்படும் நிலை வரும்போது தான் மானத்தோடு வாழ்பவள் என நிரூபித்துவிட்டுதான் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்தாலும் மனம் வைத்தால் கற்புடைய பெண்ணாகத் திகழ்ந்து மாநிலம் போற்றும் உத்தமி என்ற பேர் எடுக்க முடியும், நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும், குப்பை மேட்டிலும் குன்றிமணி தோன்றும் என்னும் தத்துவத்தை வலியுறுத்திக் காட்டுவதற்காகவே நா. பார்த்தசாரதி மோகினியின் பாத்திரத்தைப் படைத்தளித்திருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல், ஒளவையாரின் மூதுரையில் குறிப்பிட்டுள்ள 'குலத்தளவே ஆகும் குணம்' எனும் கருத்துக்கு உடன்படாதவறாகவும் இருக்கிறார். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தரங்கெட்டவர்கள் எனும் கருத்தை மறுக்கும் வகையிலும் மோகினியின் பாத்திரத்தை நாவலாசிரியர் படைத்துள்ளார். தாசி குலத்தில் பிறந்த மோகினியும் குலத்தொழில்தான் செய்ய வேண்டும் எனும் சமுதாயத்தின் கோணல் கோட்பாட்டைத் தகர்தெரியும் நோக்கில் தாசி குலத்தில் பிறந்த மோகினியைத் தூய்மையின் அடையாளமாக் காட்டி பெண்குலத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்.

எனவே, வள்ளுவரும் இளங்கோவும் வடித்துக்காட்டிய தமிழ்ப்பெண்களின் சான்றாமைச் சின்னமே மோகினியின் பாத்திரப்படைப்பு என்பது தெளிவு.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்- நன்றி

Monday, May 18, 2009

தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 1

பயிற்சி 1
அ. பொன் விலங்கு நாவலின் முதன்மைக் கதைமாந்தர் யார்? (1 புள்ளி)

ஆ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு உத்திகளைக் குறிப்பிடுக. (2 புள்ளி)

இ. கல்லூரி நிர்வாகி, மஞ்சள் பட்டி ஜமீந்தார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தியை பழிவாங்க முனைந்ததற்கான காரணம் என்ன? (4 புள்ளி)

ஈ. "நீ ஏன் இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசன் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன் குத்துக்கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கலியாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு."(அத்தியாயம் ,பக்கம் 274)

(i) இந்த உரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)

மாதிரி விடை

அ. சத்தியமூர்த்தி (1 புள்ளி)

ஆ. பின்நோக்கு உத்தி, கடித உத்தி. (2 புள்ளி)

இ. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளராக வரிவதைத் தொடக்கத்திலிருந்தே கல்லூரி முதல்வர் விரும்பவில்லை. பின்னர், சத்தியமூர்த்தி சிறந்த போதனையால் மாணவரிடையே நன்மதிப்பு பெறுவது கல்லூரி நிர்வாகிக்குப் பொறாமையைத் தருகிறது. அவர் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தார். ஜமீந்தார் மோகினியைத் தாரமாக்க நினைத்தார். சத்தியமூர்த்தி அதற்குத் தடையாக இருந்தான். பாராட்டு நிகழ்வில் சத்தியமூர்த்தி ஜமீந்தாரைப் பாராட்டாமல் வெளியேறியது ஜமீந்தாருக்குக் கோபம். எனவே, இருவரும் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகின்றனர். (4 புள்ளி)

ஈ.
(i) மோகினி, முத்தழகம்மாள் (2 புள்ளி)
(ii) சத்தியூர்த்தியின் பிரிவு மோகினிக்கு வேதனையைத் தருகிறது. தன் கையில் அவன் தந்த மோதிரத்தோடும் நெஞ்சில் வேதனையோடும் இருக்கிறாள். அப்பொழுது கண்ணாயிரம் தனவணிகர் ஒருவரை அழைத்து வருகிறார். தனவணிகர் வீட்டுத் திருமணத்தில் மோகினியின் நாட்டியத்தை ஏற்பாடு செய்ய கண்ணாயிரம் முயற்சி செய்கிறார். மோகினிக்கு அவருடன் பேச விருப்பம் இல்லை. எனவே, கோயிலுக்குப் போய் வருகிறாள். தலைவலி என்ற சாக்குச் சொல்லி மாடிக்குப் போகிறாள். அவ்வேளையில் மோகினியின் அம்மா அவர்களுடன் பேசும்படி வற்புறுத்துகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது. (5 புள்ளி)

(இதனை அனுப்பி உதவியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்)

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - பொன் விலங்கு நாவல் கூறும் படிப்பினை

பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.


நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.

வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கயே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.

கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.

மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப்போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.

அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Monday, May 4, 2009

நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 2)

'நீ உயர' எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கின்றாய் என்று விளக்கி எழுதுக.

அருந்தமிழ் கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுவின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த 'நீ உயர' எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமையும் எனும் உன்னத கருத்தினை மையமிட்டு இக்கவிதைப் புனையப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் சளையாது போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தானும் உயரத் துடிக்கும் ஓர் இளையனைப் பார்த்து கவிஞர் முதலில் ஆரவமர உட்கார்ந்து கொஞ்சம் சிந்திக்குமாறு வேண்டுகிறார். வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டிய துடுப்பு உள்ளமே எனக் கூறும் கவிஞர் முதலில் அவ்வுள்ளத்தை ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்துகிறார். 'எண்ணம்தான் நம்மை ஆள்கிறது' என்ற உளவியல் ஆய்வாளரின் கருத்துப்படியே கவிஞரின் பேனா முனையும் கோலமிட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையில் குளத்தில் உள்ள தாமரைச் செடி குளத்தின் நீர் அளவுக்கு உயர்ந்து நிற்கும்; நீர் வற்றினால் தாமரைச் செடி அழியும்; புது வெள்ளத்தில் அது மீண்டும் தழைத்து வளரும். அதுபோலவே 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்ற பொய்யாமொழிப் புலவரின் அமுதவாக்கினைக் கருத்தில் கொண்டு உள்ளம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் என்கிறார். மேலும், அத்தகைய உயர்வினைப் பெறுவதற்குத் திருக்குறள் உதவும் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். மாந்தனின் வாழ்க்கை உயர்விற்குத் திருக்குறள் பெரும் பயனை விளைவிக்கும் அரிய நூலாக விளங்குகிறது என்பதனை நமக்கு உணர வைத்துள்ளார்.

தொடர்ந்து, "எண்ணம், சொல், செயல்" ஆகிய மூன்றிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும் என்று கவிஞர் விளக்கியுள்ளார். அதற்கு எதிர்மாறாக வஞ்சக எண்ணம் கொண்டு சுயநலத்துடனும் பொறாமை குணத்துடனும் வாழ்ந்தால் இந்த உலகவே நம்மை வெறுக்கும் என்ற உண்மையினையும் கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, நாம் உள்ளத்தில் விதைக்கும் எண்ண விதைகளே பின்னர் செயலாக முளைக்கின்றன என்று உள்ளத்தை விளைநிலமாக கவிஞர் உருவகப்படுத்தியுள்ளார். அத்தகைய விளைநிலத்தில் நல்ல எண்ணங்களை விதைக்காமல் போனால் அது பயன்றற பள்ளம் போன்று ஆகிவிடும் என்று நினைவுறுத்துகிறார். காலம் எனும் ஆழியில் மூழ்கிவிடாமல் மனிதன் புகழுடம்புடன் வாழ வேண்டுமெனில் தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை உள்ளத்தில் பதியமிட வேண்டும் என்பதானது சிந்தனைக்கு விருந்தாகிறது.

இறுதியாக, விதைக்கப்பட்டதே முளைக்கும் என்ற மறுக்க முடியாத இயற்கையின் விதியைப் புரிந்து கொண்டு நாம் முரணான வழிகளைக் கைவிட்டு நல்ல மனப்போக்கைக் கொண்டிருந்தால் நமக்கு உலகமும் வாழ்க்கையும் புதியனவாக விளங்கும் என்ற கருத்தினையும் கவிஞர் நமக்குப் பரிமாறியுள்ளார். புதிய உதயத்தை நோக்கி எழுச்சியுடன் நடைபயில வருமாறு கவிஞர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். எனினும், அறிவுரைகள் மட்டும் பல ஆயிரம் குவிந்து அதைக் கேட்டுத் திருந்தும் மனம் இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமென்பது திண்ணம்.

ஆகவே, நாம் சுவற்றில் எறியும் பந்து நம்மை நோக்கிய திரும்பி வருவது போல, ஒருவரின் செயலுக்கு அடிப்படையாக அமைவது அவரின் எண்ணமே என்பது ஆன்றோரின் அமுத வாக்காகும், இதனை நாம் சிந்தையில் தெளிந்து வாழ்வில் வெற்றிக் கனிகளைக் கொய்ய வேண்டுமென்பதே கவிஞரின் ஆவா.


(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Tuesday, April 28, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 4

கடந்த இரு வாங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, பெருஞ்சேரலாதன்

(ii) சோழ நாட்டின் வெண்ணிப் பறந்தலை ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேர நாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்பை ஏற்று அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார். சேர நாட்டின் இயற்கை அழகை இரசித்துக் கொண்டு காட்டு வழியே வரும் வேளையில், குதிரையில் சிலர் ஏறி வருவதைக் காண்கிறார்கள். வருபவர்கள் கள்வர்கள் என அஞ்சி மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை வெளியே அழைத்து விசாரிக்கின்றனர் மாறுவேடத்தில் வந்த பெருஞ்சேரலாதனும் அவன் அமைச்சரும். வெளியே வரும் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். தங்களைக் கள்வர்கள் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 4

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நாம்தான் நச்சுக் கடலிலேயே நீந்தி விளையாடிக் கொண்டிருப்பவர்களாயிற்றே, அப்படியிருக்க அவன் வைக்கும் ஒரு துளி நஞ்சுக்காகவா நான் அச்சப்பட போகிறேன்."
((காவிய நாயகி - காட்சி 40 - பக்கம் 116)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த பின் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



Friday, April 10, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 3

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொன்னி, சேரனின் மெய்க்காவல் வீரன்

(ii) போரே இல்லாத உலகைக்கான விரும்பும் பொன்னியின் கவிதையைப் படித்து மகிழ்கிறார் மருதவாணர். அப்பொழுது சந்தைக்குப் போக பொன்னி தந்தையை அழைக்கிறாள். சேர நாட்டுப் படைகளும் சோழநாட்டுப் படைகளும் போருக்குத் தயாராகி விட்டதால் வெளியில் போக வேண்டாமென மருதவாணர் தடுக்கிறார். ஆயினும், அன்னை மண்ணைக் கவர படையெடுத்து வந்த சேர மன்னனைச் சந்தித்து வசைப்பாடப் போவதாகச் சொல்லி பொன்னி போர்களத்தை நோக்கிச் செல்கிறாள். மன்னரைத் தடுக்க முடியாது என்று வீரன் ஒருவன் பொன்னியைத் தடுக்கின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."
(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணி

காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணியை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

"காவிய நாயகி" இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நாடகமாகும். இந்நாடகம் பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மையமாகக்கொண்டது. இந்நாடகத்தின் கதையோட்டத்திற்கு இடப்பின்னணி அவசியமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

காவிய நாயகி நாடகத்தில் முக்கிய இடப்பின்னணியாகத் திகழ்வது சோழநாடும் சேரநாடும் ஆகும். பொன்னி சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டுக்கு அறுவடைத் திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். பொன்னியின் அழகும் கவியாற்றலும் பெருஞ்சேரலாதனின் மனதைக் கவர்கிறது. இவ்வகையில் இந்நாடகம் சோழ நாட்டையும் சேரநாட்டையும் தொடர்பு படுத்துகிறது.

இதனைத் தவிர்த்து, வெண்ணிப் பறந்தலை போர்க்களமும் முக்கிய இடப் பின்னணியாகத் திகழ்கிறது. சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து புறமுதுகையும் சென்றடைந்தது. புறமுதுகில் காயம் ஏற்பட்டதால் கோழை எனப் பிறர் கருதுவர் என்றெண்ணி வடக்கிருந்து உயிர் நீத்தான் பெருஞ்சேரலாதன். அதற்கு முன் அங்கு வந்த பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னி பிறந்து வளர்ந்த ஊரான வெண்ணிப்பறந்தலையிலேயே பொன்னியின் திருமணம் நடந்தேறுவதோடு அவள் கணவனின் உயிரும் பிரிகிறது.

கரிகாலனின் அரசவையும் ஒரு முக்கியக் களமாக உருவெடுத்துள்ளது. தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு பொன்னி கரிகாலனின் அரசவைக்குக் கவிபாடச் சென்றாள். 'நின்னினும் நல்லவனன்றே' என்று பெருஞ்சேரலாதனை உயர்த்திப் பாடும் வஞ்சப் புகழ்ச்சிப் பாடலினால் அரசவையினர் பொங்கி எழுகின்றனர். அவளுக்குத் தக்க தண்டனை வழங்குமாற் கரிகாலனை வேண்டுகின்றனர். ஆனால், கரிகாலன் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடிவெடுக்கிறான். பொன்னியின் இரண்டாம் மூன்றாம் விசாரனையும் இங்குதான் நடந்தேறுகிறது.

இந்தக் களங்கதளைத் தவிர்த்து, விருந்தினர் விடுதியும் முக்கிய இடப்பின்னணியாக விளங்குகிறது. பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடமான விருந்ததினர் விடுதியில் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. இங்குதான் காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட கூட்டுச்சதி அரங்கேறுகிறது. உதாரணமாகப் பொன்னிக்கு விஷம் வைத்துக் கொல்ல கார்கோடனை ஏவுகின்றனர். பினர், துறவியைக் கொல்ல வேங்கையனையும் பணிக்கின்றனர். ஆனால், கரிகாலனின் மதிநுட்பம் இச்சதித்திட்டங்களைத் தகர்த்தெறிகிறது. சதிதிட்டங்களைத் தவிர்த்து, பொன்னி ஏன் கவிபாட வந்தாள்? என்ற கூற்றுக்கும் கரிகாலனுக்கு இங்குதான் விடை கிடைக்கிறது.

இக்களங்களைத் தவிர்த்து, வான மண்டலம் இந்நாடகத்தின் முதல் காட்சியாகவும் இறுதி காட்சியாகவும் இடம் பெற்று இந்நாடகத்திற்கும் மேலும் மெருகூட்டுகிறது. வானமண்ட்டலத்தில் பொன்னி பெருஞ்சேரலாதனைத் தேடி அலைவதாக முதல் காட்சி துன்பியலை உணரத்துகிறது. இறுதி காட்சியோ பொன்னி தன் காதலன் பெருஞ்சேரலாதனுடன் இணைந்து கைக்கோர்த்து மேகங்களின் மேல் நடந்து செல்வதாக இன்பியலில் முடிவுறுகிறது.

எனவே, காவிய நாயகி நாடகத்திற்குச் சிறந்த கதைக்களத்தைக் கொடுத்து, காதலும் வீரமும் என்ற மையக்கருவிற்கு வலு சேர்த்துள்ளார் கலைமாமணி இரா.பழனிசாமி. கதைக்களத்தின் தேர்ந்தெடுப்பு இந்நாடகத்தை மேலும் சுவாரசியப் படுத்தியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Thursday, April 2, 2009

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 2

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1


(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்."
(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) வேண்மாள், கரிகாலன்

(ii) கரிகாலனின் அரசாட்சியைக் கவிழ்க்க நீண்ட காலமாகவே சதித்திட்டம் தீட்டிவரும் காளிங்கராயர் பொன்னியை ஒரு கருவியாகப் பயன்படுத்த திட்டமிடுகிறார். அவ்வகையில் இரும்பிடர்த்தலையாரைச் சந்தித்து பொன்னிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர தூபமிடுகின்றார். அதன் பொருட்டு கரிகாலனைச் சந்திக்கும் இரும்பிடர்த்தலையார் பொன்னியை சேரநாட்டின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் கூறி விரைந்து தண்டிக்குமாறு பணிகிறார். ஆனால், கொள்கையில் உறுதி கொண்ட கரிகாலன் தீர விசாரித்தே தீர்ப்பு வழங்குவேன் எனத் தீர்க்கமாகக் கூறுகின்ற சூழலில் மேற்கண்ட கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"
(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?


(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?


(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி



நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் சிறப்பு

காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் பெருஞ்சேரலாதனின் சிறப்புகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.

நாடகாசிரியர் கலைமாமணி இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்துள்ள காவிய நாயகி எனும் வரலாற்று நாடகத்தில் துணைக்கதைமாந்தராக வலம் வருகிறான் பொருஞ்சேரலாதன். சேரநாட்டின் மன்னனும் இமயவரம்பின் வழித்தோன்றலுமான பெருஞ்சேரலாதன் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்ட ஓர் மன்னனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

சேரநாட்டின் மாமன்னன் பெருஞ்சேரலாதன் தன்மானம் மிக்கவன். வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வாள் முதுகுக்குப் பின் வெளியே வந்து புறப்புண்ணை ஏற்படுத்தி விடுகிறதது. "புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்கிறான் சேரன்" என மக்கள் அவனைப் பழித்துப் பேசுவார்களே என்று எண்ணுகிறான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போலத் தன்மானத்திற்கு இழுக்கு நேர்ந்த பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இது சேர மன்னனின் தன்மானத்தை வெளிப்படுத்துவதோடு அவனது வீரத்திற்கும் இலக்கணமாகத் திகழ்கிறது.

மேலும், பெருஞ்சேரலாதன் காதலை மதிக்கும் நற்பண்பினனாகவும் திகழ்கிறான். சேர நாட்டின் மன்னனாக இருப்பினும் சாதாரண மண்வினைக் கலைஞர் மகளான பொன்னியின் மீது ஆழ்ந்த காதல் கொள்கிறான். குலத்தைச் சுட்டிக் காட்டி, இவ்வுறவு பொருந்துமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் கேள்வி எழுப்பும் பொழுது உண்மை அன்பு சாதி, மத பேதத்திற்கு அப்பாற்பட்டது என தனது காதலின் மாண்பைப் புலப்படுத்துகிறான். அவளையே மணக்க சித்தமாகவுள்ளான்.

அத்துடன், மக்கள் நலனைப் போற்றும் சிறந்த வேந்தனாகவும் பெருஞ்சேரலாதன் விளங்குகிறான். மாறுவேடம் பூண்டு தன் அமைச்சருடன் சிற்றூர்வரை சென்று அங்கு மக்களின் அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்தை அறிகிறான். மேலும், தன் ஆட்சியில் மக்கள் குறைவில்லாமல் வாழ வேண்டும் என அரசாட்சி புரிகிறான். ஏழைகள், கல்லாதவர்கள், கள்வர்கள் தன்னாட்சியில் இருக்கக்கூடாது எனப் பாடுபடும் சிறந்த மன்னனாகத் திகழ்கிறான்.

இதனைத் தவிர்த்து, பெருஞ்சேரலாதன் தமிழ்ப்பற்று கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். சிற்றூரில் நடைபெறும் அறுவடைத் திருநாளைக் கண்டு களிக்கச் செல்லும் வழியில் மக்கள் பேசுகின்ற மொழியில் மொழிக்கலப்பு இருப்பதைக் கண்டு அமைச்சரோடு உரையாடுகிறான். வடமொழி மந்திரமொழியாகவும் தமிழை உயிர் காக்கும் மொழியாகவும் வளர்க்க வேண்டுமெனக் கூறுகிறான்.

பெருஞ்சேரலாதன் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் சிறந்த பண்பையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஓர் ஆண்டிற்குள் பொன்னியைப் பெண் கேட்டு வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். அவ்வகையில் தான் இறக்கும் தருவாயிலும், மருதவாணர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டுத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பிறகே உயிர் துறக்கிறான்.

இதுமட்டுமல்லாது, வாரி வழங்கும் வள்ளலாகவும் பெருஞ்சேரலாதன் திகழ்கிறான். மக்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அறுவடைத் திருநாளான ஆவணித் திருவோணத்தை முன்னிட்டு நாள்தோறும் தான் துயிலெழ இனிமையாகப் பாடும் பாணர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் பொற்காசுகளும், அரண்மனை வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பரிசளிக்கவும் அமைச்சருக்கு உத்தரவிடுகிறான்.

ஆகவே, துணைக் கதைமாந்தராகச் சேரன் பெருஞ்சேரலாதன் படைக்கப்பட்டிருந்தாலும் காவிய நாயகியாக வலம் வரும் பொன்னிக்கு இவன்தான் நாயகன்; தன்மான நாயகன்.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Thursday, March 26, 2009

நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு

மோகினியின் பாதிரப்படைப்பை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இதில் துணைக்கதைப்பாத்திரமாக வலம் வரும் மோகினி கதையின் திருப்புமுனைக்கும் நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றிப் பெறச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளாள்.

தாசி குலத்தில் பிறந்து, பணத்தாசைமிக்க தாய் முத்தழகம்மாளின் பிடியில் வாழும் பெண்ணாக நாவலாசிரியர் மோகினியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். வீணை வாசிப்பதிலும் பரதக் கலையிலும் உயர்ந்த கலைத்திறனை மோகினி கொண்டிருக்கிறாள். ‘சேற்றில் முளைத்த செந்தாமரை போல’ கணிகையர் குலப் பொண்ணாக இருந்தாலும் தூய்மையையும் ஒழுக்கத்தையுமே உயிர்மூச்சாகக் கொள்ளும் பெண்ணாக மோகினி படைக்கப்பட்டுள்ளாள். எந்நிலையிலும் தன் கற்பு நெறிக்குக் களங்கம் வரா வண்ணம் தன்னத் தற்காத்துக்கொள்கிறாள். ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதி கொண்ட மோகினி ஜமீந்தாரின் தீய நோக்கத்திற்கு இணங்காமல், இறுதியில் தன் கற்புக்காகவே உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மோகினி மாதவியைப் போல கற்புக்கரசியாகவே மிளிர்கிறாள்.

மேலும், பொருட்செல்வத்திற்கும் பகட்டுக்கும் மயங்காத பொண்ணாக நாவலாசிரியர் மோகினியைப் படைத்துள்ளார். கணாயிரத்துடன் கூட்டுச்சேர்ந்து அவளது அம்மா முத்தழகம்மாள் தனது பணத்தாசையில் போகினியின் அழகையும் கலைத்திறனையும் மூலதனமாக வைத்து நடனம், விளம்ரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழுகுதல் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறாள். ஆனால், மோகினியோ பண்பாடுக்கு முரணான செயலைச் செய்ய என்றுமே இசையவில்லை. உதாரணமாகக் கூந்தல் தைல விளம்பரத்தின் போது மெல்லிய சேலை அணிய வற்புறுத்தப்பட்டபோது அதை வீசி எறிந்து தனது மறுப்பை வெளிப்படுத்துகிறாள். கிஞ்சிற்றும் பணத்தாசை இல்லாத மோகினியின் இப்பண்பே மஞ்சள் பட்டி ஜமீந்தார் போன்ற பணக்காரர்களின் உறவை வெறுக்கத் தூண்டுகிறது.

இதனைத் தவிர்த்து, தூய்மையான காதலைக் கொண்ட பெண்ணாகவும் மோகினி படைக்கபட்டுள்ளாள். பொருளுக்காக காதலை விலைபேசும் இவ்வுலகில் தனது ஆட்படுத்தும் அன்பினால் சத்தியமூர்த்தியின் மனதில் நித்திய சுமங்கலியாகவே வாழும் பேறு பெற்றாள். “நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும் அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்” என்ற மோகினியின் கூற்று வெறும் வாய்ஜாலமாக அல்லாமல் தன் கற்புக்கு ஜமீந்தாரால் களங்கம் வரும் வேளையில் உயிரையே மாய்த்துக் கொள்ளும்போதுதான் எத்தகைய ஆழமான அன்பின் வெளிபாடு என்பதை நாவலாசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கும் சத்தியமூர்த்திக்கு மோகினி சளைத்தாவள் அல்ல என்பதை அவளது பாத்திரப்படைப்பின் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம். கலைத்துறையில் தரமான படைப்புகளைக் கொடுத்துதப் புகழ் எய்தவே மோகினி மனக்கோட்டை கட்டுகிறாள். எனவேதான் குத்துவிளக்கு பத்திரிக்கைக்கான பேட்டியின்போது “என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும்” என்றாள்.

அத்துடன், திடமான மனப்பான்மையும் மோகினியிடத்தில் காணமுடிகிறது. சத்தியமூர்த்திதான் தன் கணவன் என்பதில் இறுதிவரை மாறாத கொள்கை கொண்டதிலிருந்து அவள் எடுக்கின்ற முடிவில் உறுதியாக இருப்பதை மெய்ப்பிக்கின்றது. காதலில் மென்மை கொண்டவளாக இருப்பினும் கற்பைக்காப்பதில் வன்மையும் மன உறுதியும் மிக்கவளாகத் திகழ்கிறாள். ‘யானையின் வாயில் அகப்பட்ட கரும்பு போல’ கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார் ஆகியோரின் பிடியில் கூண்டுக் கிளியாய் இருந்தபொழுதும் அவர்களது சதிக்கும் வஞ்சகத்திற்கும் அடிபணிய வில்லை. தனது கற்பைக் காக்கும் நோக்கில் கண்ணாயிரத்தை எதிர்க்கவும் துணிகிறாள்.

இதுமட்டுல்லாமல், கலையைத் தெய்வமாக மதிப்பவளாகவும் மோகினி படைகப்பட்டுள்ளாள். அவள் கலைய வியாபாரப் பொருளாகக் கருதவில்லை. விளம்பரத்திற்கும், தனவணிகர் திருமண நிகழ்விற்கும் அவளது கலையை முத்தழகம்மாள் பயன்படுத்துவதை விரும்பாதவளாக இருக்கிறாள். இதன் காரணமாகவே இருவருக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படுகிறது. "நா ஒண்ணும் தெருக் கூத்துப் படிச்சுக்கலை.... இது சரசுவதியோட இலட்சணம்" என்ற மோகினியின் கூற்று இதனைப் புலப்படுத்துகிறது.

ஆகவே, குலம் தாழ்ந்தாலும் குணத்தில் உயர்ந்து நின்று ஒழுக்கத்தையே உயிரெனக் கொண்டு வாழ்ந்த மோகினி போராட்ட வாழ்வின் கொடுமை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். சத்திமூர்த்தி என்றுமே அவளை மறக்க முடியா வண்ணம் தனது அன்பைப் பொன் விலங்காக அணிவித்த அதே வேளையில் வாசகர் நெஞ்சிலும் என்றும் மறக்க முடியாத பொண்ணாக அவள் நிச்சயம் நிலைத்து நிற்பாள் என்பது திண்ணம்.



(மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii தொடர்பான பயிற்சி 1

இலக்கியக் கேள்வித் தாளில் பாகம் I-ல் பிரிவு இரண்டு காவிய நாடகம் ஆகும். இதில் நான்கு கேள்விகள் கேட்கப்படும். அதில் (ஈ) i-வது கேள்வி கொடுக்கப்பட்ட உரையாடலில் இடம்பெற்ற கதைமாந்தர்களையும், (ஈ)ii -வது கேள்வி அவ்வுரையாடலுக்கு முன் அல்லது பின் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து எழுத வேண்டும். பெரும்பாலும் மாணவர்கள் இச்சூழலை விவரித்து எழுதுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஆகவே அதன் தொடர்பான சில பயிற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


பாகம் I: பிரிவு இரண்டு (நாடகம்)
(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"இதுவரை நம் காதலுக்காக வாழ்ந்த நீ, இனிமேல் நீ கற்ற தமிழுக்காக வாழ வேண்டும். அந்தத் தங்கத் தமிழால், 'உன் கணவன் மானங்காக்க உயிர் நீத்தான்' என்று நம் பகைவரும் அறியும் படி பாடவேண்டும்."
(காவிய நாயகி - காட்சி 37 - பக்கம் 111)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?

மாதிரி விடை

(i) பொருஞ்சேரலாதன், பொன்னி

(ii) வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெரிஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகுக்கு வெளியே வந்து புறப்புண் ஏற்படுத்துகிறது. தன் தன்மானத்துக்கு இழுக்கு நேரிட்டதாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் துறக்க போர்க்களத்திலேயே அமர்ந்திருக்கிறான். விபரம் அறிந்து அங்கு ஓடிவரும் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மருதவாணர் முன்னிலையில் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னியும் அவனுடனேயே வடக்கிருந்து உயிர் விட்டு மறுமையிலும் துணையாக வர எத்தனிக்கும் பொழுது அதற்கு மறுமொழிகூறுகின்ற சூழலில் இக்கூற்று வெளிப்படுகிறது.

பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1

(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்."
(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)

(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?

(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?



(மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி

Monday, March 23, 2009

நாவல் (நீண்ட கேள்வி)- சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரின் நட்பு

சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரும் நட்புக்கு இலக்கணம். சான்றுகளுடன் விளக்குக.

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகின் தனிப்பெரும் படைப்பாளராகத் திகழ்ந்தவர் புலவர் நா.பா. என்று செல்லமாக அழைக்கப்பட்ட நா.பார்த்தசாரதி அவர்கள். சத்திய வெள்ளம், குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள் போன்றவை இவரது சிறந்த படைப்புகளுள் சில. இவர் கைவண்ணத்தில் கருவாகி உருவான பொன்விலங்கு எனும் சமூக நாவல் உயர்ந்த இலட்சியங்களும் சிறந்த கொள்கைகளும் கொண்ட சத்தியமூர்த்தி எதிர்கொள்ளும் சவால்களைச் சித்திரிக்கிறது. இதில் வரும் சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரும் நட்புக்கு இலக்கணமாகப் படைக்கப்பட்ட இரு கதைப்பாத்திரங்கள் ஆவர்.

மனித வாழ்க்கையில் நமது இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் கருத்துகளை மனம் திறந்து பரிமாறிக்கொள்ளவும் சிற்சில வேளைகளில் தவறு நேரும்போது நட்பின்காரணமாக இடித்துரைக்கவும் தோழர்கள் தேவை. அவ்வகையில், சத்தியமூர்த்தியும் குமரப்பனும் மணிக்கு ஒத்த ஒலியென விலங்கும் அருமை நண்பர்களாக இந்நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை உலா வருகிறார்கள்.

சத்தியமூர்த்தி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுபவன். முற்போக்குச் சிந்தனையாளனான அவன் அவனது கொள்கைக்கு ஒத்த குமரப்பனை நண்பனாகக் கொண்டிருக்கிறான். குமரப்பனோ சத்தியமூர்த்தியைபோல் ஏட்டறிவு குறைவானவனாக இருந்தாலும் சிந்தனையிலும் செயலிலும் உழைப்பிலும் சத்தியமூர்த்திக்கு எந்தவிதத்திலும் சளைத்தவன் அல்லாதவனாகத் திகழ்கிறான். சத்தியமூர்த்தியே அவனை ‘சர்வகலாசாலை’ எனப் போற்றப்படுபவன். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உரிமைப் பாராட்டிப் பழகிவருவதை இந்நாவலில் பரக்கக் காணலாம்.

குமரப்பனும் சத்தியமூர்த்தியும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிக்கவும் புகழவும் விரும்பாதவர்கள். தங்கள் மனத்தில் தோன்றிய எண்ணங்களை மறைக்காது கூறும் இயல்பைக் கொண்டவர்கள். பக்தி எனும் கவசத்தைக் கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் போலி மனிதர்களைச் சாடுகின்றனர். மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் ஆணைக்கு ஏவல் புரியும் கண்ணாயிரம் செய்யும் அக்கிரமங்களை வெறுக்கின்றனர். பல இடங்களில் இவர்கள் நட்புக்கு இலகணமாகப் பரிணமிக்கின்றனர்.

சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தலில் வேலைக்கு மனுப்போட்டிருப்பதை அறிந்த குமரப்பன், உள்ளூரிலேயே வேலை பார்த்தால் சிக்கனமாக இருக்க முடியும் என்கிறான். மேலும், மல்லிகைப்பந்தல் போன்ற இடங்களில் வாழ்க்கைச் செலவுகளும் சாப்பாட்டுச் செலவுக்குமே அதிகம் செலவிட நேரிடும் என்று யோசனை கூறுகிறான் குமரப்பன்.

மல்லிகைப்பந்தலில் தனக்கு வேலை கிடைத்த செய்தியைக் குமரப்பனுக்குத் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி. அதைக்கேட்ட குமரப்பன் அளவில்லா மகிழ்ச்சியடைகிறான். குமரப்பனும் அவனது மற்ற நண்பர்களும் சத்தியமூர்த்திக்கு விருந்துவைத்து வழியனுப்புகிறார்கள். அப்போது, மல்லிகைப் பந்தலுக்குச் சென்றவுடன் கல்லூரி வேலையோடு உயர்கல்வி கற்றுத் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அன்புக்கட்டளையிடுகிறான்.

ஒருமுறை குத்துவிளக்குப் பத்திரிகைக்காகக் கண்ணாயிரத்தோடு மோகினியைப் பேட்டிக் கண்டுவரும் வாய்ப்புக் குமரப்பனுக்குக் கிடைக்கிறது. அப்போது, மோகினியின் திறமைக்கும் புகழுக்கும் கண்ணாயிரமும் ஜமீந்தாரும்தான் காரணம் என்று முத்தழகம்மாள் சொல்கிறாள். அதை மறுத்த மே¡கினி தன் பாட்டியும் தன் குருவும்தான் காரணம் என்று அவர்கள் முகத்தில் கரிபூசும் விதமாகச் சொல்கிற¡ள். அங்கு நடந்த சம்பவத்தைக் குமரப்பன் படத்தோடு இணைத்து மோகினியின் புனிதத்தையும் விளக்கி நண்பனுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதி சத்தியமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.

மோகினி சாலை விபத்தில் சிக்குண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தகவலைக் குமரப்பன் சத்தியமூர்த்திக்குத் தெரிவிக்கிறான். இருவரும் மோகினியைக் காண மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அங்குக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் வருகின்றனர். ஜமீந்தாரின் கண்காணிப்பில் இருந்துவரும் மாகினியை எப்படிச் சத்தியமூர்த்தி பார்க்கமுடியும் என்று வம்பளக்கிற¡ர் கண்ணாயிரம். சத்தியமூர்த்தியை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு கூற நண்பனுக்காகக் குமரப்பன் கண்ணாயிரத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.

குத்துவிளக்குப் பத்திரிகையிலிருந்து விலகிய குமரப்பன், மல்லிகைப்பந்தலுக்குச் செல்கிறான். சில நாள் வேலை இல்லாதவனாகச் சத்தியமூர்த்தியின் அறையில் தங்குகிறான். அப்போது பொழுதுபோகாததால் சத்தியமூர்த்தியின் பெட்டியிலிருந்து ஏதாவது புத்தகம் எடுத்துப் படிக்கலாம் என்று திறந்தபோது, மோகினி சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தைப் படித்து விடுகிறான். நண்பனுக்கு வந்த கடிதத்தைப் படிக்க நேர்ந்ததை மூடி மறைக்காமல் சத்தியமூர்த்தியிடமும் சொல்லி அதற்காக மன்னிப்பும் கோருகிறான். தன் அந்தரங்க இரகசியங்கள் தன் ஆருயிர் நண்பன் தெரிந்துகொள்வதில் தவறில்லை என்பதை சத்தியமூர்த்தியும் உணர்ந்து உண்மையை ஒளிவு மறைவில்லாமல் தெரிவிக்கிறான். அதற்காகக் குமரப்பனை மன்னிக்கவேண்டிய அளவுக்குத் தவறேதும் செய்யவில்லை என்றும் கூறுகிறான்.

அதுபோக, குமரப்பன் சத்தியமூர்த்தியோடு தங்கியிருந்ததற்கான செலவை ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட தொகையை செலவுக்காகத் தருகிறான். சத்தியமூர்த்தி அவ்வாறு செய்வது தவறு எனவும் அதை வாங்கவும் மறுக்கிறான். ஆனால், நியாயத்தையும் நண்பனின் உண்மை நிலையையும் எடுத்துச் சொல்லி சத்தியமூர்த்தியைப் பெற்றுக் கொள்ளச் சொல்கிறான். நண்பனின் பொருளியல் நிலையை அறிந்து நடந்துகொள்ளும் பண்பு இருவரிடமும் இருப்பதை நன்கு விளக்கப்படுகிறது.

பூபதி இறப்பிற்குப் பிறகு மஞ்சள்பட்டியார் கல்லூரி நிருவாகத்தைக் கவனித்து வருகிறார். ஏற்கனவே சத்தியமூர்த்திமீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் ஜமீந்தார் சதித்திட்டம் தீட்டி, சைக்கிள் ஷெட்டுக்குத் தீவைத்துக் கலகம் மூட்டி விடுகிறார். இக்கலகத்துக்குக் காரணம் சத்தியமூர்த்திதான் என்று குற்றம் சாட்டப்படுகிறான். அவனைக் கைது செய்வதற்காக வருகிறார் காவல் அதிகாரி. அதனைக் கேள்விபட்ட குமரப்பன், சத்தியமூர்த்திக்காக விளக்கமளிக்கிறான்; வாதாடுகிறான். இருப்பினும் காவலதிகாரி அவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பனுக்கு நேர்ந்த இந்த அவலத்தைப் போக்க உடனே ஜாமீன் பெற குமரப்பன் காவல்நிலையத்துக்குச் சென்று சத்தியமூர்த்தியை ஜாமீனில் வெளியே கொண்டுவருகிறான்.

இவ்வளவில், குமரப்பனும் சத்தியமூர்த்தியும் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொள்ளும் நல்ல நண்பர்களாக இந்நாவலில் இருப்பதைக் காணமுடிகிறது.



(மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் திரு.இளந்தமிழ், கோலாலும்பூர்)- நன்றி

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 4

பகுதி 3-இன் தொடர்ச்சி

மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்த மறுதினம் பாரதியிடம் நாட்டியம் மற்றும் வீணையைக் கற்கும்படி ஜமீந்தார் வற்புறுத்தினார். பாரதி நாட்டியம் பயிலும் நிலையில் இல்லை. மோகினியும் அதைக் கற்பிக்கும் நிலையில் இல்லை. மோகினி “தன்னுடைய கலையுணர்வு செத்துவிட்டதாகக் கூறுகிறாள். யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக்கொண்டிருக்கிறது” என்று மேலும் கூறினாள். பாரதி மோகினியிடம் சத்தியமூர்த்தி கல்லூரியில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறுகிறாள். கார் டிரைவர் வாயிலாகக் கணக்குப் பிள்ளை தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதையும் தெரிந்து கொள்கிறாள்.

சத்தியமூர்த்தி அவன் தந்தையிடம், “நியாயம் கிடைக்கும் வரை சும்மா விடமாட்டேன்” என்று கூறுகிறான். தன்பேச்சைக் கேட்கவில்லை என்கிற கோபத்தில் தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று கூறி வெளியேறுகிறார் அவனுடைய
அப்பா. தன்னுடைய தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சகவலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்தான்.

கடைவீதியில் பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் ஜமீந்தாரைப் பின்பற்றி தொடர்ந்து மோகினியும் காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். இதைக் கண்ட சத்தியமூர்த்தி நடைதளர்ந்து நின்று விடுகிறான். நண்பன் குமரப்பனும் அப்படியே திகைத்துப் போய் நண்பனுக்கு அருகில் நின்று விட்டான். மோகினியின் கண்களில் அழுகையும், கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. மோகினியும் சத்தியமூர்த்தியைப் பார்த்து விடுகிறாள். அதே சமயம் ஜமீந்தார் அவளை உள்ளே வழுக்கட்டாயமாக அழைத்துப் போய்விடுகிறார். சத்தியமூர்த்திக்கு அவள் இப்படி பயந்து ஒடுங்குவதை நினைத்து உள்ளம் குமுறுகிறது. “மோகினிக்காக அனுதாபப்பட வேண்டிய சத்தியமூர்த்தி இப்படி கோபப்படுவது முறையல்ல” என்கிறான் குமரப்பன். தானும் உணர்ச்சியால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி.

கலெக்டரும், மாவட்டப் பெரிய போலிஸ் அதிகாரியும் (DSP) ஜமீந்தார் மாளிகையில் தங்காது, அரசாங்க விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டனர். செய்தியறிந்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் முதல்வரின் திறமையின்மை குறித்து அவரிடம் வருத்தப்பட்டுக்கொள்கின்னர்.

முதல்வர் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெறவோ, சோபிக்கவோ முடியாமல் போனதற்கு காரணம் கொள்கை இல்லாத படிப்பு தான் என்று உணர்கிறார். வேரில்லாமல் ஊன்றிய செடி சிறிது காலம் பசுமையாய் தோன்றி விரைவில் பட்டுப் பாய் விடுவது போல முதல்வரின் நிலைமை இருந்தது.

ஜமீந்தாரின் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோல்வியைச் சந்தித்தன. வந்திருக்கிற கலெக்டர் நேர்மையும், முற்போக்கு மனநிலயும் உடையவர் என்றும் செல்வாக்கையோ, உபசாரங்களைச் செலவழித்தோ ஒன்றும் நெகிழச் செய்து விட முடியாது என்பது உண்மையாகிவிட்டதை அறிகின்றார் ஜமீந்தார்.

ஜமீந்தாரும், கண்ணாயிரமும் மற்றும் கல்லூரி முதல்வரும் கலெக்டரைப் பார்க்க அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். அவர்களை மறுநாள் கல்லூரியில் சந்திப்பதாகக் கூறிவிடுகிறார் கலெக்டர்.

மறுநாள் கலெக்டரும், போலிஸ் அதிகாரியும் கல்லூரியை சுற்றிப் பார்த்தனர். மாணவர்கள் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசினர். சத்தியமூர்த்திதான் ஹாஸ்டலுக்கு நெருப்பு வைத்ததாகச் சாட்சி கூறியவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் போலிஸாருக்குப் பயந்து உண்மையைக் கூறிவிட்டனர். கடைசியாக முதல்வரைக் கூப்பிட்டு விசாரிக்க, அவரும் மென்று விழுங்கினார். கலெக்டரும் போலிஸ் அதிகாரியும் முதல்வருக்கு அறிவுரை கூறினர். முதல்வருக்கு தலைகுனியும்படியான நிலைமை ஏற்பட்டது.

“சத்தியமூர்த்தி தன்னுடைய முந்நாள் மாணவன்” என்கிறார் கலெக்டர். “அவனுக்குப் பொய் பேசத் தெரியாது, உண்மைக்காக முரண்டும் பிடிவாதமும் செய்கிறவன், அவனைப் போல் தங்கமான மாணவனைத் தான் பார்த்ததில்லை, உங்களுக்கும் நிர்வாகிக்கும் பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கிறீர்கள்” என்று முதல்வர் மனதில் படும்படி கூறினார். பொறுப்புள்ள முதல்வராகக் கல்லூரியை நடத்துங்கள் என்கிறார். “கல்லூரியின் நல்ல பெயரையும், சம்பந்தப்பட்டவர்களின் கௌரவத்தையும் முன்னிட்டு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறோம்” என்றார். நடந்தவற்றை ஜமீந்தாரிடம் தெரிவிக்கச் சென்ற முதல்வரிடம், கண்ணாயிரம் ஏதோ கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, “கல்லூரியை எப்படி நடத்துவது என்று நீங்கள் சொல்லித் தர வேண்டாம், வாயை மூடுங்கள்” என்று முதல்வர் கடுமையாகக் கூறினார்.

அதே தினத்தன்று சத்தியமூர்த்தியை அழைத்த கலெக்டர் அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார். “மதுரை வந்தால் வீட்டிற்குக் கண்டிப்பாக வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு புறப்பட்டார்.

இதற்கிடையே மோகினியிடம் “சத்தியமூர்த்திக்கு வந்த பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்ந்தது” என்கிறாள் பாரதி. செய்தியறிந்த மோகினியும் மகிழ்வடைகிறாள். மோகினி பாரதியிடம் கடிதம் ஒன்றை கொடுத்து, “சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்குமாறு” கேட்டுக் கொள்கிறாள். தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும், ஏமாற்றத்தயும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல், மிகவும் சமார்த்தியமாக நடித்து விடுகிறாள் பாரதி. தன்னுடைய மகிழ்ச்சி மறுபுறம் பாரதியின் மௌனத்திற்கும், கலக்கத்திற்கும் காரணம் என்பதை மோகினி புரிந்து கொள்ளவில்லை.

மோகினி எழுதிய கடிதத்தைப் படிக்கிறாள். மோகினிக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பும், அன்பும் இருப்பதைக் கடிதம் பாரதிக்குச் சொல்லி விட்டது. “நான் வாழ்ந்து உங்கள நினைக்க வேண்டும் அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்” என்று மோகினி எழுதியிருந்தாள். மோகினி பெற்ற பாக்கியம் எதுவோ, அதுவே தான் இழந்து கொண்டிருக்கும் பாக்கியம் என்று அவள் மேல் பொறாமை வருகிறது.

கடிதத்தை சத்தியமூர்த்தியிடம் கொடுத்த பாரதி அழுது கொண்டே அங்கிருந்து போய்விடுகிறாள். அவள் எதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று சத்தியமூர்த்திக்குத் தெளிவாக புரிந்திருந்தும், ஒன்றும் தெரியாதது போல நடிக்க வேண்டியிருந்தது.

பாரதி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானாள். மோகினி அவளை தாய் அருமை மகளைக் கவனிப்பது போல் இரவு பகலாய்த் தூக்கம் விழித்து பணிவிடை செய்கிறாள். மோகினியின் மிக உயர்ந்த பண்பைத் தெரிந்து கொள்கிறாள் பாரதி. எங்கள் குடும்பம் என்றோ ஜமீந்தார் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் ஜமீந்தாரிடம் உள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சி கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கோ இருப்பதை நீ தெரிந்து கொண்டிருப்பாய்” என்கிறாள்.இதற்கிடையே சத்தியமூர்த்தி பாரதியின் உடல் நலம் விசாரிக்க பாரதியின் வீட்டிற்கு வருவதாகக் கூறியிருந்தான்.

ஜமீந்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்குக் காப்பி கொண்டு வந்து கொடுக்கிறாள் மோகினி. அதே வேளையில் அங்கே வந்த சத்தியமூர்த்தி, மோகினி ஜமீந்தாருக்குப் பணிவிடை செய்வதாக எண்ணிக் கொண்டு, எரித்து விடுவதைப் போல அவளைப் பார்க்கிறான். மோகினியோ அவனைக் கண்டு நடுங்குகிறாள். அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

உள் கூடத்தில் மோகினி மாலையும் கழுத்துமாக ஜமீந்தாருடன் மணமக்களைப் போல் நிற்கும் பெரிய படத்தைக் காண்கிறான். பாரதியைப் பார்க்க அவள் அறைக்குப் போய் விடுகிறான் சத்தியமூர்த்தி. அவனுக்கு அவசர அவசரமாகக் காப்பியைக் கலக்கி கொண்டு வந்து அவனிடம் நீட்டுகிறாள். “உபசாரம் ஜமீந்தாருக்குச் செய்யுங்கள்” என்று கூறி ஆத்திரத்தோடு வெளியேறிவிடுகிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மோகினியின் படத்தையும் ஜமீந்தாரின் படத்தையும் இணைத்து ஒன்றாகத் தோன்றுவது போல செய்தது கண்ணாயிரத்தின் வேலை என்று பாரதி அறிகிறாள். கண்ணாயிரத்தின் செய்கை மோகினிக்குத் துரதிஷ்டமாக மாறிவிட்டதை எண்ணி பாரதி வருந்துகிறாள்.

மோகினியைக் கடிதம் ஒன்று எழுதுமாறு கேட்கிறாள் பாரதி. அதனைத் தோழியின் மூலம் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கச் சொல்கிறாள். சத்தியமூர்த்தி மதுரைக்குப் போய் விட்டதாகத் தோழி கூறவே, அக்கடிதத்தை விரைவு தபாலில் மதுரைக்கு அனுப்புகிறாள். கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் அப்பாவிடம் ஒப்படைக்கிறார் தபால்காரர். அவர் அதைக் கிழித்து அடுப்பில் போட்டு விடுகிறார்.

“என்மேல் உயிரையே வைத்து வாழ்கிறாள் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய பேதமை? ஜமீந்தாருக்கும் இவளுக்கும் திருமணம் நடந்திராவிட்டால் இப்படி மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்து மாட்ட வேறு சந்தர்ப்பம் ஏது?” என்று எண்ணுகிறான். கலெக்டர் அவனை உடனே மதுரை வரும்படி அனுப்பியிருந்த தந்தியைக் கண்டான். கல்லூரிக்கு விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய பிறகு மதுரைக்குப் புறப்பட்டு விடுகிறான்.

ஜெர்மன் தேசத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பயில விண்ணப்பித்திருந்த அவன நேர்முகத் தேர்விற்கு வரும்படி கடிதம் வந்துள்ளதாகக் கூறிய கலெக்டர் அவன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அனைத்து உதவிகளும் செய்கிறார். தேர்வில் வெற்றியும் அடைகிறான்.

சத்தியமூர்த்திக்கு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயில இடம் கிடைக்கிறது. அவனுக்குக் கல்லூரியில் பிரிவுபசார விருந்து நடைபெறுகிறது. சத்தியமூர்த்தியிடம் உண்மை நிலைமயை எடுத்துக்கூற பாரதி எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிகிறது. சத்தியமூர்த்தி மதுரை திரும்புகிறான். என்றாவது ஒருநாள் இந்தக் கூண்டிலிருந்து விடுபட்டுப் போய் அவருடன் வாழலாம் என்று எண்ணியிருந்த மோகினியின் நம்பிக்கையும் சரிந்தது.

அன்றிரவு பாரதிக்கு ஒரு கடிதமும், சத்தியமூர்த்திக்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். பாரதிக்கு எழுதிய கடிதத்தில் தான் அவருடைய மனைவியாகத்தான் சாவதாகவும், அவருடைய மனைவி என்ற பரிசுத்தத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படுவதற்கு முன் உலகிலிருந்து போவதாக எழுதியிருந்தாள். மோகினி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

மோகினி சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை டிரைவரிடம் கொடுத்து மதுரைக்குச் சென்று சத்தியமூர்த்தியை உடனே அழைத்து வரும்படி கூறுகிறாள் பாரதி. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலை வந்தடைந்தான். உண்மையறிந்து குமுறிக்குமுறி அழுகிறான் சத்தியமூர்த்தி. மயானத்தில் அந்த வேளையில் பின்னால் வந்து நிற்கிற காலடியோசை கேட்டு அவன் திரும்புகிறான். பாரதி அழுது கொண்டே, “அக்காள் தெய்வப்பிறவி” என்கிறாள். “தனக்கு மோகினி அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை” என்கிறான்.

“மோகினியை மறக்க முடியாது. நான் மறக்க முடியாதபடி என்கையில் ஒரு பொன் விலங்கு போட்டு பிணைத்துவிட்டாள். எனக்கு ஏற்கனவே மணமாகி, அந்த மணத்துக்கு நாயகியைப் பறிகொடுத்துவிட்டேன் என்ற ஞாபகம் கையிலிருந்து பிரித்தெடுக்க முடியாத; இந்த மோதிரம் உள்ளவரை மாறாது” என்கிறான்.

“எந்த நட்டுக்குச் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் முடிந்தால் மறுபடியும் எங்கள் கல்லூரிக்கு வாருங்கள். நீங்கள் என்று வந்தாலும் உங்கள் மாணவியாகவே நான் உங்களை வரவேற்பேன்” என்று கூறி அவன் பாதங்களை வணங்கினாள்.

“மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று மோகினி கூறுவது போல பிரமை வந்து அவன் கண்களை நனைத்தது. சலங்கை ஒலி எங்கோ கேட்டது.விமானத்தில் ஏறியவன் பக்கத்தில் இருப்பவர் பேச்சுக் கொடுக்காமலிருக்க நவநீத கவியின் “மானசீக நினைவுகள்” என்ற புத்தகத்தைத் திறந்தான். அவனுடைய மனம் அவளுடைய கோயில். அவளுக்கு மட்டுமே சொந்தமான கோயில்.



(நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட இக்கதைச்சுருக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் ஆசிரியர் திரு.வடிவேலு வைத்திலிங்கம், லூனாஸ் இடைநிலைப்பள்ளி, லூனாஸ், கெடா) - நன்றி

Sunday, March 22, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 3

பகுதி 2-இன் தொடர்ச்சி

சத்தியமூர்த்தியைப் பார்த்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அவனைக் கண்களாலேயே துளைத்தெடுத்தனர். மஞ்சள் பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்கள் ஆடம்பர ஏற்பாடுகள் செய்துகொண்டு பழைய வீராப்புடன் இருப்பதை எண்ணி மனம் நோகிறான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியை வரவேற்ற பூபதி, ஜம£ந்தாரை அறிமுகப்படுத்தினார். அவரைப் பெரிய கலா ரசிகர் என்றும், தமிழபிமானி என்றும் கூறுகிறார். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்.

ஜமீந்தாரைத் தமிழபிமானி என்று பூபதி குறிப்பிட்டதை எண்ணி உள்ளுரப் பரிதாபப்பட்டான். சத்தியமூர்த்தி, தனக்கு அடுத்து மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் முக்கியமானவர் என்பதற்காகவாவது அவரைத் (ஜமீந்தாரைத்) தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். சத்தியமூர்த்தியின் தந்தை அந்த வீட்டில் அவர்களுடைய ஏவலுக்குக் கைகட்டி நின்றது அவனுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. சத்தியமூர்த்தியின் தந்தையை வேலை வாங்குவதன் மூலம் தன்னை அவமானப்படுத்துவதை உணர முடிகிறது.
பூபதியை “ஏய்” என்று ஏகவசனத்தில் ஜமீந்தார் அழைத்ததிலிருந்து அவர்களின் நெருக்கத்தை அறிந்து திகைத்துப் போகிறான் சத்தியமூர்த்தி. “தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமே ஜமீந்தார் தான்” என்றும் “மல்லிகைப் பந்தல் கல்லூரி நிலம் முழுவதுமே ஜமீந்தாரால் இலவசமாக வழங்கப்பட்டது” என்றும் கூறுகிறார். பூபதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி.

“சமூகத்தில் உள்ள பலர் அவர்களிடம் இருக்கும் நியாயமான தகுதிகளுக்காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு சிலரோ இல்லாத தகுதிகளுக்கெல்லாம் சேர்த்து புகழப்படுகிறார்கள்” என்று மனம் குமுறுகிறான் சத்தியமூர்த்தி.

பூபதி சத்தியமூர்த்தியிடம் மெதுவாக, “தனக்குப் பிறந்த நாள் வருவதாகவும், அனைத்து ஏற்பாடுகளுக்கும் பொறுப்பைச் சத்தியமூர்த்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார். புகழுக்கும் பெருமைக்கும் அடிமையானவராக பூபதியும் இருப்பதை எண்ணி அவரைப் புரிந்து கொள்ளத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. தர்மத்தையும் பக்தியையும் பற்றி அடிக்கடி பேசுவதன் மூலமாக மட்டுமே தங்களைப் புற உலகிற்கு நல்லவர்களாகக் காண்பிக்கும் கூட்டத்தில் பூபதியும் ஒருவர் என்று சத்தியமூர்த்தி தெரிந்து கொள்கிறான். அவரைப் பார்க்கவே அருவருப்பாகவும் கூச்சமாகவும் இருந்தது.

தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிருபித்துக்கொண்டாலே போதும் என்ற ஆசை பூபதியிடமும் உள்ளது ஜமீந்தாரைத் தாராளமாகப் புகழ்கிறார். கண்ணாயிரத்தையே அதிபுத்திசாலி என்கிறார். மனம் புழுங்குகிறது சத்தியமூர்த்திக்கு.

மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று மோகினியைப் பார்க்கிறான். மோகினி அவனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். காலையில் அவள் கருங்கூந்தலை அவிழ்த்து கோதிக்கொண்டிருக்கின்றாள். சத்த¢யமூர்த்தியைக் கண்டவுடன் கைகளுக்கு அடங்காத கூந்தலைச் சுற்றிக் கொண்டை போடுகிறாள். சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவள் இன்னும் அழகாகத் தோன்றுகிறாள். “அவளுடைய அழகை வர்ணிக்க தான் கவிஞனாக இல்லையே” என்று கேலி செய்கிறான் சத்தியமூர்த்தி. “தனக்கு அந்த உரிமை இல்லையா” என்று கேட்க, “எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு” என்கிறாள் மோகினி. தாயாரின் பிரிவை எண்ணி கண்கலங்கிய போது, “அவளுடைய கண்ணீரைத் துடைப்பதற்குத் தன்னுடைய கைகள் எப்போதும் தயாராக இருக்கும்” என்கிறான்.

சத்தியமூர்த்தி அவளிடம் வசந்த சேனை சாருதத்தன் கதையைச் கூறுகிறான். வசந்த சேனை கணிகையர் குலத்தைச் சார்ந்தவள். பணக்காரி. சாருதத்தனோ பிறருக்குக் கொடுத்துக் கொடுத்தே ஏழை ஆனவன். அவன் மீது ஆழ்ந்த காதல் வயப்படுகிறாள் வசந்த சேனை. அவனோ திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையாக உள்ளவன். இளம் கணிகையான வசந்த சேனை அவனை விரும்புகிறான். சாருதத்தனிடம் மனதைப் பறிகொடுத்த அவள் அவனுடன் மானசீகமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். சகாரன் என்ற காமுகன் வசந்த சேனையைத் துரத்த அவள் சாருதத்தன் வீட்டில் அடைக்கலம் புகுகிறாள். சாருதத்தன் மகன் தெருவில் மண்வண்டி வைத்து விளையாடுக¢றான். அவனுடைய ஏழ்மையைக் காணப் பொறுக்காது தன்னுடைய பொன்நகைகளைக் கழற்றி அந்த மண்வண்டியில் வைக்கிறாள் வசந்த சேனை.

உலகம் நிரந்தரமாக பழித்துக்கூறும் ஒரு பகுதியைச் சேர்ந்த (கணிகையர் / தாசி குலம்) அழகிய பெண்களிடையேயிருந்து தான் வசந்த சேனை, மாதவி, மணிமேகலை, மோகினி, போன்றோர் தோன்றியிருக்கின்றனர் என்று கதையை முடிக்கிறான் சத்தியமூர்த்தி.

“சாருதத்தனும், கோவலனும் தங்கள் காதலியரைச் சாக முயல்வதிலிருந்து காப்பாற்றவில்லை. ஆனால் சத்தியமூர்த்தியோ தன்னைச் சாவிலிருந்து காப்பாற்றியவர்” என்கிறாள் மோகினி.

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் பூபதி, பாரதி, கண்ணாயிரம் மற்றும் ஜமீந்தாரும் மோக¢னியின் அறைக்கு வருகிறார்கள். பூபதி சத்திய மூர்த்தியைப் பார்த்து திகைப்போடு “நீங்கள் இங்கே எப்படி?” என்று வினவினார். தனக்கு மோகினியைத் தெரியும் என்றும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து பார்க்க வந்ததாகப் பூபதியிடம் தயங்காமல், தெளிவாகவும், பொறுமையாகவும் கூறினான். பின்னர் அங்கிருந்து வெளியேறுகிறான்.

மோகினியைப் பற்றி வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை மிகப் பெருமையாகக் கூறுகிறார். “மோகினியை யாராவது குறைசொன்னால் நாக்கு அழுகிவிடும், மகா உத்தமி அவள். கள்ளங்கபடு தெரியாத மனசு. இங்கு பிறந்து கஷ்டங்களை அனுபவிக்கிறாள். ஜமீந்தார் அவளை அடைய சுற்றிக் கொண்டிருக்கிறார். என்ன ஆகுமோ இந்தப் பெண்ணின் நிலை?” என்று கூறி முடிக்கிறார்.

மறுநாள் மருத்துவமனைக்குச் சென்ற சத்தியமூர்த்தியிடம், “மோகினியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்” என்று தாதி கூறுகிறார். மஞ்சள் பட்டி ஜமீந்தார் மோகினியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார் என்ற உண்மையை அறிகிறான் சத்தியமூர்த்தி. அவள்மேல் கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று குழம்பினான் சத்தியமூர்த்தி.

பூபதி பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதாக வானொலியில் செய்தி கேட்கிறான். இடிவிழுந்தாற் போல் ஒலித்தது இந்தச் செய்தி. “மனித வாழ்க்கை எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாததாகவும், அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்று மனம் வருந்துகிறான்.

விமானத்துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்கிறான். பூபதியின் பெயர் மாண்டவர்கள் பட்டியலில் உள்ளதை அறிகிறான். பாரதி இந்தப் பேரிடியை எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று மனம் துடிக்கிறது. பலரிடம் இல்லாத சில நிறைவான நல்ல குணங்கள் பூபதியிடம் இருந்ததை அவனால் மறந்துவிட முடியவில்லை. பலருக்கு நிழல் தந்த ஆலமரத்தில் இடி விழுந்தது போல் இருந்தது அவரது மரணம். தன்னை அன்போடு வரவேற்று, விருந்தாளியைப் போல உபசரித்து பெருந்தன்மையுடன் பழகியது, ஆங்கிலக் கவிதை விளக்கவுரையைக் கேட்டு மனதாரப் பாராட்டியது, உதவி வார்டனாக நியமித்து பெருமைப்பட்ட பூபதி, பாராட்டப்பட வேண்டியவர் தான் என்று எண்ணுகிறான். பாரதியைக் காண ஜமீந்தார் மாளிகைக்குச் செல்கிறான். அங்கு யாருமே இல்லை. தோட்டக்காரன் மூலம் மோகினி அங்கு அனுபவிக்கும் துன்பங்களை அறிகிறான். அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைப்பட்டு அழுது கொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான் சத்தியமூர்த்தி.

“நான் விரும்பியா இந்த நரகத்திற்கு வந்தேன்? எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை. கௌரவமான இந்தச் சிறையிலிருந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வரத் தயார். பின்னர் நானே உங்களுக்குப் பரிய தளையாகிவிடுவேன். ஜமீந்தார் ஆட்கள் உங்களை கருவருக்கத் துரத்துவர்.

என் கலையை உலகம் அங்கீகரிக்கும். என் பிறப்பை அங்கீகரிக்குமா?” என்கிறாள் சத்தியமூர்த்தியைப் பார்த்து.

“உங்களைத் தவிர இன்னொருவர் இந்தக் கைகளைத் தொடுகிற போது என்னுடைய உடம்பில் உயிர் இருக்காது” என்கிறாள் மோகினி.

“நீங்கள் என்னை வாழவைப்பீர்கள். ஆனால் அப்படி முன்வருகிற உங்களை உலகமும் மற்றவர்களும் வாழ விட மாட்டார்கள்” என்கிறாள்.

இந்தப் பேதையின் இதயத்தில் எவ்வளவு உறுதியான அங்கீகாரம் நிரம்பியிருக்கிறது. “தான் அவனுடைய மனைவி” என்று சொல்லிக் கொள்வதிலேயே இவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய சகலவிதமான திருப்திகளும் கிடைத்து விடுவதாகப் பாவனை புரிய முடியுமானால் இது எவ்வளவு உயர்ந்த காதலாக இருக்க முடியும் என்று
வியப்படைகிறான்.

அவளுடைய மங்கள நினைவு வீண் போகாது என்று ஆறுதல் கூறுகிறான். மோகினியை நன்றாக வாழ வைக்க விரும்புவதாகவும், ஆனால் தற்போது அதைச் செய்ய முடியாத பலவீனனாக இருப்பதாகக் கூறுகிறான். உண்மைதான் தன்னுடைய பலம் என்கிறான். ஆன¡ல் அதுவே தற்போது தன்னுடைய பலவீனமாக இருப்பதாகக் கூறுகிறாள். “தன்னுடைய மனோ பலத்தினால் வெற்றி பெற நீண்ட நாட்களாகும். அதுவரை அவளுக்குப் பொறுமையும், தைரியமும் இருந்தால், இந்த உலகில் எங்காவது, என்றாவது ஒரு நாள் கணவன் மனைவியாக ஊரறிய மணந்து வாழலாம்” என்கிறான். “தானும் அந்த நம்பிக்கையுடன் வாழ்வதாகக் கூறுகிறாள்” மோகினி. “தனக்குத் துயரமும், துயரச் சொற்களுமே பொழுது போக்காயிருக்கின்றன” என்கிறாள் மோகினி.

அவ்வேளை அங்கு வந்த சத்தியமூர்த்தியின் அப்பா, அவனை எரித்து விடுவது போல பார்வை பார்த்து காறித்துப்புகிறார். அங்கிருந்து வேதனையுடன் புறப்படுகிறான். சத்தியமுர்த்தி மோகினியைச் சந்தித்த சூழ்நிலையின் சோகங்களில் அவன் மனம் அழுந்திப் போயிருந்தது. மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான் சத்தியமூர்த்தி.

குமரப்பனிடம், “பெரிய மனிதர்களிலும், பணக்காரர்களிலும் கொஞ்சம் விதிவிலக்காய் இருந்த ஒரே நல்ல மனிதரும் இறந்து விட்டாரே” என்கிறான் சத்தியமூர்த்தி. “இந்த ஊரே மங்கலம் இழந்து விட்டாற் போல் தோன்றுவதாக” குமரப்பன் கூறுகிறான். பூபதியின் மரணம் மல்லிகைப் பந்தல் நகரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருந்தது. எங்கு திரும்பினாலும் அவருடைய மரணத்தைப் பற்றியும், விமான விபத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தனர்.

பூபதியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் முறையில் கல்லூரிக்கு விடுமுறை விட்டார்கள். மாணவர்கள் கருப்புத் துணி பேட்ஜ் (badge) அணிந்து துக்க ஊர்வலம் நடத்தினர். பூபதியின் மரணத்தை முன்னிட்டு நடந்த அனுதாபக் கூட்டத்தில் தான் மனமுருகிப் பேசியதை வம்புக்காரர்கள் புதுப் புது அர்த்தம் கற்பித்துப் பேசியதை எண்ணி வருந்தினான். அறைக்கு திரும்பிய சத்தியமூர்த்தி, குமரப்பனிடம் மதுரையில் நடந்தவற்றைப் பற்றிய விபரங்களைக் கூறுகிறான். “கடைசியில் கிளியைப் பிடித்து கூட்டில் அடைத்தே விட்டார்கள” என்கிறான் குமரப்பன். மறுநாள் கல்லூரியில் பூபதியின் மரணம் தொடர்பாக பாரதியிடம் தனிப்பட்ட முறை பேச எண்ணியிருந்தான் சத்தியமூர்த்தி. ஆனால் சூழ்நிலை அதற்குச் சாதகமாக இல்லை.

மாலையில் கல்லூரி அலுவலகத்தில் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மஞ்சள் பட்டி ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவரானார். இது சத்தியமூர்த்திக்குக் கவலையும், கசப்பையும் ஏற்படுத்தியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குப் பாராட்டுவிழா நடைபெறுகிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்டி அவர் தலைவராக வந்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார் முதல்வர். சத்தியமூர்த்தி அங்கிருந்து வெளியேறி விடுகிறான்.

மஞ்சள்பட்டி ஜமீந்தாரை “அவமானப் படுத்தவே சத்தியமூர்த்தி வெளியேறிவிட்டான்” என்று முதல்வர் கோபம் கொண்டிருந்தார். ஜமீந்தாரின் உள்ளம் கொதித்தது. முதல்வரும், துணை முதல்வரும் இதற்கு மேலும் தூபம் போட்டனர்.

லேக் கார்டனில் தனிமையில் அமர்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. அவன் மனம் அவனைப் பாராட்டியது. ஜமீந்தாரால் தனக்கு நிறைய தொல்லைகள் வரும் என்று அவன் மனம் கூறியது. ஜமீந்தார் கல்லூரி தலைவரான செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவிவிடுகிறது. சத்தியமூர்த்தியின் மேல் அன்பு கொண்ட மாணவர்கள், புதிய நிர்வாகத்தினர் மீது சத்தியமூர்த்தி மனம் வருந்தியிருப்பான் என்று உணர்கின்றனர்.

“பாராட்டு விருந்தில் தமிழில் நாலு வார்த்தைகள் பேசவே தடுமாறினார் ஜமீந்தார்” என்று சுந்தரரேசன் கூறினார்.

“பெரிய மனிதன் என்றால் தாய் மொழியில் நாலு வாக்கியமாவது தப்பாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். நமது ஜமீந்தாரோ மிகப் பெரிய மனிதர். தாய்மொழியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி தன்னுடைய வெறுப்பை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்க வேண்டாம், என்று சுந்தரேசன் கூறுகிறார். மேலும் அவர் “ரகசியமான பகையும், பகிரங்கமான உறவும் இன்றைய வாழ்வில் சமார்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்” என்கிறார். “இதை சத்தியமூர்த்தி புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது” என்கிறார்.

மறுநாள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, முதல்வர் அழைப்பதாகக் கல்லூரி ஊழியன் அழைத்தான். “வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வர முடியாது” என்று அனுப்பிவிடுகிறான். வகுப்பு முடிந்ததும் முதல்வர் அனுப்பிய கடிதம் ஒன்றை ஊழியன் கொடுக்கிறான். விருந்தின் நடுவே வெளியேறிய காரணம் குறித்தும், தான் அழைத்த போது உடனே வராததற்கும் கீழ்ப்படியாமை என்றும் எழுதப்பட்டிருந்தது. “ஒவ்வொரு மனிதனும் அவனது புத்திக்கும் அகங்காரத்திற்கும் ஏற்றவாறு பிறரை அடக்கியாள விரும்புவதை உணர்கிறான். தான் சொல்வதைய மற்றவர் சொல்ல வேண்டும், தான் செய்வதையே மற்றவர் செய்ய வேண்டும், என்றும் தன்னைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும்” என்கிற தொத்து வியாதி அதிக அளவில் பரவி வருவதைப் பார்க்கிறான்.

அவனுக்கும் புதிய நிர்வாகிக்கும் உறவு சுமூகமில்லாததைக் கல்லூரியில் பணி புரிவோர் அறிகின்றனர். அவனிடம் பழகிய ஆசிரியர்கள் கூட பேசவும், சிரிக்கவும் பயந்து மெல்ல விலகிச் சென்றார்கள். சத்தியமூர்த்திக்கும் முதல்வருக்கும் தகராறு. நியாயம் நிச்சயம் சத்தியமூர்த்தியின் பக்கம் இருக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பினர். பூபதி உயிரோடு இருந்தவரையில் தன்மேல் வெறும் பொறாமையோடு இருந்தவர்கள் எல்லோரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக்கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்கும் புரிந்தது. முதல்வர் அறைக்குச் சென்ற சத்தியமூர்த்தியிடம், “தான் அழைத்த போது உடனே வராதது அவனது திமிரைக் காட்டுவதாகக்” குறிப்பிட்டார் முதல்வர். “வகுப்பைப் பாதியிலேயே நிறுத்தி வர முதல்வர் கைப்பட கடிதம் அனுப்பியிருந்தால் உடனே வந்திருப்பேன்” என்கிறான். தன்னை என்ன செய்திருக்க வேண்டும் என்று கூற அவன் யார்? என முதல்வர் கோபமுடன் வினவினார். “தான் அவரை மதிக்கவும், வணங்கவும், தலைவராக ஏற்றுக் கொள்ளவும் குறைந்தபட்ச தகுதிகளாவது அவரிடம் இருக்க வேண்டும்” என்று சத்தியமூர்த்தி கூறுகிறான்.

அவனை முதல்வர் வலுக்கட்டாயமாக உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கினார். புதிய நிர்வாகியின் கட்டளை என்கிறார் முதல்வர். “இதை அப்படியே கல்லூரி நோட்டிஸ் போர்டில் எழுதி தொங்க விட்டு விடுங்களேன்” என்று முகத்திலடித்தாற் போல் கூறி அறையை விட்டு வெளியேறுகிறான். மாணவர்களிடையே முதல்வரும், நிர்வாகியும் சத்தியமூர்த்திக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பரவி விட்டது. அதன் விளைவு இருந்தாற்போலிருந்து பெரிதாக விசுவரூபம் எடுத்தது. விடுதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். சத்தியமூர்த்தியை மறுபடியும் உதவி வார்டனாக நியமிக்க வேண்டுமென்பது மாணவர்களின் கோரிக்கையாய் இருந்தது. சத்தியமூர்த்தியின் வகுப்பைத் தவிர மற்ற எல்லா ஆசிரியர்களின் வகுப்பையும் சேதம் செய்தனர். முதல்வர் மாணவர்களைப் பலவழிகளில் மிரட்டியும் பலன் இல்லாது போயிற்று. சத்தியமூர்த்தியால் மாணவர்களின் இந்த விதமான குமுறலையும் கொந்தளிப்பையும் தடுக்க நினைத்தாலும் முடியவில்லை.

மாணவர்கள் நியாயத்திற்குப் போர¡டுகிறார்கள். அவர்களைத் தடுத்தால், முதல்வர் செய்தது நியாயம் என்று ஒப்புக்கொள்வது போலாகும், என்றெண்ணி அமைதியானான். கல்லூரி நிர்வாகம், “மாணவர்கள் ஸ்டிரைக் பண்ணுவது சத்தியமூர்த்தியின் தூண்டுதலால் தான் அதைத் தடுக்காவிடில், அவனைப் பதவியிலிருந்து வெளியாக்க நேரிடும்” என்று பயமுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தது.

“மாணவர்கள் கோருகிற நியாயத்தைத் தடுக்க உரிமையில்லை. மாணவர்கள் நியாயம் கோருகிறார்கள். நீங்கள் அதை அளிக்க முயற்சி செய்யுங்கள்” என்று பதில் அனுப்பினான். ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியை அணுகி நின்றாலே கேடு வருமோ என்று அஞ்சினர். அவன் வழி தனிவழியாகியது. கல்லூரி முதல்வரோ சத்தியமூர்த்தியை அதிபயங்கரவாதியாக உருவாக்கிக் காட்ட முயன்று கொண்டிருந்தார்.

கல்லூரி நிர்வாகம் சத்தியமூர்த்தியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஜமீந்தார் சத்தியமூர்த்தியைப் பார்த்து “நெருப்போடு விளையாடுவதாகவும், சிறைக்கு அனுப்பி விடுவேன்” என்றும் மிரட்டினார். “பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்றும் பதிலடி கொடுத்தான் சத்தியமூர்த்தி. “மரியாதை தெரியாதவன்” என்று ஜமீந்தார் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் நிர்வாகியாக வரமுடியும். “பட்டம் பெற்றவன் தான் விரிவுரையாளனாக வரமுடியும். புத்திசாலியான ஏழைகள், முட்டாள்களாக உள்ள பணக்காரர்களுக்குத் தலைவணங்க நேரிடுகிறது” என்கிறான். “மரியாதை தெரியாத புதிய நிர்வாகியிடம் பேசிப் பயன் இல்லை” என்று அறையை விட்டு வெளியேறிவிடுகிறான்.
அன்றிரவே ஹாஸ்டலின் ஒரு மூலையில் தீ வைத்து விட்டு, இதற்குக் காரணமே சத்தியமூர்த்திதான் என்று போலிஸாருக்கு மஞ்சள் பட்டி ஜமீந்தார் தெரிவித்து விட்டார். போலிஸார் சத்தியமூர்த்தியைக் கைது செய்கின்றனர். அவனுடைய நடையில் கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும், அநீதியும் நிறைந்த உலக நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் குனிந்திருந்தது. போலிஸ் ஸ்டேசன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிடுகிறது. பாரதியோ செய்வதறியாது விழித்தாள்.

பாரதியின் வீட்டில் நீண்ட நாட்களாக டிரைவராகப் பணி புரிபவர், “ஹாஸ்டலில் தீ வைத்தது நிர்வாகி மற்றும் முதல்வர் ஆகியோரின் கூட்டுச் சதி” என்ற உண்மையைக் கூறிவிடுகிறான். செய்தி கேட்டு அவன் மனம் எரிமலையாகக் குமுறுகிறது. சத்தியமூர்த்தியைக் குமரேசன் ஜாமினில் வெளியே கொண்டு வந்த செய்தி, பாரதிக்குச் சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.

இதற்கிடையே பாரதியிடம், “மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வரப் போகும் விசயத்தைக்” கூறுகிறார் ஜமீந்தார். அவளிடம் “நாட்டியம் மற்றும் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம்” என்கிறார்.

சத்தியமூர்த்தி ஜாமினில் வெளிவந்த மறுதினம் கல்லூரி வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகிறது. கலெக்டருக்குத் தந்திகள் பறந்தன. ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மல்லிகைப் பந்தலுக்கு நேரில் சென்று நிலமையைக் கண்டறியுமாறு அரசாங்கம் மாவட்டக் கலெக்டரைக் கேட்டுக்கொள்கிறது.

ஜமீந்தார் சத்தியமூர்த்தியின் அப்பாவிடம் சத்தியமூர்த்தியை அடக்கி வைக்கும்படி மிரட்டுகிறார், இல்லையேல் விளைவு விபரீதமாக இருக்கும் என்று நயமாகவும், பயமாகவும் மிரட்டினார். உண்மை வெளியாகிவிட்டால் என்ன செய்வதென்ற பயமும் ஜமீந்தார் மனதில் மூண்டிருந்தது.

‘குத்து விளக்கு’ பத்திரிக்கையில் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்து மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டும் என்றும் கண்டித்து தலையங்கம் எழுதச் சொன்னார் ஜமீந்தார். கண்ணாயிரமும் அவ்வாறு செய்தார். ஜமீந்தாரின் நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும் தலையங்கம் வந்தது. இதைக் கண்ட மாணவர்கள் பத்திரிக்கை பிரதிகளை எரித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Saturday, March 21, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 2

பகுதி 1-இன் தொடர்ச்சி

இறுதியில் குமரப்பன், “நாட்டிய நட்சத்திரம் மோகினிக்காகத் தாயையும், கண்ணாயிரத்தையும் பேட்டிக் கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று எழுதவா?” என்று குத்தலாகக் கேட்கிறான். “கண்ணாயிரத்தையும் முத்தழகம்மாளையுமே படம் பிடித்து வெளியிட்டு விடலாமே?” என்று குறும்புத்தனமாகக் கூறினான். “மோகினியின் நாட்டியத்தை மோகினியிடமிருந்துதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது போலத்தான் இந்தப்பேட்டியும்” என்கிறான் குமரப்பன்.

மோகினியிடம், “அவள் ஆடிய நடனங்களின் மறக்க முடியாத ஒன்றைக் கூற முடியுமா?” என்று வினவினான் குமரப்பன். ஆண்டாள் பாசுரத்திற்குக் கடந்த சித்திரா பௌளர்ணமியன்று ஆண்டளாகவே மாறி ஆடியதாகக் கூற, கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் மறுத்து, கடந்த நவராத்திரியன்று மஞ்சள்பட்டி ஜமீந்தார் அரண்மனையில் மோகினி தன்னை மறந்து ஆடியதாக எழுதிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.

சத்தியமூர்த்திக்கு மல்லிகைப் பந்தலில் புதிய புதிய அனுபவங்கள் ஏற்படலாயின. “மாணவர்கள் தங்குகின்ற விடுதிக்கு உதவி வார்டன் அவசியமில்லை என்றும் அப்படியே அவசியம் என்றாலும் இளம் விரிவுரையாளர் தேவையில்லை”
என்று முதல்வரும், ஹெட் கிளார்க்கும் பூபதியிடம் கூறியும், நிர்வாகி அவனை வார்டனாக நியமித்தது முதல்வருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

கல்லூரி திறந்த மூன்றாவது வாரம் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிக்குள் நுழைந்தான் சத்தியமூர்த்தி. இதைக் கண்ட முதல்வர், “இனி ஆசிரியர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்” என்று சுற்றறிக்கை அனுப்பினார். நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு திடமான எண்ணத்துடன் நேரம் போடுவதை நிறுத்திவிட்டான். “பியூன் நேரம் குறிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதாகக் கூற, சத்தியமூர்த்தி, முடியாது என்று போய்ச் சொல்” என்று பியூனை அனுப்பிவிடுகிறான்.

முதல்வர், ஆசிரியர் அறைக்குள் நுழைந்து, சத்தியமூர்த்தி ரிஜிஸ்டரில் நேரம் குறிப்பிடாததைச் சுட்டியதோடு, “சுயமரியாதையைக் காப்பாற்ற விரும்புகின்றவர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்” என்கிறார். “முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில பேராசிரியர்கள் நேரம் குறிக்காமல் இருப்பது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவ, “தன்னைக் கேட்க அவன் யார்?” என்று கோபமாக வினவினார். “அவரின் கீழே பணி புரிகிற தகுதி ஒன்றே கேள்வி கேட்கப் போதுமானது. மேலும் யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் அதிகம் பெருந்தன்மை காட்ட வேண்டும்” என்கிறான். “எனக்கென்ன வந்தது?” என முணுமுணுத்தவாறே அங்கிருந்து போய்விடுகிறார் முதல்வர். முதல்வருடன் வாக்குவாதம் நிகழ்ந்த போது ஒரு விரிவுரையாளர்கூட வாய் திறக்காதது மனதை நோகச் செய்கிறது. நல்லதை வெளிப்படையாக ஆதரிக்கத் தெரியாத விரிவுரையாளர்களை எண்ணி வருந்த¢னான் சத்தியமூர்த்தி.

அவ்வேளையில் மோகினி எழுதிய கடிதம் கிடைக்கிறது. அவளுடைய கடிதத்தைப் படிக்கும்போது மோகினியே அருகில் வந்து நின்றுக் கொண்டு விசும்பி அழத் தொடங்குவது போல் சத்தியமூர்த்திக்குப் பிரமை உண்டாயிற்று. திட நெஞ்சமுள்ள சத்தியமூர்த்தியையே மௌளனமாக அழச் செய்தது அந்தக் கடிதம். பரிசுத்தமான மனம் துடிப்பது கடிதத்ததில் தெரிந்தது. “மோகினிக்குப் பதில் கடிதம் எழுதினால் அது அவள் கையில் கிடைக்குமா” என்று யோசிக்கலானான்.

சத்தியமூர்த்தி தன்னைப் பொருட்படுத்தாமல் இருப்பது பாரதிக்குப் பெரும் மன வேதனையைத் தருகிறது. எதிர்பார்க்கின்ற இடத்தில் அன்பு இல்லாமையை உணரும் போது பெண்கள் வாடிவிடுகின்றனர் என்பது பாரதி விஷயத்தில் உண்மையாயிற்று. சத்தியமூர்த்தியைத் தன்னுடன் படகு சவாரி செய்ய ஆர்வத்தோடு அழைத்த குரலுக்குப் பதிலே சொல்லாமல் பாராமுகமாய் இருந்ததை எண்ணி எண்ணி வேதனைப் பட்டாள் பாரதி. பாரதியிடம் அளவாகவும், கண்டிப்பாகவும் பழக வேண்டும் என்று தன் மனதிற்கு அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தான். “பாரதியின் அன்பு ஆள விரும்புகிற அன்பு. மோகினியின் அன்பு ஆட்படுகின்ற அன்பு. ஆட்படுகின்ற அன்புக்கு இணையாக உறவு உலகில் வேறெதுவும் இருக்க முடியாது” என்று எண்ணிக் கொள்கிறான் சத்தியமூர்த்தி.

திருமண வீட்டில் மோகினியின் நடனம் அரங்கேறியது. மோகினியின் கையால் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெரிய மனிதர்களுக்குச் சந்தனம் பூசுமாறு முத்தழகம்மாள் கேட்க, மோகினி குமுறும் எரிமலையானாள். “அவர்களின் பணமே வேண்டாம். இலவசமாக நடனம் ஆடியதாகவே இருக்கட்டும்” என்று கூறி கல்யாண வீட்டை விட்டு வெளியேறினாள்.

கல்லூரியில் பணி புரிந்த சில வாரங்களிலேயே மாணவர்களுக்கு நன்கு அறிமுகமானான் சத்தியமூர்த்தி. மாணவன் ஒருவன் “பல விதங்களில் சமூகத்திற்கே பேராசிரியராக ஆகிற தகுதி சத்தியமூர்த்திக்கு இருப்பதாகக்” கூறுகிறான். சதாகாலமும் அவனைச் சூழ நின்று மாணவர்கள் ஆர்வத்தோடு பேசுவது, கல்லூரி முதல்வரிலிருந்து விரிவுரையாளர்கள் பலருக்குப் பொறாமையை உண்டாக்குகிறது. மாணவர்களை மிரட்டி வைத்தால்தான் மரியாதை தருவார்கள், என்ற தப்பபிப்பிராயம் பெரும்பாலான விரிவுரையாளர்களிடம் இருப்பதை அறிந்து வருந்தினான் சத்தியமூர்த்தி. திறமையால் கவர்ந்து மதிப்பைப் பெற முடியாமல் பயமுறுத்தி மதிப்பைப் பெற முயலும் முயற்சியை எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி.

இதற்கிடையே கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவனின் தந்தையைப் புலி அடித்துவிட்டது. செய்தி அறிந்த மாணவன் சத்தியமூர்த்தியிடம் விசயத்தைக் கூறிவிட்டு கிராமத்திற்குப் போய்விட்டான். தந்தையைப் பார்த்து விட்டு மீண்டும் விடுதிக்கு வந்த அவனை ஒரு வாரத்திற்குள் 25 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அனுமதியின்றி விடுதியை விட்டுப் போனதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தலைமை வார்டன் கூறினார். செய்தி அறிந்த சத்தியமூர்த்தி, “மாணவன் தன்னுடைய அனுமதியின் பேரில்தான் விடுதியிலிருந்து வெளியேறினான்” என்று மாணவன் சார்பாக வார்டனிடம் வாதாடினான். மாணவனின் அறைக்கதவைத் திறக்க முடியாது என்றால் நிர்வாகியைச் சந்திக்கப் போவதாகக் கூறி அங்கிருந்து வெளியறினான். சற்று நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு திறக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லி, சத்தியமூர்த்த¢யிடம் நன்றி கூறிச் சென்றான் மாணவன். ஒவ்வொருவராகத் தனக்கு எதிரிகளாக மாறி வருவதை எண்ணியபோது எதிர்காலமே வறட்சியாக இருப்பதாகத் தோன்றியது. ஒரு நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய தேவைகளுக்காகவும், நியாயத்திற்காகவும் சேர்த்து போராட வேண்டியிருப்பதை உணர்கிறான்.

விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் வேறுசில பிரச்சனைகளையும் எதிர்நோக்கினர். இது குறித்து உதவி வார்டனான சத்தியமூர்த்தி, தலைமை வார்டனைப் பார்க்கச் சென்றான். அவனிடம், “நீங்கள் இப்பிரச்சனைகள் குறித்து நிர்வாகியிடமே பேசலாமே” என்று குத்தலாகக் கூறினார் வார்டன். மனவேதைனையுடன் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. இவ்வேளையில் நண்பன் குமரப்பன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. சத்தியமூர்த்திக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது. மோகினியின் புகைப்படங்களும் கடிதத்தில் இருந்தன. ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கை சார்பாக மோகினையைப் பேட்டி கண்டது, அப்பொழுது அவளது வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்தும் எழுந்தியிருந்தான் குமரப்பன்.

“மோகினியின் முகத்தையும், கண்களையும் பார்க்கும்போது ரவிவர்மா வரைந்த கலைமகளின் உருவம் நினைவிற்கு வருகிறதென்றும், மோகினியின் சிரிப்பில் திருமகளும், கலைமகளும் வாசம் செய்வதாகத் தோன்றுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தான். மேலும் “நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பவர்கள் வாழ்க்கையில் ஏதாவது தடை இருந்து கொண்டே இருப்பதாக” எழுதியிருந்தான் குமரப்பன்.

பாரதி தன்னைத் தேடி வருவதைக் குறைத்துக் கொள்ளும்படி அவளிடமே இரண்டொரு முறை சொல்லியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் வேறு சிலரும் பூபதியைப் பற்றியும், அதோடு தன்னையும் பாரதியையும் இணைத்துப் பேசியது அவன் மனதைப் புண்படுத்தியிருந்தது. நேர்முகத் தேர்வு நடந்த முறை, பாரதி தன்னிடம் செலுத்தும் அன்பு ஆகியவற்றைக் கொச்சைப் படுத்தி பேசும் முதல்வரின் போக்கு பாரதிக்குத் தெரிந்தால் அவளது உள்ளமும் நோகுமே என்று விசயத்தை மறைக்கிறான்.

தன் செவியில் விழுந்திருந்த அந்த இரண்டு வம்புப் பேச்சுகளையும் அவளிடம் கூறி தன் நிலையை விளக்கி விடலாமா என்று எண்ணுகிறான் சத்தியமூர்த்தி. உலகத்தின் களங்கம் நிறைந்த சிந்தனையின் ஒரு பகுதியை அவள் புரிந்து கொண்டு வேதனைப் பட நேருமே என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அந்த வேதனை தன்னோடு போகட்டுமே என்று தன்னைத்தானே அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று அவனுக்கு.

பாரதியிடம் பூக்கடையிலிருந்து விடைபெற்று அறைக்குத் திரும்பியவன் பாரதி அவனுக்கு எழுதியிருந்த இரண்டு கடிதங்களையும் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறான். அவன் அறையில் மலர்க்கொத்தை வைக்க வந்தவள் கிழிந்து கிடந்த கடிதத் தாட்களைப் பார்த்து, கண்ணீர் பெருகும் விழிகளோடு, நடைபிணமாக திரும்பினாள். பாரதியின் மனதை நோகடித்து விட்டோமே என்று நிம்மதி இழந்து தவித்தான் சத்தியமூர்த்தி. அன்பைச் செலுத்துவதற்கு நம்பிக்கை வாய்ந்த அந்தரங்க மனிதன் இவன் என்று ஒரு பெண் மனப்பூர்வமாக நேசிக்கத் தேர்ந்தெடுத்த ஒருவனிடம் அந்த நம்பிக்கையும், அந்தரங்கமும் இல்லையென்று தெரிந்தால் ஏற்படும் வேதனை பாரதியை வாட்டியது. பாரதியின் மனதை நோகடித்து விட்டோமே என்று மனம் வருந்துகிறான் சத்தியமூர்த்தி.

சத்தியமூர்த்தி நூலகத்தில் ஷேக்ஸ்பியர் நூலை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முதல்வர் வந்ததையும் அறியாமல் படித்த சத்தியமூர்த்தி தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று முதல்வர் ஆதங்கப்படுக¢றார். “மரியாதையை முட்டாள்களும் எதிர்பார்க்கிறார்கள், அறிவாளிகளும் எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்வது” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி.

கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குறித்து கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. “பல சமூகப் பிரச்சனைகளுக்குக் காரணம் ஒரு தலைமுறையினருக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம்தான்” என்று உணர்கிறான் சத்தியமூர்த்தி. அவனுடைய அப்பாவோ கண்ணாயிரத்தையும், மஞ்சள் பட்டி ஜமீந்தாரையும் பெரிய மனிதர்களாக எண்ணி போற்றுவது அவனது வேதனையை அதிகப்படுத்துகிறது.

கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் பாரதி வெற்றிப் பெறுகிறாள். வாழ்த்துக் கூறிய சத்தியமூர்த்தியை அலட்சியப்படுத்துவது போல் நடந்து கொள்கிறாள் பாரதி.

இதற்கிடையில் ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கை நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராற்றினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மல்லிகைப் பந்தலுக்கு வருகிறான் குமரப்பன். ‘குத்துவிளக்கு’ பத்திரிக்கையின் நிர்வாகம் மற்றும் உரிமை அனைத்தையும் மஞ்சள் பட்டி ஜமீந்தார் வாங்கிவிட்டதாகவும், கண்ணாயிரத்தின் குறுக்கீடு எல்லை மீறிய காரணத்தால் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டதாகவும் குமரப்பன் கூறுகிறான்.

கல்லூரியில் சத்தியமூர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் இடையே பாரதி கேள்வி கேட்கிறாள். பாடம் முடியும் வரை அமைதியாகக் கேட்கும் படி கூறி பாடத்தை நடத்தி முடிக்கிறான். பாரதியிடம் சந்தேகங்களைக் கேட்கும்படி கூற, அவளும் என்ன கேட்பது என்று தெரியாது விழித்தாள். மற்ற மாணவர்கள் இரைந்து சிரிக்கவே அழுது கெ¡ண்டே வகுப்பறையை விட்டு வெளியேறி விடுகிறாள். அறைக்குத் திரும்பிய சத்தியமூர்த்தியிடம் அவனுடைய அனுமதியின்றி மோகினி அவனுக்கு எழுதிய கடிதங்களைத் தான் படித்துவிட்டதாகப் கூறுகிறான் குமரப்பன். சத்தியமூர்த்தியிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்கிறான். “தான் அதைத் தவறாகக் கருதவே இல்லை” என்கிறான் சத்தியமூர்த்தி. “குமரப்பனைப் போன்ற நண்பனிடம் வாழ்வதா சாவதா என்று சிந்தித்து முடிவு சொல்லும் பொறுப்பைக் கூட விட்டு விடலாம்” என்கிறான் சத்தியமூர்த்தி. “சத்தியமூர்த்தி வாழ்வதற்குச் சிந்தித்து முடிவு சொல்கிற நண்பனாக மட்டுமே கடைசிவரை இருப்பதாகக்” கூறுகிறான் குமரப்பன்.

“மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும் அழகிய இரகசியங்களெல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன” என்கிறான் குமரப்பன். கடைசியாக மோகினியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட தினத்தன்று அவள் தன் கையில் மோதிரத்தை அணிவித்ததையும், கண்ணீர் மல்கும் விழிகளோடு தனக்குத் திலகமிட்டு விடை கொடுத்த சம்பவத்தையும் கூறுகிறான் சத்தியமூர்த்தி. தன்னை மறந்துவிட வேண்டாம் என்றும் அவனுடைய ஞாபகத்திலேயே வாழ்வதே பாக்கியம் என்று அவள் கூறியதாகக் குமரப்பனிடம் தெரிவிக்கிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் போன்ற உடம்பும் மனமும் அழகாய் இருக்கிற கலையரசி காதலியாகக் கிடைத்தது சத்தியமூர்த்தியின் பாக்கியமே என்கிறான் குமரப்பன். தான் அவளுடன் சாகவும் முடியும். ஆனால் அவளின்றி வாழ்வது முடியாத காரியம் என்ற ஜான் டிரைடன் நிலையில், தான் இருப்பதாகவும், மோகினிக்குத் தன்னைவிட வேதனை அதிகம், அவளை ஜமீந்தார் சொந்தம் கொண்டாட விரும்புகிறார் என்கிறான் சத்தியமூர்த்தி.

கல்லூரியில் இயங்கிவரும் தமிழ் மன்ற விழாவிற்கு நவநீத கவியை அழைத்தான் சத்தியமூர்த்தி. விழா வெகு சிறப்பாக நடந்தேறியது. வழக்கம் போன்றே முதல்வரும் வேறு சிலரும் நிகழ்ச்சியைப் பற்றி குறை கூறி திருப்திபட்டுக் கொண்டனர்.

சத்தியமூர்த்தி தங்கியிருந்த மாடி வீட்டின் கீழ்ப் பகுதியில் ‘குமரப்பன் ஆர்ட்ஸ்’ என்ற விளம்பரக் கடையைத் தொடங்கினான் குமரப்பன். நம்பிக்கையையும், தைரியத்தையும் முதலாக வைத்து தொழிலை வெற்றிகரமாகத் தன்னால் செய்யமுடியும் என்கிறான் குமரப்பன். தலைமை வார்டன் தன்னுடைய கடமையைப் புறக்கணிப்பதைப் பெரியப் பாவமாகச் சத்தியமுர்த்தி நினைக்கிறான். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் பொறுப்பற்று இருப்பதைக் கண்டு, அவர்களின் மனதைத் தொடும்படி அவர்களின் கடமையை எடுத்துக் கூறினான் சத்த¢யமூர்த்தி.

கூட்டுப்பணியை மாணவர்களின் ஒத்துழைப்புடன் வெகுச் சிறப்பாகச் செய்து முடிகிறான் சத்தியமூர்த்தி. அவன் செயல்களைக் குறை சொல்வதே தங்கள் வேலை என்பது போன்று கல்லூரியில் ஒரு தரப்பினர் குறை கூறிக் கொண்டிருந்தனர்.
கூட்டுப்பணி முடிந்து கல்லூரி திரும்பிய சத்தியமூர்த்தி மோகினி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளான செய்தியை அறிகிறான். மோகினியின் தாயாரும், டிரைவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்ட செய்தியும் மோகினி தற்போது மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனையில் இருப்பதையும் தெரிந்து கொள்கிறான்.

நண்பன் குமரப்பனுடன் மதுரைக்குச் செல்கிறான். கண்ணாயிரமும் மஞ்சள் பட்டி ஜமீந்தாரும் காவல் நாய்கள் போல் அங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறார்கள். சத்தியமூர்த்தியைப் பார்த்த மோகினி அழுகிறாள். பொங்கி வந்த அழுகை குரலை அடைக்கிறது. “தன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் தான் வேதனைகளும், சோதனைகளும் அதிகமாகப் போகிறது” என்கிறாள்.

தான் மானசீகமாக சத்தியமூர்த்திக்கு வாழ்க்கைப் பட்டு விட்டதாகவும், அவனை நினைப்பதற்காக, நினைத்து தவிப்பதற்காக தவித்து உருக தான் இன்னும் வாழ விரும்புவதாகக் கூறுகிறாள் மோகினி. தன்னைப் பொறுத்தவரையில் திருமணம் முடிந்ததாகக் கருதுவதாகவும் கூறுகிறாள். சத்தியமூர்த்தி, “தன்னுடைய மனநிலையும் அவ்வாறே” என்கிறான்.

அறைக்கு வெளியே குமரப்பன், மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரத்தோடு சண்டை போடுகிறான்.

சத்தியமூர்த்தியைப் போன்ற உத்தமரை அடைய தான் முன் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கூறி கைகூப்பினாள் மோகினி.

மோகினியை மருத்துவமனையில் பார்த்த விசயம் அவனுடைய அப்பாவிற்குத் தெரியவருகிறது. “மஞ்சள்பட்டி ஜமீந்தார் மோகினியை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள எண்ணியுள்ள இவ்வேளையில் சத்திய மூர்த்தியின் செய்கை மிகப் பெரிய தவறு” என்கிறார். “நாட்டியக்காரி முத்தழகம்மாள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் ஜமீந்தார் செலவில் அனுபவிக்கிறார்கள். ஜமீந்தாரோ முழுமனதையும் மோகினியிடம் பறிகொடுத்துவிட்டார், பெரிய இடத்துப் பகை வேண்டா, ஜமீந்தாரிடம் மன்னிப்புக் கேட்டு விடு” என்கிறார் அவனுடைய அப்பா. சத்தியமூர்த்தி மறுக்கவே அவளுடைய அப்பா கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார். இதற்கிடையே பூபதி எழுதிய அவசரத் தபால் (pos laju) சத்தியமூர்த்திக்கு வந்து கிடைக்கிறது. கடிதத்தில் தனக்கு பத்மஸ்ரி விருது வழங்கப்படவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தன்னை மதுரையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் சந்திக்க வருமாறு குறிப்பிட்டிருந்தார். அங்குச் சென்ற பிறகுதான் அது ஜமீந்தாரின் வீடு என்று அறிகிறான்.

Friday, March 20, 2009

நாவல் (பொன் விலங்கு) - கதைச்சுருக்கம் - பகுதி 1

மாணவர்களின் கவனத்திற்கு,
கதைச் சுருக்கம் நீளமாக இருப்பதால் அதனை 4 பகுதிகளாப் பிரித்து இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது


சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் என்ற மலைப்பிரதேசத்தில் இயங்கிவரும் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிய விண்ணப்பம் செய்திருந்தான். நேர்முகத் தேர்விற்கு வரும்படி கடிதம் வந்தது. மல்லிகைப் பந்தலுக்குச் செல்லும் கடைசி பேருந்தைத் தவறவிட்டதனால் நேர்முகத் தேர்வுக்குத் தாமதமாகச் சென்றடைகிறான். கல்லூரி நிர்வாகி பூபதி உடல் நலக் குறைவாக இருந்த காரணத்தால் நேர்முகத் தேர்வைத் தன்னுடைய வீட்டில் நடத்தினார். இந்தக் காரணத்திற்காகத் தாமதமாக வந்த சத்தியமூர்த்தி மன்னிக்கப்படுகிறான்.

நேர்முகத் தேர்வை மிகச் சிறப்பாக செய்த சத்தியமூர்த்தி, “வயதில் மூத்த அனைவரும் யோக்கியமானவர்கள் அல்ல” என்று கூறுகிறான். இந்தப் பேச்சு பூபதியின் மனதை நோகச் செய்கிறது. “பெரியோர்களிடம் பணிவாகவும், விநயமாகவும் பேசத் தெரிய வேண்டும். கல்வி மலரைப் போன்றது. பணிவும், விநயமும்தான் அதை மணக்கச் செய்கிறது” என்கிறார். “மேலும், சத்தியமூர்த்தியிடம் உள்ள இந்த எடுத்தெறிந்து பேசிவிடுகின்ற இளமைக்குணம் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும்” என்கிறார். பூபதி நேர்முகத் தேர்வின் முடிவை கல்லூரி திறப்பதற்கு முன் தெரிவிப்பதாகவும், தேர்வு சான்றிதழ்களைக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிற¡ர். அவரிடம் விடைபெற்று கல்லூரியில் சான்றிதழ்களை ஒப்படைத்த பின்னர், மதுரை திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவன் பயணம் செய்த அதே இரயில் பெட்டியில் பெண்மணி ஒருவரும், அவருடைய மகளும் பயணம் செய்தனர். மகள் என்றுகூட பார்க்காது அவளிடம் மிகவும் அநாகரிகமாகப் பேசுகிறார் பெண்மணி. சத்தியமூர்த்தி அவரிடம் “சற்று நாகரீகமாக மகளுடன் பேசுங்களேன்” என்று கூற அவளுடைய தாயாரும் அமைதியாகிவிட்டாள். இதற்கிடையே ஓடும் இரயிலில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றுகிறான் சத்தியமூர்த்தி.

ரயில் மதுரையை அடைந்ததும், பிளாட்பாரத்திலிருந்து வெளியேறிய அவனைக் கண்ணாயிரம் என்ற விளம்பர நிர்வாகி சந்திக்கிறார். அவன் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்ணைக் காட்டி, “நாட்டியப் பெண்மணி மோகினியை முன்பே தெரியுமா” என்று சிரித்தவாறே கேட்டார். அவர் கேட்ட பாணி சத்தியமூர்த்திக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. அடிப்படை நாகரீகம் கூட தெரியாத அவரை எரித்துவிடுவதைப்போல் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.

வீடு திரும்பிய சத்தியமூர்த்தியிடம் கல்லூரி வேலை குறித்து அனைவரும் வினவினர். விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று கூறுகிறான். இதற்கிடையே ரயிலில் காப்பற்றப்பட்ட மோகினி, ரயிலில் அவன் தவறவிட்டுவிட்டதாகக் கூறி பேனா ஒன்றை ஒப்படைக்கிறாள். “தன்னை மறக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறாள் மோகினி.

இதற்கிடையே பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க பூபதிக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை அனுப்புகிறான். தபால் நிலையத்தில் நண்பன் குமரப்பனைச் சந்திக்கிறான். ‘குத்து விளக்கு’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் பணி புரிகிறான் குமரப்பன்.

மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராக விரும்பும் சத்தியமூர்த்தியிடம், “அங்கு வாழ்க்கை செலவு அதிகமாயிற்றே, உள்ளூரிலேயே பணி புரியலாமே” என்று கனிவோடு கூறுகிறான்.

மன அமைதி வேண்டி கோயிலுக்குச் சென்ற சத்தியமூர்த்தி எதிர்பாரா விதமாக மோகினியைக் காண்கிறான். அவளுடைய தூய அன்பில் மனதைப் பறிகொடுக்கிறான். அவனைத் தன் வீட்டிற்கு ஒருமுறை வரும்படி அன்போடு கேட்கிறாள். ஆண்டாள் பாசுரத்திற்கு அபிநயம் பிடித்து ஆடிக்காட்டுவதாகக் கேட்டுக் கொள்கிறாள். சத்தியமூர்த்திக்கு மோகினியின் இதயம் ஒருவாறு புரிகிறது.

இதற்கிடையே அவனுடைய அப்பா குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக கண்ணாயிரத்திடம் 5000 ரூப¡ய் கடன் பெறுவதற்கு, கண்ணாயிரம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மஞ்சள் பட்டி ஜமீந்தார் என்ற பெரிய பணக்காரர் ஒருவருக்கு ஆங்கிலமும் இந்தியும் சொல்லிக் கொடுக்கிறார்.

சத்தியமூர்த்திக்குக் கல்லூரியில் பணி புரிய வருமாறு கடிதம் வருகிறது. பூபதி தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டதோடு அவனுக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். கல்லூரி திறப்பதற்கு முதல்நாளே வேலையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே தினத்தில் பாரதியின் கடிதமும் கிடைத்தது. அவனுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தாள் பாரதி. கல்லூரி முதல்வர், சத்தியமூர்த்திக்கு வேலை கிடைப்பதற்குத் தடையாக இருந்தார் என்றும் எழுதியிருந்தாள். கல்லூரி முதல்வரை மாணவன் ஒருவன் கத்தியால் தாக்கியதாகவும், செய்தி அறிந்த பூபதி முதல்வரிடம் மாணவர்களை அன்போடு நடத்துமாறு கட்டளையிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாள் பாரதி. “சத்தியமூர்த்தியைப் போல் இளமைப் பருவமும், தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இளைஞனால் மாணவர்களின் மனதைக் கெடுக்க முடியும்” என்று கூறியவர், இதே முதல்வர்தான் என்று குறிப்பிட்டிருந்தாள். கல்லூரியில் தமிழ்ப்பிரிவில் சேர்ந்து அவரிடம் பயில ஆர்வமுடன் இருப்பதாகவும் எழுதியிருந்தாள்.

சித்ரா பௌர்ணமியன்று மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்தியமூர்த்தியும், குமரப்பனும் கண்டு கழிக்கின்றனர். மோகினியின் நடனத்தில் மெய் மறக்கிறான் சத்தியமூர்த்தி. மோகினியின் மேல் இனம் புரியாத மதிப்பு உருவாகிறது. அவளிடம் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பாராட்டுக்களைத் தெரிவ¢க்கிறான். மோகினியியோ அவனைப் பார்த்த உற்சாகத்தினால் சிறப்பாக ஆட முடிந்ததாகக் கூறுகிறாள். அவனுடைய பாராட்டு தான் பெற்ற பாக்கியமாகக் கருதுவதாகக் கூறுகிறாள் மோகினி.

குமரப்பனிடம், மோகினியுடன் ஏற்பட்ட உறவைக் கூறுகிறான் சத்தியமூர்த்தி. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத்திறமையும், அழகும், அவர்கள¢ன் அடிமனத்தில் உள்ள வேதனைகளும் உலகத்துக்குத் தெரியாமல் போய்விடுவதாகக் கூறுகிறான் குமரப்பன். வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்குத் துணியும் அளவிற்கு அவளின் துயரங்கள் உள்ளன என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளதாகக் கூறுகிறான்.

மல்லிகைப் பந்தலில் உள்ள கல்லூரியில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் சத்தியமூர்த்திக்குத் தன்னுடய மனமார்ந்த வாழ்த்துக்களைச் கூறிக் கொள்கிறான் குமரப்பன். குமரப்பனின் பிரிவை எண்ணி சத்தியமூர்த்திக்கு இதயமே கனக்கிறது.

சத்தியமூர்த்திக்கு நண்பர்கள் விருந்து வைக்கிறார்கள். நண்பன் ஒருவன், “சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும் போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலேயே உட்காருகிறேன்” என்று கண்ணீரோடு பேச்சை முடிக்கிறான்.

விருந்து முடிந்து வீடு திரும்புகிறான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரத்திடம் வாங்கப்போகும் கடனுக்குச் சத்தியமூர்த்தியை ஜாமீன் கையெழுத்து போடுமாறு கேட்கிறார் அவனுடைய அப்பா. வேறு வழியின்றி கையெழுத்து போடுகிறான் சத்தியமூர்த்தி. வேலைக்குப் போகிற இடத்தைப் பற்றிய மகிழ்ச்சியும், பிரிகிற இடத்தைப் பற்றிய துயரமும் மனத்தை ஆட்கொள்கிறது.

நிறையப் புத்தகங்களைப் பயணப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து, “படிப்பு சொல்லிக் கொடுக்கப்போகிறீர்களா அல்லது படிக்கப்போகிறீர்களா” என்று கேட்டுத் தங்கை சிரித்தாள். அவளிடம், “படிக்கிறவனைக் காட்டிலும் படிப்புச் சொல்லிக் கொடுப்பவன் அதிகமாகப் படிக்கவும், சிந்திக்கவும் வேண்டும்” என்கிறான். பயணப் பெட்டியில் பாரதி எழுதிய கடிதத்தையும் பத்திரமாக வைக்கிறான்.

மோகினியின் வீட்டிற்குச் சென்று தான் வெளியூரில் பணி புரியப் போகும் செய்தியைக் கூறுகிறான். அவனுடைய வருகை மோகினிக்குப் பேரின்பத்தை அளிக்கிறது.

“சத்தியமூர்த்தியைப் போல் சத்தியமும் நேர்மையும் நிறைந்த இளைஞர் மனம் வைத்தால் வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று அந்த வீட்டில் காத்திருப்பதாக” மோகினி கூறுகிறாள்.

“இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து அவனுக்கு விடையளிக்கிறாள் மோகினி.

“பிரிந்து வெளியூர் போகப் போவதைச் சொல்லிக் கொண்டு போக வந்தால், என்றும் பிரியமுடியாத பந்தத்தைச் சொல்லி நீங்கள் என்னைத் தடைப்படுத்துவது நியாயமா?” என்று கேட்கிறான் சத்தியமூர்த்தி.

“ரயிலில் கையைப் பற்றி காப்பாற்றிய அவன் பாதியில் இழுத்து முறித்துக் கொள்ளலாமா?” என்று கூறுவதன் மூலம் அவனை மனதார விரும்புவதைத் தெரிவிக்கிறாள்.

“நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்த போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன” என்ற பைரனின் கவிதை வரிகள் அவன் ஞாபகத்திற்கு வருகிறது. மோகினியின் அன்பு அவனை ஆட்கொள்கிறது.

மல்லிகைப் பந்தலுக்குச் செல்வதற்குமுன் மீண்டும் அவளைச் சந்திப்பதாகக் கூறி விடைபெறுகிறான். இதற்கிடையே மோகினியைச் சினிமாவில் நடிக்க வைக்க கண்ணாயிரம் முயற்சி செய்து வருவதாகக் குமரப்பன் சத்தியமூர்த்தியிடம் தெரிவிக்கிறான். மேலும், மஞ்சள்பட்டி ஜமீந்தார்தான் சினிமா படம் எடுக்க பணவுதவி செய்யவிருப்பதாகச் செய்தி சொல்கிறான்.

மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் மோகினியைச் சந்தித்து கண்ணாயிரத்திடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறான். மோகினி அவளுடைய நினைவாக அவன் விரலில் மோதிரம் ஒன்ற அணிவிக்கிறாள். சத்தியமூர்த்தியும் தன் நினைவாக அவளுடைய விரலில் மோதிரத்தை அணிவிக்க¢றான்.

கண்ணாடியில் தங்கள் இருவரின் உருவமும் மணமக்களைப் போல் காட்சி தருவதாகக் கூறி மனம் மகிழ்கிறாள் மோகினி.

“காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருப்பதை நீயும் நானும், இன்றும் நாளையும், என்றும் கேட்கலாம்” என்று கூறுகிறான் சத்தியமூர்த்தி. பதில் கூறாமல் அழத்தொடங்குக¢றாள். “அவனுடைய நினைவில் வாழ்வதே பாக்கியம்” என்று விடைகொடுக்கிறாள் மோகினி.

நண்பர்கள் அவனை ரயில் நிலையத்திற்கு வழியனுப்ப வந்திருந்தனர். மலைக்குப் புறப்பட்ட கடைசி போருந்தில் இடம் கிடைத்தது. விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பும் மாணவ இளைஞர்கள் பேச்சும் சிரிப்புமாய் பேருந்தில் பயணித்தனர். அவனோடு அங்குப் பணிபுரியும் விரிவுரைஞர்களும் பயணித்தனர். போருந்து நிலையத்தில் பாரதி அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு போய் கல்லூரியில் விடுகிறாள். சத்தியமூர்த்தி கல்லூரியில் தங்குவது முதல்வருக்கும் ஹெட் கிளார்க்கிற்கும் விருப்பமில்லை என்பதை அவர்களின் பேச்சிலே புரிந்து கொள்கிறான். அன்றே அங்கிருந்து வெளியேறி வாடகை அறை ஒன்றில் தங்குகிறான்.

பாரதி அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பேசுவதையும் தவிர்க்க எண்ணுகிறான். கல்லூரி முதல்வரும், ஹெட் கிளார்க்கும் காரணமேயில்லாமல் தன் மீது பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தப் பெண்ணால் பொறாமை மேலும் வளர்ந்து விபரீதமாகிவிடக்கூடாதே என்று தயங்கினான்.

பாரதியிடம், “மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது, எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதுவும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்” என்கிறான்.

வேலையில் சேரும் உடன்படிக்கை பாரத்தில் தங்கள் பணிவுள்ள என்ற சொற்களை வெட்டி தங்கள் உண்மையுள்ள என்று திருத்தி கையொப்பமிட்டான்.

இதைக் கண்ட ஹெட் கிளார்க், “உங்களிடம் பணிவை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் ஒருவர் தான் உண்மையானவர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” அப்படித்தானே என்கிற¡ர். அவரிடம், “உண்மை என்ற பெருங்குணம் மற்ற எல்லா குணங்களையும் தன்னுள் அடக்கி விடுகிறது” என்கிற¡ன். ஹெட் கிளார்க் தன்னை வெறுப்பதை அவனால் நன்கு உணர முடிகிறது.

அன்று மாலை கல்லூரியில் பணிபுரிபவர்களுக்குப் பூபதியின் தோட்டத்தில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பேசிய அனைவரும் ஆங்கில மொழியையே பயன்படுத்தினர். புதிதாக வேலையில் சேர்ந்துள்ள விரிவுரையாளர்கள் சார்பாக சத்தியமூர்த்தியைப் பேசும்படி பணித்தார் பூபதி. சத்தியமூர்த்தி அனைவருக்கும் தமிழிலேயே வணக்கம் கூறி பேச்சைத் தொடங்கினான். கல்லூரி முதல்வர் அவனிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு காதருகே முணுமுணுத்தார். “நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன், தமிழை வணங்குகிறேன்” என்று கூட்டத்தினர் அனைவருக்குமே கேட்குமாறு கூறி, உரையைத் தமிழிலேயே தொடங்கினான். பூபதி அவனைப் பாராட்டியதோடு, “பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட காரணத்தால், தமிழ் நன்றாகத் தெரிந்தவர்களிடையேயும் ஆங்கிலம் பேச நேரிடுகிறது” என்றார்.

கல்லூரி தொடங்கிய இரண்டாவது நாள் BA ஆங்கில இலக்கிய வகுப்பிற்குச் செல்கிறான். சுமார் எழுபது மாணவர்கள் அந்த வகுப்பில் இருந்தனர். பாரதி ஆங்கிலக் கவிதை நூலைக் கொடுத்து ஏதாவது கவிதை ஒன்றை விளக்குமாறு கேட்கிறாள். “தமிழ் விரிவுரையாளர் ஆங்கிலக் கவிதைக்கு விளக்கம் சொல்வதாவது” என்று மாணவர்கள் மருண்டனர். சத்தியமூர்த்தி கவிதை நூலில் இருந்து “She walks in beauty” என்ற கவிதையை விளக்க ஆரம்பித்தான். பாரதியாரின் ‘அழகுத் தெய்வம்’ என்ற கவிதையோடு இரண்டறக் கலந்துவிட்டான். மாணவர்கள் எழுதிவைத்த சித்திரங்கள் போல அசையாமல் கட்டுண்டு கிடந்தனர். பாரதியோ, “இலக்கிய நயமிக்க உரை” என்று பாராட்டுகிறாள்.

தங்கள் மனதிற்குப் பிடித்த ஒரு நல்ல விரிவுரையாளனைக் கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சி முகத்திலும், மனத்திலும் ஆர்வம் பொங்க மாணவர்கள் சூழ்ந்தார்கள். வகுப்பிற்கு வெளியே நின்று இவனது கவிதை விளக்கத்தைக் கேட்டு சத்தியமூர்த்தியை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார் பூபதி. கல்லூரி முதல்வரிடம் தமிழ்த்துறை விரிவுரையாளராகிய சத்தியமூர்த்தி ஆங்கில மொழியில் கவிதையை விளக்கியதை மிகவும் பெருமையாகக் கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் சத்தியமூர்த்தியைத் தனியே அழைத்து, “இனி எந்த வகுப்பிற்குச் சென்றாலும் தமிழ்த்துறை தொடர்புடைய ஏதாவது பாடத்தை நடத்துங்கள். இது முதல்வர் கட்டளை” என்கிறார்.

அரைகுறையாகப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாகவே பொறாமைப் படும்படியான காரியம் ஒரு வாரம் கழித்து நடந்தது. சத்தியமூர்த்தியை ஹாஸ்டலின் உதவி வார்டனாக நியமிக்கப்பட்டிருப்பதகாகச் சுற்றறிக்கை (circular) வந்தது. வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படும் சுபாவம் மனிதனிடம் நிறையவே உள்ளதை அவன் அறிவான். முதலில் மறுத்தாலும் பூபதியின் வேண்டுகோளை நிராகரிக்க இயலாது. வார்டன் பதவியை ஏற்றுக்கொண்டான்.

இதற்கிடையே மோகினியின் வீட்டிற்குச் செல்வந்தர் ஒருவரை அழைத்து வருகிறார் கண்ணாயிரம். தொழிலதிபர் தன் வீட்டில் நடைபெறும் திருமணத்தில் மோகினியின் நடனம் இடம்பெறுவதை விரும்புவதாகக் கண்ணாயிரம் கூறுகிறார். இதற்கிடையே மோகினி ரகசியமாகச் சத்தியமூர்த்திக்குக் கடிதம் எழுதி அதில் அஞ்சல் கூட ஒட்டாமல் அனுப்புகிறாள்.

‘குத்துவிளக்கு’ பத்திரிக்கையில் மோகினியின் பேட்டி இடம் பெற வேண்டி, அவளைப் பேட்டி காண பத்திரிக்கை உதவி ஆசிரியரும் குமரப்பனும் அவளது வீட்டிற்குச் சென்றனர். எல்லாவிதமான பேச்சு வார்த்தைகளுக்கும், கண்ணாயிரமும் முத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாட்டியக் கலைய¢ல் மோகினியின் முன்னேற்றத்திற்குக் கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீந்தாருமே காரணம் என்று முத்தழகம்மாள் கூறினாள். அதை வன்மையாக மறுக்கிறாள் மோகினி. தன்னுடைய வளர்ச்சிக்கு நாட்டியம் கற்பித்த ஆசிரியரே காரணம் என்கிறாள்.