Monday, June 20, 2011

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (நீண்ட கேள்வி)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையில் கவிஞர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

சொற்முத்துகளைக் கோர்வையாக்கி கவிதை எனும் மாலைத் தொடுப்பதில் வல்லமை பெற்றவர் கவிவாணர் ஐ. உலகநாதன். அவரது கைவண்ணத்தில் உருவான தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடப்பாடு உண்டு என்ற மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

பெற்றெடுத்த அன்னைக்குப் பழி ஏற்பட்டால் வீறு கொண்டு எழும் பிள்ளைபோல் பிறந்த பொன்னாட்டுக்குப் பகைவரால் ஊறு ஏற்படும் தருவாயில் அதனைக் களைய போராடுவது நாட்டு மக்களின் கடமை. அதனை நோக்கமாகக் கொண்டே கவிஞரின் பேனா முனையும் எழுச்சிக் கோலம் வரைந்துள்ளது.

நாட்டைச் சீர்குலைக்கும் கொடிய எண்ணத்துடன் நம் நாட்டினுக்குள் புகுந்தவர்களின் வரம்பு மீறிய செயலை முறியடிக்க ஆள்பலம் தேவைப்படுவதால் நாட்டு குடிமக்களைத் தற்காப்பு அரனாகச் செயல்பட கவிஞர் அழைக்கிறார். மேலும், தற்காப்புச் செலவினத்திற்குப் பணம் தேவைப்படுவதால் தயங்காமல் பொருளுதவி செய்யுமாறும் கவிஞர் அறைகூவல் விடுக்கிறார்.

சிறிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாக உருவாகிற சீர் மிகுந்த நம் மலேசிய நாட்டின்பால் வலிந்து பகைமை காட்டுபவர்களை நாம் தீர்த்து ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நம்மைச் சீரோடும் சிறப்போடும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் நாட்டைப் பாதுகாத்து அதன் சிறப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திட நாம் பொருளுதவி செய்வது இன்றியமையாத தேவையாகும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.

ஆறுகளும் மலைத்தொடர்களும் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் அன்புமிக்க உறவால் பிணைந்துள்ளனர். பலவித பண்பாட்டுக் கலைகளும் சிறந்தோங்கி வளர்ந்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தாய் நிலத்தை வேற்று நாட்டவர் வெல்லும் எண்ணத்துடன் செயல்பட்டால் நம் வீரர்கள் எதிர்த்து வெடிக்கும் குண்டுகளின் தாக்குதலில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுத் தொலைவில் போய் விழும் என்று கவிஞர் தம் சினத்தின் உச்சத்தில் நின்று கூறுகிறார்.

அவ்வகையில், நாட்டைத் தற்காக்கும் உன்னத நோக்கத்திற்குத் தேவையான வீரர்கள் வேண்டும் என்பதால் கவிஞர் பெற்றோர்களிடம் அறைகூவல் விடுக்கிறார். தங்கள் வீடுகளைச் சிறந்து விளங்கச் செய்வதற்குப் பெற்று வளர்த்து இளைஞர்களாக உருவாக்கியிருக்கிற குழந்தைகளை நாட்டைப் பகைவரிடமிருந்து காத்து அதன் தன்மதிப்பை விளங்கச் செய்வதற்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளைப் பெற்றவர்களாக விளங்கும் அவர்களும் பகைவரால் விளையும் கேடுகளைக் களைந்து பெருமை விளையச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்கிறார்.

வேற்று நாட்டினர் நம் தாய் நாட்டின் மீது பகைமை கொண்டு லலிந்து போரைத் திணிக்க முயலுவதால் அவர்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் திரளாக அணிசேர வேண்டுமென்ற நம் தலைவர் துங்குவின் ஆணைக்குச் செவிசாய்க்கும்படி கவிஞர் வேண்டுகிறார். மேலும், வீறு கொண்ட வேங்கையென எதிரிகளை எதிர்க்க நாம் பொங்கி எழுந்துவிட்டால் அந்தத் தீயவர்களுக்கு நிலத்தின் அடியில்தான் இருப்பிடம் வாய்க்கும் என்ற உண்மைப் புலப்படும் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அத்துடன், எப்படியாவது நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நேரான வழியைவிட்டு அங்கும் இங்குமாக மாறித் தப்பான பாதையில் பகைவர்கள் அடியெடுத்து வைத்துவிட்டனர். எனவே, அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடியையும் கூறாகச் செய்து, அவர்கள் மறுக்க இயலாது ஒப்புக் கொள்ளுமாறு நம் வீரத்தை அவர்களுக்கு உணர்த்திட வேண்டியது நம் கடப்பாடாகும் என்று கவிஞர் நினைவுறுத்துகிறார்.

புறத்தே பகை சூழும் காலத்தில், உள்ளே நிலவும் வேறுபாடுகள் நாட்டை வலிமைகுன்றச் செய்து பகைவருக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, நாட்டுக்கு இடர்சூழும் காலத்தில் மக்கள் நாட்டுத் தலைவரின் ஆணையை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் முழுமனத்துடன் ஏற்றுச் செயற்பட வேண்டியது முக்கியமானது என்ற கருத்தினையும் கவிஞர் முன்வைத்துள்ளார். அதைத் தவிர, ஒரு நாட்டில் எத்துணை இயற்கை எழிலும் வளமும் செறிந்திருந்தாலும், கலைகளும் பண்படும் வளர்ந்திருந்தாலும், புறப்பகைவரிடமிருந்து அந்நாட்டைப் பாதுகாக்க முடியாத மக்களுக்கு அந்த நலன்களும் வளங்களும் பயன்பட வாய்ப்பில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்க கவிஞர் தவறவில்லை.

ஆகவே, கவிஞர் கூறியபடி நாம் நன்றியுணர்ச்சியுடன் தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவது இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் உலக அரங்கில் மலேசிய தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும்.