Saturday, February 21, 2009

தமிழ் இலக்கிய வினாத்தாளின் அமைப்பு

நேரம் : 2 மணி 30 நிமிடம்
நேர ஒதுக்கீடு : பாகம் ஒன்றுக்கு 1 மணி நேரத்தையும், பாகம் இரண்டுக்கு 1 மணி 30 நிமிட நேரத்தையும் ஒதுக்கி விடையளிக்க முயல்வது நலம்.

வினாக்களுக்கான பிரிவுகளும் புள்ளிகளும்
பாகம் I - [40 புள்ளி]
பிரிவு 1 : நாவல் (14 புள்ளி)
பிரிவு 2 : நாடகம் (14 புள்ளி)
பிரிவு 3 : கவிதை (12 புள்ளி)

பாகம் II - [60 புள்ளி]
பிரிவு 1 : நாவல் (20 புள்ளி)
பிரிவு 2 : நாடகம் (20 புள்ளி)
பிரிவு 3 : கவிதை (20 புள்ளி)

பாகம் I (கேள்விகளின் அமைப்பு)
பிரிவு I (நாவல்) & பிரிவு II (நாடகம்)
மேற்காணும் ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். ஒரு பிரிவில் ஒரு கேள்விக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.

கேள்வி (அ):
நாவல் / நாடகம் தொடர்பான இலக்கியக் கூறுகள் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும் (Komsas) கலைச்சொற்கள் தொடர்புடையது) இக்கேள்விகளுக்கு ஒரே வரியில் / ஒரே சொல்லில் விடை எழுதினால் போதும்.
[1 புள்ளி]

கேள்வி (ஆ):
நாவல் / நாடகத்தைப் பற்றிய பொதுவான கேள்வி ஒன்று கேட்கப்படும். பெரும்பாலும் இரண்டு விடைகளையுடையதாக இருக்கும். விடை சுருக்கமாக, இரண்டு சொற்களில் / வரிகளில் இருந்தால் போதும்.
[2 புள்ளி]



கேள்வி (இ):
நாவல் / நாடகம் (கதையை) ஒட்டிய ஒரு கருத்துணர்க் கேள்வி இடம்பெறும். (ஏன், எதற்கு, எவ்வாறு, என்ன, காரணம் என்பதன் கேள்வி) இதற்கு விடை சுருக்கமாக 5-ல் இருந்து 8 வரிகளில் இருந்தால் போதும்.
[4 புள்ளி]



கேள்வி (ஈ):
ஒரு சிறு பகுதி கொடுக்கப்படும். "இப்பகுதி பெரும்பாலும் ஒரு கதைப்பாத்திரத்தின் பேச்சிலிருந்து (dialog) எடுக்கப்பட்டதாக இருக்கும். அதனையொட்டி 2 வினாக்கள் கேட்கப்படும்.

கேள்வி (ஈ) (i):
யார் யாரை நோக்கிக் கூறியது? எனும் (வழக்கமான) கேள்வியாகவோ, கொடுக்கப்பட்ட பகுதியோடு கதைப்பாத்திரங்கள் யாவர்? எனும் கேள்வியாகவோ, பகுதியில் இடம்பெறுகிற "நீ" மற்றும் "நான்" என்பவர்கள் யாவர்? எனும் கதைப்பாத்திரங்களை அடையாளங்காணுகிற கேள்வியாகவோ அமையலாம். விடை இரண்டு சொற்களில் அல்லது ஒரு வரியில் அமைந்திருந்தால் போதும்.
[2 புள்ளி]

கேள்வி (ஈ) (ii):
கொடுக்கப்பட்டுள்ள பகுதி இடம்பெற்ற (முன்) சூழலை; விவரிக்கச் சொல்லும் (வழக்கமான) கேள்வியாகவோ, கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குப் பிறகு நேர்ந்திருக்கும் (பின்) சூழலை விவரித்து எழுதும் கேள்வியாகவோ அமையலாம். இக்கேள்விக்கு 6-ல் இருந்து 10 வரிகளில் விடை எழுதினால் போதும்.
[5 புள்ளி]



பிரிவு 3 (கவிதை)
கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் பகுதியை வாசித்து அதனடியில் காணப்படும் கேள்விகளுக்குச் சுருகமான விடை எழுத வேண்டும்.

கேள்வி (அ):
கவிதையின் பாடுபொருள் (கருப்பொருள்) பற்றி கேட்கப்படும். ஒரே வரியில் விடை எழுதுதினால் போதும்.
[1 புள்ளி]



கேள்வி (ஆ):
கவிதை இயற்றிய கவிஞரைப் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும். (பெயர், புனைப்பெயர், பட்டம், பெற்ற பரிசுகள் போன்ற ஏதாவதொரு விபரம் வினவப்படும்) இதற்கு ஒரு சொல்லில் அல்லது ஒரு வரியில் விடை எழுதினால் போதும்.
[1 புள்ளி]



கேள்வி (இ):
கொடுக்கப்பட்ட கவிதைக் கண்ணிகள் (1/2/3...) உணர்த்தும் கருத்தை விளக்கி எழுத வேண்டும்.
[4 புள்ளி]



கேள்வி (ஈ):
கவிதை இலக்கணம் (யாப்பு) மற்றும் அணிச்சிறப்புகள் தொடர்பான இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வி (ஈ) (i):
கொடுக்கப்பட்ட கவிதை வரிகளில் காணும் எதுகை - மோனை, சந்தம் போன்ற அடிப்படை யாப்பிலக்கணம் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும். பெரும்பாலும் இரண்டு விடைகள் "ளிக்க வேண்டிய கேள்வியாக இஃது அமையும்.
[2 புள்ளி]

கேள்வி (ஈ) (ii):
கொடுக்கப்பட்ட கவிதை வரிகளில் காணும் சிறப்புகளைப் பற்றி வினவப்படும். "யாணியிலகணங்களான உவமை, உவமானம், உவமேயம், உருவகம், உயிரூட்டம், முரண், சொல்லாட்சி போன்ற ஏதாகிலும் ஒன்று அல்லது இரண்டு கவிதைக்கூறுகளை அடையாளங்கண்டு விளக்கி எழுத வேண்டும். 3-ல் இருந்து 5 வரிகளில் எழுதினால் போதும்.
[4 புள்ளி]



பாகம் II தொடர்பான விளக்கங்கள் விரைவில்...........






2007 முதல் 2010 ஆண்டுக்கான பாட நூல்கள்

நாவல்
நூல் : பொன்விலங்கு
ஆசிரியர் : நா.பார்த்தசாரதி
வெளியீடு : தமிழுபுத்தகாலயம், சென்னை

நாடகம்
நூல் : காவியநாயகி
ஆசிரியர் : கலைமாமணி இரா.பழனிசாமி
வெளியீடு : கோடிமுருகன் பதிப்பகம், சென்னை



கவிதை
நூல் : கவிதைப் பூங்கொத்து
ஆசிரியர் : சீனி நைனா முகமது
வெளியீடு : உங்கள் குரல், எண்டர்பிரைஸ், பினாங்கு, மலேசியா

தெரிவு செய்யப்பட்ட கவிதைகள்
1. பானையின் ஒப்பாரி
2. இயற்கையின் ஏழைமை
3. தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ
4. மாசக்தி
5. முகம் நீ! முகவரி நீ!
6. உயிர்க்கவிதை
7. விடிவெள்ளிக் கவிஞன் நீ!
8. பஞ்சு
9. எங்கள் நாடு
10. காவியமும் ஓவியமும்
11. யார் தமிழ் படிப்பார்?
12. கோம்பா ஆறு
13. தமிழ்க்கவிதை
14. நீ உயர....!

Thursday, February 19, 2009

எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப்பாடம் - அறிமுகம்

தமிழ் இலக்கியப் பாடம் பல்லாண்டுகாலமாக மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் ஒரு பாடமாக இருந்து வருகிறது. இதற்கான பாடநூல்கள் மலேசியத் தேர்வு வாரியத்தால் (LPM) அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்டு எல்லா மாநிலக் கல்வி இலாகாவுக்கும் அறிவிக்கப்படும். இப்பாடத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க இதழ் ஒன்றினை மலேசியத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியப்பாடத்தின் மதிப்பீட்டு நோக்கம்

தமிழ் இலக்கியப் பாடத்திற்கு மலேசியத் தேர்வு வாரியம் ஏழு மதிப்பீட்டு நோக்கங்களை வரையறுத்துள்ளது. இந்த நோக்கங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். எனவே, இதனைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலலை நடத்த வேண்டும். அதற்கு உறுதுணை செய்யும் வகையில், மதிப்பீட்டு நோக்கங்களைப் பற்றிய விளக்கம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
  1. நாவல், சிறுகதை, நாடகம், கவிதை ஆகியவற்றுள் காணப்படும் கருப்பொருள், கருத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்ததி விளகுதல்.
  2. படைப்புகளில் உள்ள கதைப்பின்னல், துணைக் கதைப்பின்னல், நிகழ்வுகளின் நிரல், புதைநிலை கருத்து, தெரிநிலை கருத்து ஆகியவற்றை அடையாளங்கண்டு விளக்குதல்.
  3. கதைப்பாத்திரம், கதைப்பாத்திரப்படைப்பு மற்றும் அவற்றிக்கிடையிலான தொடர்பு பற்றி ஆராய்ந்து விளக்குதல்.
  4. படைப்பிலக்கியங்களில் உள்ள காலப்பின்னணி, இடப்பின்னணி, சமுதாயப்பின்னணி ஆகியவற்றின் பங்கினை விளக்குதல்.
  5. படைப்பாளிகளின் நோக்குநிலை மற்றும் உளப்பாங்கினை விளக்குதல்.
  6. படைப்பிலக்கியாங்களைத் திறனாய்வு செய்து அவற்றின் தரத்தை மதிப்பிடுதல்; கருத்துரைத்தல்.
  7. தமிழ்க்கதையின் நயங்கள் அல்லது தமிழ்க்கவிதையின் கூறுகளை அடையாளம் காணுதல்; விளக்கிக் கூறுதல்.

நன்றி, தேர்வு வாரியம், மலேசியா


Wednesday, February 18, 2009

பொன் விலங்கு ஒரு கண்ணணோட்டம்

இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம்
இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம்


நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இரண்டு பெரிய நெறிகள் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. ஒன்று, இன்று பரவலாகப் பலரையும் ஈர்த்துள்ள வெகுசன கலாச்சார இலக்கியம். மற்றொன்று இலக்கியம் பற்றிய சிந்தனையாளர்கள் வரவேற்கும் காத்திரமான இலக்கியம் ஆகும். வெகு சன கலாச்சார இலக்கியம் என்று பார்க்கின்ற வேளையில் அது ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்கியா போன்ற இதழ்கள் வளர்தெடுக்கும் இலக்கியமாகும். இதில் பெரும்பாலும் பெண்கள் பற்றிய மோசமான வருணனைகளுடன் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் செய்திகளைக் கொண்டிருக்கும் படைப்புகளே அதிகம் இடம் பெற்றிருக்கும். மாறாக, காத்திரமான இலக்கியம் என்பது சமூக சிந்தனையுடன் இலக்கியத்தைக் காட்டுவதுடன் உண்மையான வாழ்வியலைப் பதிவு செய்து சமூகத்தின் உண்மையான வரலாற்றைப் போற்றும் இலக்கியமாகத் திகழ்கின்றது.

அவ்வகையில், பொன்விலங்கு நாவல் வெகுசன கலாச்சார இலக்கியத்திலிருந்து விடுபட்டு ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கிய வடிவமாக செயல்படுகின்றது. ஒரு சமுதாயத்தின் படப்பிடிப்பாக இது அமையாமல் போனாலும் ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற இலட்சிய உணர்வுகளைப் பதியமிடும் ஒரு நல்ல நாவலாக இது விளங்குகின்றது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பல்வேறு செல்நெறிகள் பல காலக்கட்டங்களில் தனது செல்வாக்கினை நிறுவியுள்ளன. அவ்வகையில் அறுபதுகளில் திராவிட இயக்கங்களில் எழுச்சி நல்ல தமிழையும் உயர்ந்த இலக்கியங்களைக் கொண்ட இளைஞர் சமுதாயத்தையும் காண விழைந்தது. அவ்வகையில் நாவல்களின் கருக்களும் பாத்திரங்களும் அவ்வுணர்வுகளுக்கு வடிவம் காண முனைந்தன. அக்காலக்கட்டத்து நாவலாசிரியர்களும் குறிப்பாக, நா.பார்த்தசாரதி போன்றே¡ர் மிகவும் ஈடுபாட்டுடன் நாவல் படைக்கத் தொடங்கினர். இதில் மறைமலையடிகள் தோற்றுவித்த ‘தூயதமிழ் இயக்கமும்’ தன் பங்கினை வழங்கத் தயங்கவில்லை. அவ்வகையில் அமையப்பெற்ற நாவலே நா.பார்த்தசாரதி படைத்திருக்கும் ‘பொன்விலங்கு’ என்ற இந்நாவல்.

மல்லிகைப் பந்தல் என்ற ஊரில் பூபதி நடத்திவரும் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்ற வருகிறான் சத்தியமூர்த்தி என்ற இளைஞன். நல்ல தமிழறிவும் இலட்சிய வேட்கையும் கொண்ட இளைஞனாக உள்ளான் சத்தியமூர்த்தி. அனைவராலும் போற்றப்படுகிறான். பெண்களால் இரசிக்கப்படுவதுடன் காதலிக்கவும் படுகிறான். அதே வேளை அவனுடைய விருப்பம், பலராலும் விரும்பப்பட்டு அங்கிகரிக்க முடியாத சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நாட்டியக்காரி மோகினியிடம் திரும்புகிறது. கல்லூரியில் வழக்கம்போல் மாணவர்களின் கலாட்டாவும் கேலியும் கிண்டலும் போராட்டமும் வலுப்பெற அதையும் அடக்கி நல்வழிப்படுத்துகிறான் சத்தியமூர்த்தி. சுயநலவாதிகளினால் அவனுடைய காதல் வெற்றிபெறாமல் போக இறுதியில் ஜெர்மனிக்குப் பணி மேற்கொள்ளப்போகிறான். இந்நாவலை சத்தியமூர்த்தி என்ற இலட்சிய இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே படைத்துள்ளார் நா.பார்த்தசாரதி.

சத்தியமூர்த்தியின் இலக்கிய அறிவும் தமிழின் மேல் அவன் கொண்டுள்ள பற்றும் இந்நாவலில் நன்கு வெளிப்படுகின்றன. அதே வேளையில் மோகினியுடன் அவன் கொண்ட காதல், வெறும் இனக்கவர்ச்சியால் தோன்றியது அன்று. அதற்கும் மேலான ஆளுமையின் அடிப்படையில் அமைந்த காதலாகும். காதல் என்பதால் அன்பும், பண்பும், மரியாதையும், ஆளுமையும் இருக்க வேண்டும் என்பது இதில் தெளிவாகின்றது. சத்தியமூர்த்தி குமரப்பனுடன் கொண்ட உண்மையான நட்பின் வெளிப்பாடும் இந்நாவலில் நன்கு காட்டப்பட்டுள்ளது. அத வேளையில், வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையல்ல அது கல்லும் முள்ளும் கொண்ட இரணப்படுக்கை என்பதையும் மஞ்சள்பட்டி ஜமிந்தார் புலி கோவிந்தன், கண்ணாயிரம் போன்ற பாத்திரங்கள் வழி நாம் அறிய முடிகின்றது. இத்தகைய சுயநல மனிதர்களின் செயல்களைக் கண்டு அதிர்ந்து போகாமல் போராடி வெற்றிபெற வேண்டும் என்ற அடிநாதத்துடன் இந்நாவலில் குரல் வெளிப்படுகிறது. மகாகவி பாரதியின் கனவான புதுமைப் பெண்ணாக இந்நாவலில் வலம் வருபவள் பாரதி என்ற பாத்திரமாகும். இளம் பெண்களுக்கே உரிய பலவீனங்கள் பலவற்றை இவள் பெற்றிருந்தாலும் சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலுடன் தன் பலம் உணர்ந்து அநியாயத்தை எதிர்த்துத் துணிவுடன் போராடும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள். இவ்வாறு இந்நாவலில் வரும் இலட்சியப் பாத்திரங்கள் நமது வாழ்விற்கும் வழிகாட்டுதலாக விளங்கும் என்பது திண்ணம்.

அதை வேளையில், இந்நாவலில் ஆங்காங்கே விரவி வரும் இலக்கியச் சிந்தனைகள் நமது சங்க இலக்கியங்களின் விழுமியங்களை எடுத்துக் கூறும் வண்ணம் உள்ளன. ‘நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!’ என்ற பாடலின் வழி மனிதர்களையும் அவர்களினால் அந்த மண்பெறும் புகழையும் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள பாங்கு சிறக்கிறது. இது போன்றே தீமையும் நன்மையும் பிறர் தருவதனால் வருவதாக நினைப்பது பேதமை; அதைப் போலவே நாம் வருந்துவதற்கும் வருத்தம் தணிவதற்கும் பிறர் காரணமாக அமைவதில்லை’ என்று பொருள் வரும் பாடலான ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா - நோதலும் தணிதலும் அவற்றோரன்ன’ என்பதைப் போன்ற கருத்துகளின் சிந்தனைகள் இந்நாவலில் பல இடங்களில் விரவி வந்துள்ளன. மேலும், ‘கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே’ என்ற விவேகானந்தரின் பொன்மொழியையும் இந்நாவல் தனது அடிக்கருத்தாக கொண்டுள்ளது மிகவும் போற்றத்தக்கதாகும்.

இன்றைய மலேசிய இந்திய சமூகத்தின் பலம் இளையோர்கள்தாம். எனவே, இலட்சிய வேட்கையும் தூரநோக்குச் சிந்தனையும் கொண்ட இளைஞர் படை உருவாக வேண்டியது மிக அவசியமாகும். அவ்வகையில் ‘பொன்விலங்கு’ போன்ற நாவல்கள் இளைஞர்களின் தூய உள்ளங்களில் நல்ல விதைகளை விதைக்க முடியும். இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பதின்ம வயதில் அறிந்துகொள்ள வேண்டிய உண்மையான காதல் பற்றிய சிந்தனையையும் இளைஞர்கள் கொள்ள வேண்டிய ஒழுக்க வாழ்க்கை பற்றிய முறைகளையும் அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் தமிழ், தமிழ் இலக்கியத்திற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளையும் இந்நாவல் வலியுறுத்துகிறது என்ற சொன்னால் அது மிகையன்று. எனவே, இளையோர்களும் இலக்கியவாதிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய ஓர் உன்னதமான நாவல் நா.பார்த்தசாரதியின் ‘பொன்விலங்கு’ ஆகும்.