Saturday, April 2, 2011

நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை

பொன் விலங்கு நாவலின் துணைக் கதாப்பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை ஆகிய இருவரின் பாத்திரப்படைப்யை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். இந்நாவலில் துணைக் கதாப்பாத்திரமாக வலம் வரும் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை, நாவலின் கதையோட்டத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நாவலில் இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும் வேறுபட்டு அமைந்துள்ளது.

பூபதி மல்லிகைப் பந்தலில் ஒரு கலைக்கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக வலம் வருகிறார். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராக பூபதி இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத் தேர்வின் போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் பூபதி மனத்திருப்தி அடைந்தாலும், இன்னொரு வயது முதிர்ந்த ஓர் ஆசிரியரையும் அழைத்து அதே விரிவிரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்துகிறார். கல்லூரி முதல்வரின் முறையீடுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து, சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்குத் தன் கலைக்கல்லூரியில் நியமிக்கிறார். இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.

மேலும், பூபதி தரமான கல்லூரியை உருவாக்கும் கொள்கையுடையவராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மல்லிகைப் பந்தலில் உள்ள கலைக்கல்லூரியின் நிர்வாகியாக இருக்கும் அவர் கட்டொழுங்கும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். அதற்காக வேண்டிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்ட சிறந்த பண்புடைய விரிவுரையாளர்களை நியமிக்க எண்ணுகிறார். அதைத் தவிற, ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்க முனைப்புக் காட்டுகிறார். இவற்றின் மூலம் கலைக்கல்லூரியின் பெயரை மேம்படுத்த விரும்புகிறார். தொழிலதிபராக விளங்கினாலும் படத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கல்வித் தொண்டின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவராக விளங்குகிறார்.

பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் போக்குடையவராக பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார். இக்குணம் கல்லூரியின் முதல் நாளன்று அவர் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது வெளிப்படுகிறது. தேநீர் விருந்தின் போது அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும்போது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் உரையாடுவதைக் காண்கிறார். அந்நிகழ்வின்போது தமிழில் பேசிய சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையைத் தமிழில் விளக்கியதை வகுப்பு வெளியிலிருந்து கண்ட பூபதி அவனைப் பாராட்டினார். அவரின் திறமைக்குச் சான்றாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார். பிறரின் திறமையை ஆதரிக்கும் அவரின் பண்பு இந்நிகழ்வுகளின் வழி நமக்குத் தெரிய வருகிறது.

அதுமட்டுமின்றி, பூபதி சிறந்த தந்தையாகவும் இந்நாவலில் உலா வருகிறார். தன் மகளான பாரதியை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். தாய் இல்லாமல் வளரும் பாரதிக்குத் தாய் இல்லாத நினைவு வராதபடி அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அவளின் ஆசைப்படி கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கும் சம்மதிக்கிறார். தன் மகளைச் சிறந்த முறையில் வளர்த்து நற்பண்புகளுடனும் அடக்கமுடனும் உருவாக்கும் சிறந்த தந்தையாக பூபதி இந்நாவலில் விளங்குகிறார்.

சத்தியமூர்த்தியின் அப்பா ஒரு முன்னாள் தமிழாசிரியராக நாவலில் வலம் வருகிறார். இவர் வறுமையைப் பலவீனமாக எண்ணுபவராக நாவலில் இடம் பெற்றுள்ளார். தான் செய்த தமிழாசிரியர் தொழில்தான் வறுமையின் பிடியில் இருக்க காரணமாக அமைந்தது என எண்ணுகிறார். வறுமையில் இருப்பதால் மஞ்சள் பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற வசதி படைத்தவர்களின் கீழ் வாழவேண்டும் என்று யூகித்துக் கொண்டு வறுமையை பலவீனமாக உருமாற்றிக் கொள்கிறார். அடிமை வாழ்கை வாழத் தயாராகிறார். ஆகவே, ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற பணபலமுடையவர்களின் கீழ் அடிமையாக வேலை செய்ய முடிவு செய்கிறார்.

தொடர்ந்து, குடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா படைக்கப்பட்டுள்ளார். தாசிக் குலத்தில் பிறந்த மோகினியைச் சத்தியமூர்த்தி காதலிப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். குலத்தைப் பெரிதா எண்ணும் அவர் மோகினியை வெறுக்கிறார். அவளை மணக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தியுடன் வாக்குவாதம் நடத்துகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மாளிகையில் அடைப்பட்டிருக்கும் மோகினியைக் காணச் சென்ற சத்தியமூர்த்தியைக் கண்டு கோபம் அடைகிறார்; அவனைத் தடுக்கிறார்.

நேர்மையை எண்ணாமல் தீமைக்குத் துணைபோகும் மனிதராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா காணப்படுகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் வஞ்சக எண்ணம் படைத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முற்படுகிறார் சத்தியமூர்த்தியின் அப்பா. கண்ணாயிரம் போன்ற தீயவர்களின் பேச்சைக் கேட்டு, சொந்த மகனையே வேதனைப்படுத்துகிறார். கண்ணாயிரத்தின் ஏவலுக்கு ஏற்ப சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுதத்தைக் கொடுத்து செய்யாத தவற்றிக்கு மன்னிப்புக் கோறுமாறு கேட்கிறார். ஆனால், சத்தியமூர்த்தி மறுத்துக் கடிதத்தைப் பார்த்துக் கோபமடைகிறான்.

ஆகவே, பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் அப்பா இருவரும் நாவலின் கதையோட்டம் சிறப்பாக அமைய அவர்களின் பாணியில் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதையை வாசகர்கள் இரசிக்கும்படி நகர்த்திச் சென்று நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது எனலாம்.

ஆக்கம்: பொ.உமாபாரதி, SMK Universiti 2, Johor Bahru, Malaysia.

1 comment: