Thursday, April 7, 2011

கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா

கோம்பா ஆறு
(கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, புக்கிட் ரோத்தான், மலேசியா)

நீர்க்கோல மிட்டுமணற் பாதை போட்டு
நினைத்தபடி நனைக்கின்ற ஆற்றல் பெற்றுப்
போர்க்கால வரலாற்றில் புதைந்து மீண்டும்
புகழ்தொட்டு நடக்குதுபார் கோம்பா ஆறு!
தேர்க்காலால் பாண்டியனும் புகழைப் பெற்றான் பெற்றான்
ஊர்க்காலால் புலித்தேவன் வெற்றி நட்டான்
நீர்க்காலால் சிலாங்கூரில் நிதம் நடக்கும்
நிதியாறே! வரலாறே! கோம்பா ஆறே!

காலையிலே கதிரவனால் தங்க மாகிக்
கடும்பகலில் கன்னியரின் கன்ன மாகி
மாலையிலே செம்பரத்தை போல மாறி
மணியிரவில் வெண்ணிலவால் முல்லை யாகி
சோலையிலே தென்றலுக்குத் தொட்டி லாகித்
தூங்காமல் நிறங்காட்டும் கோம்பா ஆறு!
நாளையெனும் நாள்பிறக்க இரவு வேண்டும்
நாம்சிறக்க ஆறுகளின் உறவு வேண்டும்!

இருநதிகள் இணையுமிடம் கோலா லம்பூர்
இல்லையெனில் இன்றிருக்கும் வரலா றில்லை
பெருநதியைத் தந்தவிரு நதிகள் அன்று
பிணைந்ததனால் பெருமைஎலாம் ஒருங்கே பெற்றோம்
இருமுகமும் ஒருமுகமாய்ச் சேராவிட்டால்
எதிர்காலம் இருளாகும் தேசி யத்தில்
வறுமைகளை ஒழிப்பதற்குக் கோம்பா போல
வாழுகின்ற இனம்மூன்றும் கலத்தல் வேண்டும்

குளிப்பதற்கும் காதலியைக் கொஞ்சு தற்கும்
கொஞ்சநேரம் கண்ணயர்ந்து படுப்ப தற்கும்
களிப்பதற்கும் குடும்பத்தின் கவலை எல்லாம்
களைவதற்கும் ஏற்றவிடம் ‘உலுகோம் பா’தான்
வழிப்பயணம் நீள்வதற்கும் ‘துரியான் கோம்பா’
வகைசெய்யும் சூடான ‘கூவே கோம்பா’
களிப்பாக்கின் நிறங்காட்டிப் பசியைப் போக்கும்
கண்டிப்பாய் நீங்களங்கே போக வேண்டும்

No comments:

Post a Comment