Wednesday, February 9, 2011

மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (பொதுக் கட்டுரை 2)

2012ஆம் கல்வியாண்டில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தில் அறிமுகப்படுத்த இருக்கின்ற மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியத்தைப் பற்றி மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்த செய்தி.
(நன்றி, மலேசிய நண்பன் ஞாயிற்றுக்கிழமை 6-2-2011)


உள்நாட்டுப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழ் நூல்களை எஸ்.பி.எம். இலக்கியப் பாடத்திற்குக் கல்வி அமைச்சு ஏற்பதில்லை என்னும் குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

அக்குறையை நீக்கும் வண்ணம் 2012-2015ஆம் ஆண்டுகளுக்குரிய இலக்கியப் பாடத்திற்கு (கவிதை) அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை அரசு ஏற்றுள்ளது. நாவல் பிரிவிற்கு ஐ.இளவழகு எழுதி, சன்ரைஸ் ஸ்டோர் வெளியிட்ட இலட்சியப் பயணத்தைத் தெரிவு செய்துள்ளது. இது மலேசியத் தமிழ்ப் படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும். உள்நாட்டு இலக்கியம், எதிர்காலத் தலைமுறையான மாணவர்களிடையே பரவவும், அவர்களுக்கு நாட்டுப் பற்று, சமுதாய உணர்வு, தன்முனைப்புப் போன்றவை மேலோங்கவும் இது வழிவகுக்கும்.

மலேசியக் கல்வி அமைச்சு, பாட நூலாக அங்கீகரித்துள்ள மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலைப் பற்றி இங்குச் சிறிது குறிப்பிடுவது முதன்மையாகும்.

முனைவர் முரசு.நெடுமாறன் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரிதின் முயன்றுதேடித் திரட்டிய முயற்சியாகும். அவர் நியமித்த தகுதி வாய்ந்த குழுவினர்தம் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் உருவானது இக்களஞ்சியம். இது 254 மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழ்க் கூறு நல்லுலகம் நிமிர்ந்து பார்க்க வைத்த ஓர் அரும்படையல் ஆகும். புலம் பெயர்ந்த ஒரு தமிழினப் பிரிவு, தாய் தமிழுக்குச் சூட்டிய ஒப்பற்ற ஓர் அணியாகும். இக்களஞ்சியம் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு தலைமைத் தொகுப்பாசிரியருக்கு உயரிய பாவேந்தர் பாரதிதாசன் விருதளித்துச் சிறப்புச் செய்தது (1978). இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அந்நூலுக்கு முதல் பரிசளித்தது. 1977ஆம் ஆண்டின் ‘சிறந்த நூலாசிரியர்’ என்னும் விருதையும் தலைமைத் தொகுப்பாசிரியருக்கு அளித்தது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் களஞ்சியத்தில் இடம் தந்தமையைப் பாராட்டி ‘தமிழவேள்’ விருதளித்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு வெ.5000.00 வழங்கி, அவ்வாண்டின் சிறந்த நூல் என்னும் சிறப்பைக் களஞ்சியத்திற்கு வழங்கியது. இப்பொழுது மலேசியக் கல்வி அமைச்சும் தன் அங்கீகாரத்தை அளித்துள்ளளது.

இங்ஙனம் தமிழ்க்கூறு நல்லுலகால் ஒரு சேரப் பாராட்டப்பெற்ற இக்களஞ்சிய உருவாக்கத்திற்குத் துணை நின்றவர்களைக் குறுப்பிடுவது நன்றிக்குரிய செயாலாகும். நூல் உருவாக்கப் பெரும் பணிக்குத் தமிழறிஞர் டத்தோ ஆ.சோதிநாதன் போன்ற சான்றோர் பெருமக்கள் தகவுரை நல்கி வழிநடத்தியுள்ளனர். பெரும் புலவர்களாகவும் பதிப்புச் செம்பல்களாகவும் விளங்கிய நினைவில் வாழும் பேரா இராம சுப்பிரமணியரும் புலவரடல் அ.நக்கீர அடிகள் இங்குவந்து ஆறு மாதங்கள் தங்கி ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டி நூலை உரிய பதிப்பாக உருவாக்க அரும்பாடுபட்டனர். முனைவர் முரசு நெடுமாறனுடன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற புலவர் ப.மு.அன்வர், எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன், செவ்விசைச் சித்தர் ரெ.சண்முகம் ஆகியோர் ஆற்றிய பணி போற்றுதற்குரிய அரும்பணியாகும். பல்லாயிரக்கணக்கான கவிதைகளைப் படித்து, ஆய்வுக்குரிய கவிதைகளைத் தெரிவு செய்யும் பணியில் கவிஞரேறு அமலதாசன் (சிங்கப்பூர்), சதாசிவம் வீரையா (சிங்கப்பூர்), சை.பீர்.முகம்மது, பி.கோவிந்தசாமி, மணிக்கவிஞர் பாதாசன், கவிச்சுடர் காரைக்கிழார், கவிஞர் மைதீ.சுல்தான் ஆகியோர் ஈடுபட்டு ஒத்துழைத்தனர்.

1887 முதல் 1987ஆம் ஆண்டு வரையாலான நூறு ஆண்டு காலக் கவிதைகளை ஆய்வு செய்து 650 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் பணியும் தமிழபம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாட்டுத் தமிழர் வரலாற்றைத் தேடித் திரட்டி வரலாற்று வாயில் எழுதும் பணியும், கவிஞர்களைப் பற்றிய குறிப்புகள், பாடல்களில் புலங்கள் போன்றவற்றைத் தொகுத்தெழுதவும் பத்தாண்டு காலம் செலவானது.

இந்த நீண்ட காலகட்டத்தில் எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், தொகுப்புப் பணி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துத் தொகுப்புக் குழுவும் பதிப்புக் குழுவும் தம் பணிகளைச் செம்மையாய் நிறைவேற்றி தமிழ்க்கூறு நல்லுலகில் ஓர் அழுத்தமானவரலாற்றைப் பதித்தன. மேற்படி பட்டியலில் இடம்பெறாத இன்னும் பல தொண்டு மனங்களின் உழைப்பும் இங்குக் குறிக்கத்தக்கனவாகும்.

ஓர் அரசோ, பல்கலைக்கழகமோ மேற்கொள்ள வேண்டிய பெருஞ் செயலை, தனி மாந்தர் ஒருவர் தலைமையேற்று, உறுதியாக நின்று எல்லாரையும் அரவணைத்துச் செயலாற்றி வெற்றிக்கண்டிருப்பது வியந்து பாராட்டுதற்குரிய தென்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகின்றனர்.

1080 பக்கங்கள் கொண்ட பெருநூலான இத்தொகுப்பிலிருந்து இலக்கியப் பாடத்திற்கேற்ற முப்பது கவிதைகளை மட்டும் தொகுத்து மாணவர்ப் பதிப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment