Tuesday, February 1, 2011

மலேசிய எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ்வாழ்த்து

நிலைபெற நீ வாழியவே!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ் வாழ்த்து கடந்த வாரம் வெளியீடு கண்டது. கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதி, ஆர்.பி.எஸ். ராஜூ இசையமைத்து, துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இங்கு இடம்பெறுகிறது.

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!


எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர்அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!


செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!


குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!


இந்த தமிழ் வாழ்த்து குறுந்தட்டுகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தேவைப்படுகிறவர்கள் 012-2668416(மலேசியா) என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. நல்லதொரு தமிழ் வாழ்த்து

    ReplyDelete