Sunday, November 13, 2011

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.


மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார். தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம்.


எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.


மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார். தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று.


பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ‘ஷி வாக்ஸ் இன் பியூட்டி’ என்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.


அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும், இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.


சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார்.


இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ‘ஏய் பூபதி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.


ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டு” என்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார். செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


குமாரி புஷ்பவள்ளி, ஜொகூர், மலேசியா

Tuesday, August 2, 2011

பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...

எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு இலக்கிய வகுப்பு,
தஞ்சோங் ரம்புத்தான் இலக்கியச் சங்கம் நடத்துகிறது
.


எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., தேர்வில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்திட பேராக், ஈப்போ அருகேயுள்ள தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்இலக்கியச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


தம்பூன், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், பெர்ச்சாம் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றனர்.


சங்கங்களின் பதிவிலாக்காவால் முறையாகப்பதிவு பெற்ற சங்கமான, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ் இலக்கியச் சங்கம், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபடுமென்று சங்கப் பொற்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: 016-5944528.

Wednesday, July 6, 2011

நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)

காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக.

இரா.பழனிசாமியின் வைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும். இதில் எதிமறைக் கதைப்பாத்திரங்களான காளிங்கராயரும் தளபதியும் பல சதித்திட்டங்களைத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.

முதலில், பொன்னிக்குத் தண்டனை பெற்றுத் தந்து சோழன் கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். கரிகாலன் போர் நெறியை மீறியதாகக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான். இருவரும் இரும்பிடர்த்தலையாரைத் தூண்டிவிட அவர் கரிகாலனைச் சந்தித்துப் பொன்னி சேரனின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார். ஆனால், கரிகாலனோ வழக்கு விசானைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க மறுத்து, தீர விசாரிப்பதாகக் கூறினான். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இஃது ஏமாற்றமாக முடிந்தது.

இரண்டாவதாக, பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று கூறி கரிகாலன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். பொன்னியின் வழக்கை இரண்டு நாட்களுக்குக் கரிகாலன் ஒத்திவைத்ததைச் சாதகமாக்கி, பொன்னி எழுதியதுபோல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதை அந்தப்புரத்தில் கரிகாலன் தவறவிட்டதாக வேண்மாளிடம் தருகிறார் தளபதி. அவள், அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய, அவர் கலிகாலனிடம் முறையிடுகிறார். அவ்வேளை பொன்னி உண்மையாக எழுதிய ஓலை வர கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது. இதனால் அவர்களின் இரண்டாவது திட்டமும் தோல்வியடைகிறது.

மூன்றாவதாக, பாண்டிய மன்னனின் சோழ நாட்டைக் காப்பாற்ற இருவரும் திட்டம் தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார். இருவரும் ஓலைகளை மாற்றிக் கொள்கின்றனர். அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் பூண்ட கரிகாலன், காளிங்கராயர் மீது மோதி ஓலையைப் பறிக்கிறான். அதன்வழி பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும் காளிங்கராயரின் துரோகத்தையும் அறிகிறான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஐயாயிரம் கொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்து விட்டுப் போன அந்த ஒற்றனைக் கலிகாலன் பின்னர் கைதுசெய்கிறான். பாண்டியனையும் அவனது படைகளையும் பின்னர் சிறைச் செய்து சதித்திட்டத்தை முறியடிக்கிறான்.

நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியை மன்னன் மீது போட விஷ வைத்தியன் கார்கோடனை ஏவுகின்றனர். கார்கோடனை அரசாங்க விடுதிக்கு அதிகாரியாக நியமித்துப் பொன்னியை விஷம் வைத்துக் கொல்லுமாறு தூண்டுகின்றனர். மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி அவன் சம்மதிக்கிறான். விருந்தினர் விடுதியில் கார்கோடகன் பொன்னியைத் தேடுகிறான். கோட்டைக் காவலர்கள் தீவட்டி, அமாவாசை மூலம் கார்கோடகனின் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு வருகிறான். கார்கோடகனிடமிருந்த சோற்று வட்டிலைப் பறித்துக் கரிகாலன் குருவிகளுக்கு உணவிடுகிறான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குருவிகள் துடிதுடித்து இறக்கின்றன. சதித்திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள, அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான்.

இறுதியாக, கார்கோடகனைச் சிறையில் அடைப்பதற்குக் காரணமான துறவியைக் (கரிகாலன்) கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர். வேங்கையன் என்னும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப் பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர். ஆனால், அவன் துறவியைக் கொல்ல முயன்ற பொழுது பொன்னி எச்சரித்ததால் துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் காப்பாற்றப்படுகிறார். பின்னர், கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடக்கிறான்.

இப்படி, எல்லாச் சதித்திட்டங்களும் தோல்வியடைய காளிங்கராயரும் தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். இருவரும் செய்த சதிகளை அரசவையில் அம்பலப்படுத்திய கரிகாலன் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான்.

Monday, June 20, 2011

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (நீண்ட கேள்வி)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையில் கவிஞர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

சொற்முத்துகளைக் கோர்வையாக்கி கவிதை எனும் மாலைத் தொடுப்பதில் வல்லமை பெற்றவர் கவிவாணர் ஐ. உலகநாதன். அவரது கைவண்ணத்தில் உருவான தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடப்பாடு உண்டு என்ற மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

பெற்றெடுத்த அன்னைக்குப் பழி ஏற்பட்டால் வீறு கொண்டு எழும் பிள்ளைபோல் பிறந்த பொன்னாட்டுக்குப் பகைவரால் ஊறு ஏற்படும் தருவாயில் அதனைக் களைய போராடுவது நாட்டு மக்களின் கடமை. அதனை நோக்கமாகக் கொண்டே கவிஞரின் பேனா முனையும் எழுச்சிக் கோலம் வரைந்துள்ளது.

நாட்டைச் சீர்குலைக்கும் கொடிய எண்ணத்துடன் நம் நாட்டினுக்குள் புகுந்தவர்களின் வரம்பு மீறிய செயலை முறியடிக்க ஆள்பலம் தேவைப்படுவதால் நாட்டு குடிமக்களைத் தற்காப்பு அரனாகச் செயல்பட கவிஞர் அழைக்கிறார். மேலும், தற்காப்புச் செலவினத்திற்குப் பணம் தேவைப்படுவதால் தயங்காமல் பொருளுதவி செய்யுமாறும் கவிஞர் அறைகூவல் விடுக்கிறார்.

சிறிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாக உருவாகிற சீர் மிகுந்த நம் மலேசிய நாட்டின்பால் வலிந்து பகைமை காட்டுபவர்களை நாம் தீர்த்து ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நம்மைச் சீரோடும் சிறப்போடும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் நாட்டைப் பாதுகாத்து அதன் சிறப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திட நாம் பொருளுதவி செய்வது இன்றியமையாத தேவையாகும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.

ஆறுகளும் மலைத்தொடர்களும் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் அன்புமிக்க உறவால் பிணைந்துள்ளனர். பலவித பண்பாட்டுக் கலைகளும் சிறந்தோங்கி வளர்ந்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தாய் நிலத்தை வேற்று நாட்டவர் வெல்லும் எண்ணத்துடன் செயல்பட்டால் நம் வீரர்கள் எதிர்த்து வெடிக்கும் குண்டுகளின் தாக்குதலில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுத் தொலைவில் போய் விழும் என்று கவிஞர் தம் சினத்தின் உச்சத்தில் நின்று கூறுகிறார்.

அவ்வகையில், நாட்டைத் தற்காக்கும் உன்னத நோக்கத்திற்குத் தேவையான வீரர்கள் வேண்டும் என்பதால் கவிஞர் பெற்றோர்களிடம் அறைகூவல் விடுக்கிறார். தங்கள் வீடுகளைச் சிறந்து விளங்கச் செய்வதற்குப் பெற்று வளர்த்து இளைஞர்களாக உருவாக்கியிருக்கிற குழந்தைகளை நாட்டைப் பகைவரிடமிருந்து காத்து அதன் தன்மதிப்பை விளங்கச் செய்வதற்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளைப் பெற்றவர்களாக விளங்கும் அவர்களும் பகைவரால் விளையும் கேடுகளைக் களைந்து பெருமை விளையச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்கிறார்.

வேற்று நாட்டினர் நம் தாய் நாட்டின் மீது பகைமை கொண்டு லலிந்து போரைத் திணிக்க முயலுவதால் அவர்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் திரளாக அணிசேர வேண்டுமென்ற நம் தலைவர் துங்குவின் ஆணைக்குச் செவிசாய்க்கும்படி கவிஞர் வேண்டுகிறார். மேலும், வீறு கொண்ட வேங்கையென எதிரிகளை எதிர்க்க நாம் பொங்கி எழுந்துவிட்டால் அந்தத் தீயவர்களுக்கு நிலத்தின் அடியில்தான் இருப்பிடம் வாய்க்கும் என்ற உண்மைப் புலப்படும் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அத்துடன், எப்படியாவது நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நேரான வழியைவிட்டு அங்கும் இங்குமாக மாறித் தப்பான பாதையில் பகைவர்கள் அடியெடுத்து வைத்துவிட்டனர். எனவே, அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடியையும் கூறாகச் செய்து, அவர்கள் மறுக்க இயலாது ஒப்புக் கொள்ளுமாறு நம் வீரத்தை அவர்களுக்கு உணர்த்திட வேண்டியது நம் கடப்பாடாகும் என்று கவிஞர் நினைவுறுத்துகிறார்.

புறத்தே பகை சூழும் காலத்தில், உள்ளே நிலவும் வேறுபாடுகள் நாட்டை வலிமைகுன்றச் செய்து பகைவருக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, நாட்டுக்கு இடர்சூழும் காலத்தில் மக்கள் நாட்டுத் தலைவரின் ஆணையை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் முழுமனத்துடன் ஏற்றுச் செயற்பட வேண்டியது முக்கியமானது என்ற கருத்தினையும் கவிஞர் முன்வைத்துள்ளார். அதைத் தவிர, ஒரு நாட்டில் எத்துணை இயற்கை எழிலும் வளமும் செறிந்திருந்தாலும், கலைகளும் பண்படும் வளர்ந்திருந்தாலும், புறப்பகைவரிடமிருந்து அந்நாட்டைப் பாதுகாக்க முடியாத மக்களுக்கு அந்த நலன்களும் வளங்களும் பயன்பட வாய்ப்பில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்க கவிஞர் தவறவில்லை.

ஆகவே, கவிஞர் கூறியபடி நாம் நன்றியுணர்ச்சியுடன் தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவது இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் உலக அரங்கில் மலேசிய தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும்.

Wednesday, May 18, 2011

கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)

கவிவாணர் ஐ.உலகநாதன் (மலேசியா / தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

ஈப்போ, மலேசியா


கல்வி / தொழில்

மலேசியாவில் கல்வி பயின்று, சிங்கையில் பல பணிகள் மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் (இந்தியா) குடியேறினார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இதழியல்.


பணிகள்

சிங்கையில் 'மாதவி' இலக்கிய மாத இதழ்; பெங்களூரில் 'திருப்பம்' மாதமிருமுறை இதழ். பெங்களூர் இளம்பாவலர்களுக்குப் 'பாவலர் பூங்கா' என்னும் பயிலரங்கு நடத்துகிறார்.


படைப்புகள்

1954 முதல் கவிதை எழுது வருகிறார். இவரின் 'சந்தனக்கிண்ணம்' கவிதை நூல் மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது. திருப்புமுனை, மகரயாழ், முத்துக்கோவை, கேட்டால் கேளுங்கள், புரட்சித்தலைவர் அந்தாதி, செந்தமிழ்க் கவசம், பாவாணர் புகழ்ச்சிந்து, கண்ணம்மா, உடைந்த வீணை, தமயந்தி என்ற கவிதை நூல்களும், பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் என்ற பயணக்கட்டுரை நூலும் எழுதியுள்ளார்.


சிறப்பு அடை

கவிவாணர், பாவரசு


விருதுகள் / பரிசுகள்

1985-இல் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது'. இதுவன்றி வேறுபல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!
(கவிவாணர் ஐ.உலகநாதன்)


வஞ்ச மனத்துட‎ன் வந்து புகுந்தவர்
வாலை யறுத்திட வாராயோ - வரும்
வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை
மேலும் குவித்துட‎ன் தாராயோ?


சேரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்
சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை
வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட
வாரி நிதிக்குவை தாராயோ


ஆறு மலைத்தொடர் அ‎ன்பு மனத்தொடர்
ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே - உனை
வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடி‎ன்
வேட்டி லவர்தலை போய்விழுமே!


வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்
பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்
பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!


தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி
சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்
பொங்கி யெழுந்திடி‎ன் புல்ல ரிருப்பது
பூமியி னுள்ளெனக் கூறிரோ


அப்படி இப்படித் தப்படி வைத்தனர்
எப்படி யும்படி ஏறிடவே - அவர்
ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்
ஒவ்வொரு காலடி கூறிடவே!


(கவிதைப்பூங்கொத்து)

Friday, April 8, 2011

கவிதை நீண்ட கேள்வி : கோம்பா ஆறு

கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக.

கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார்.

இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார்.

சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார்.

சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார்.

இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார்.

இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம்.

கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார்.

ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார்.

(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )

Thursday, April 7, 2011

கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா

கோம்பா ஆறு
(கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, புக்கிட் ரோத்தான், மலேசியா)

நீர்க்கோல மிட்டுமணற் பாதை போட்டு
நினைத்தபடி நனைக்கின்ற ஆற்றல் பெற்றுப்
போர்க்கால வரலாற்றில் புதைந்து மீண்டும்
புகழ்தொட்டு நடக்குதுபார் கோம்பா ஆறு!
தேர்க்காலால் பாண்டியனும் புகழைப் பெற்றான் பெற்றான்
ஊர்க்காலால் புலித்தேவன் வெற்றி நட்டான்
நீர்க்காலால் சிலாங்கூரில் நிதம் நடக்கும்
நிதியாறே! வரலாறே! கோம்பா ஆறே!

காலையிலே கதிரவனால் தங்க மாகிக்
கடும்பகலில் கன்னியரின் கன்ன மாகி
மாலையிலே செம்பரத்தை போல மாறி
மணியிரவில் வெண்ணிலவால் முல்லை யாகி
சோலையிலே தென்றலுக்குத் தொட்டி லாகித்
தூங்காமல் நிறங்காட்டும் கோம்பா ஆறு!
நாளையெனும் நாள்பிறக்க இரவு வேண்டும்
நாம்சிறக்க ஆறுகளின் உறவு வேண்டும்!

இருநதிகள் இணையுமிடம் கோலா லம்பூர்
இல்லையெனில் இன்றிருக்கும் வரலா றில்லை
பெருநதியைத் தந்தவிரு நதிகள் அன்று
பிணைந்ததனால் பெருமைஎலாம் ஒருங்கே பெற்றோம்
இருமுகமும் ஒருமுகமாய்ச் சேராவிட்டால்
எதிர்காலம் இருளாகும் தேசி யத்தில்
வறுமைகளை ஒழிப்பதற்குக் கோம்பா போல
வாழுகின்ற இனம்மூன்றும் கலத்தல் வேண்டும்

குளிப்பதற்கும் காதலியைக் கொஞ்சு தற்கும்
கொஞ்சநேரம் கண்ணயர்ந்து படுப்ப தற்கும்
களிப்பதற்கும் குடும்பத்தின் கவலை எல்லாம்
களைவதற்கும் ஏற்றவிடம் ‘உலுகோம் பா’தான்
வழிப்பயணம் நீள்வதற்கும் ‘துரியான் கோம்பா’
வகைசெய்யும் சூடான ‘கூவே கோம்பா’
களிப்பாக்கின் நிறங்காட்டிப் பசியைப் போக்கும்
கண்டிப்பாய் நீங்களங்கே போக வேண்டும்

Saturday, April 2, 2011

நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை

பொன் விலங்கு நாவலின் துணைக் கதாப்பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை ஆகிய இருவரின் பாத்திரப்படைப்யை ஆராய்க.

தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். இந்நாவலில் துணைக் கதாப்பாத்திரமாக வலம் வரும் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை, நாவலின் கதையோட்டத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நாவலில் இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும் வேறுபட்டு அமைந்துள்ளது.

பூபதி மல்லிகைப் பந்தலில் ஒரு கலைக்கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக வலம் வருகிறார். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராக பூபதி இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத் தேர்வின் போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் பூபதி மனத்திருப்தி அடைந்தாலும், இன்னொரு வயது முதிர்ந்த ஓர் ஆசிரியரையும் அழைத்து அதே விரிவிரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்துகிறார். கல்லூரி முதல்வரின் முறையீடுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து, சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்குத் தன் கலைக்கல்லூரியில் நியமிக்கிறார். இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.

மேலும், பூபதி தரமான கல்லூரியை உருவாக்கும் கொள்கையுடையவராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மல்லிகைப் பந்தலில் உள்ள கலைக்கல்லூரியின் நிர்வாகியாக இருக்கும் அவர் கட்டொழுங்கும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். அதற்காக வேண்டிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்ட சிறந்த பண்புடைய விரிவுரையாளர்களை நியமிக்க எண்ணுகிறார். அதைத் தவிற, ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்க முனைப்புக் காட்டுகிறார். இவற்றின் மூலம் கலைக்கல்லூரியின் பெயரை மேம்படுத்த விரும்புகிறார். தொழிலதிபராக விளங்கினாலும் படத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கல்வித் தொண்டின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவராக விளங்குகிறார்.

பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் போக்குடையவராக பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார். இக்குணம் கல்லூரியின் முதல் நாளன்று அவர் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது வெளிப்படுகிறது. தேநீர் விருந்தின் போது அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும்போது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் உரையாடுவதைக் காண்கிறார். அந்நிகழ்வின்போது தமிழில் பேசிய சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையைத் தமிழில் விளக்கியதை வகுப்பு வெளியிலிருந்து கண்ட பூபதி அவனைப் பாராட்டினார். அவரின் திறமைக்குச் சான்றாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார். பிறரின் திறமையை ஆதரிக்கும் அவரின் பண்பு இந்நிகழ்வுகளின் வழி நமக்குத் தெரிய வருகிறது.

அதுமட்டுமின்றி, பூபதி சிறந்த தந்தையாகவும் இந்நாவலில் உலா வருகிறார். தன் மகளான பாரதியை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். தாய் இல்லாமல் வளரும் பாரதிக்குத் தாய் இல்லாத நினைவு வராதபடி அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அவளின் ஆசைப்படி கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கும் சம்மதிக்கிறார். தன் மகளைச் சிறந்த முறையில் வளர்த்து நற்பண்புகளுடனும் அடக்கமுடனும் உருவாக்கும் சிறந்த தந்தையாக பூபதி இந்நாவலில் விளங்குகிறார்.

சத்தியமூர்த்தியின் அப்பா ஒரு முன்னாள் தமிழாசிரியராக நாவலில் வலம் வருகிறார். இவர் வறுமையைப் பலவீனமாக எண்ணுபவராக நாவலில் இடம் பெற்றுள்ளார். தான் செய்த தமிழாசிரியர் தொழில்தான் வறுமையின் பிடியில் இருக்க காரணமாக அமைந்தது என எண்ணுகிறார். வறுமையில் இருப்பதால் மஞ்சள் பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற வசதி படைத்தவர்களின் கீழ் வாழவேண்டும் என்று யூகித்துக் கொண்டு வறுமையை பலவீனமாக உருமாற்றிக் கொள்கிறார். அடிமை வாழ்கை வாழத் தயாராகிறார். ஆகவே, ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற பணபலமுடையவர்களின் கீழ் அடிமையாக வேலை செய்ய முடிவு செய்கிறார்.

தொடர்ந்து, குடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா படைக்கப்பட்டுள்ளார். தாசிக் குலத்தில் பிறந்த மோகினியைச் சத்தியமூர்த்தி காதலிப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். குலத்தைப் பெரிதா எண்ணும் அவர் மோகினியை வெறுக்கிறார். அவளை மணக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தியுடன் வாக்குவாதம் நடத்துகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மாளிகையில் அடைப்பட்டிருக்கும் மோகினியைக் காணச் சென்ற சத்தியமூர்த்தியைக் கண்டு கோபம் அடைகிறார்; அவனைத் தடுக்கிறார்.

நேர்மையை எண்ணாமல் தீமைக்குத் துணைபோகும் மனிதராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா காணப்படுகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் வஞ்சக எண்ணம் படைத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முற்படுகிறார் சத்தியமூர்த்தியின் அப்பா. கண்ணாயிரம் போன்ற தீயவர்களின் பேச்சைக் கேட்டு, சொந்த மகனையே வேதனைப்படுத்துகிறார். கண்ணாயிரத்தின் ஏவலுக்கு ஏற்ப சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுதத்தைக் கொடுத்து செய்யாத தவற்றிக்கு மன்னிப்புக் கோறுமாறு கேட்கிறார். ஆனால், சத்தியமூர்த்தி மறுத்துக் கடிதத்தைப் பார்த்துக் கோபமடைகிறான்.

ஆகவே, பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் அப்பா இருவரும் நாவலின் கதையோட்டம் சிறப்பாக அமைய அவர்களின் பாணியில் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதையை வாசகர்கள் இரசிக்கும்படி நகர்த்திச் சென்று நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது எனலாம்.

ஆக்கம்: பொ.உமாபாரதி, SMK Universiti 2, Johor Bahru, Malaysia.

Sunday, March 20, 2011

நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : முத்தழகம்மாள்-மோகினி

முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைப் போராட்டங்களை விளக்கி எழுதுக.

இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக் கட்டத்தை நம் கண் முன்னே நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி எனும் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது.

கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக முத்தழகம்மாள் இந்நாவலில் வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.

மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வோறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தாம் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ்செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீந்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படம் எடுக்க விருப்பம் தெரிவித்த பொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறார்.

அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள், “நூலைப்போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பெண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டியிழுக்கும் பேரழகு படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை வாசித்தல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்மாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.

அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் உறவை மோகினி அறவே வெறுக்கிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் கொடிய எண்ணங் கொண்ட ஜமீந்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக்கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்து பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பின் செல்கிறாள். ஜமீந்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் மேதைப் பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீந்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும் தெய்வீகக் காதலுக்கே முன்னுரிமை கொடுத்த மோகினி மனக்கண் முன் உயிர்ந்து நிற்கிறாள்.

ஆகவே, மோகினி, முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கைகளால் உயர்ந்து நிற்கிறாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கைகளால் பின்தள்ளப்படுகிறாள்.
ஆக்கம்: ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா

Tuesday, March 15, 2011

கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!

முகம் நீ! முகவரி நீ! எனும் கவிதையில் வெளிப்படும் சிறப்புகளை விளக்கி எழுதுக.

தமிழன்னைக்கு கவிமகுடம் சூட்டிய கவிஞர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமானும் ஒருவராவார். அவரது பேனா முனை செதுக்கியுள்ள “முகம் நீ! முகவரி நீ!” எனும் செவிக்கினிய கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை, தமிழ் மொழி அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற மொழி என்பதை மையக்கருவாகக் கொண்டுள்ளது. தமிழைத் தாயாக உருவகித்து அத்தாயின் சிறப்புகளை விளக்குவதாக இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

கவிஞர் இக்கவிதையின் வாயிலாகத் தமிழின் தொன்மையைக் கூறியுள்ளார். மொழிக்கு மூலமானது ஒலி. அந்த ஒலி கடலில் இருந்து முதன் முதலாய்த் தோன்றியது தமிழ்மொழி எனவும் கலை எனும் கடலை நாவினால் கடைந்ததால் வந்த அமுதமாகத் தமிழைச் சிறப்பிக்கிறார். இதன் மூலம் உலக மொழிகளுள் பழமையான மொழி, செம்மொழி தகுதியைக் கொண்டது நம் தாய் மொழி என்று உன்னத சிறப்பினைக் கூறி நம்மைப் பெருமைப்பட வைக்கிறார்.

மேலும், “கல் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி” என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டிருந்தாலும் காலம் செல்லச் செல்ல தளர்ந்து போகும் மற்ற மொழிகளுக்கிடையே நாளுக்கு நாள் இளமைப் பெற்று வருவதாகக் கூறுவதானது மனிதன் அறிவியல் துணைக்கொண்டு கணினியுகம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி புதிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கியுள்ளதை அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாது,இவ்வுலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவை அனைத்திலும் உயர்ந்து நிற்பது தமிழ்மொழியே எனக் கவிஞர் துணிந்து கூறுகிறார். தமிழ்மொழியில் உயிருக்கும் மெய்க்கும் என தனித்தனி எழுத்துகளுடன் சிறப்புற்று விளங்குவதைப் போன்று மற்ற எந்த மொழிகளாவது இருக்கிறதா என்று நம்மை ஆராயத் தூண்டுகிறார். மெய்யெழுத்துகளில், அழுத்தத்தால் வேறுபட்ட இனங்களாகப் பிரிந்திருக்கும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றுவகை மெய்யொலிகள், இயற்கையான முறையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இனிமையாக மொழியில் பயன்படும் சிறப்பான முறையைத் தமிழ்மொழி மட்டுமே கொண்டுள்ளதை உணர்த்துகிறார்.

அத்துடன், காலமெல்லாம் உயர்வடைந்துகொண்டே இருக்கிற மொழியாகவும் தமிழ்மொழி இருக்கும் வேளையில் மற்ற மொழிகளுள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்ட மொழியாகவும் அது விளங்குவதை நாம் உய்த்துணர வேண்டும். செவ்வியல் தன்மை என்ற அரிய தகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்மொழி ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் பேச்சிலும் வாழ்வதோடு அவன் உயர்வுக்கும் வித்திடுவதைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக, ஒருவரைப் பற்றி கருத்து கூறும்பொழுது அதை நயம்பட அவர் முகம் கோணாமல் கூறும் வல்லமை பெற்றது தமிழ். ஒருவரைத் திட்டுவதற்குரிய கடுமையான சொற்களானாலும் அதைக் கூறும் போது கசப்பை விளைவிக்காமல் சிந்திக்கத் தூண்டும் இனிமை வாய்ந்ததாகத் தமிழ்மொழி விளங்குகிறது.மலர்களைக் கொண்ட பூஞ்சோலையைப் போன்று, காலம் கடக்க கடக்கச் சிறிதும் வளம் குறையாத மொழியாகத் திகழும் தமிழ்மொழியின் சிறப்பை எண்ணுங்கால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைத் தவிர, யாருக்கும் நில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்ற காற்றும், தளர்ச்சியின்றி எப்போதும் எழுச்சியுடன் நிமிர்ந்து இலங்குகின்ற ஒளியும், எந்தச் சார்புமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பயன் தரும் தமிழ்மொழி போற்றத்தக்கது என்று கவிஞர் இயம்புகிறார். அத்தகைய மொழியை ஒலிக்கும் வேளையில் நாவில் ஊறுகின்ற எச்சில்கூடத் தேனாகச் சுவைக்கிறது என்றும் கவிஞர் பூரிப்புடன் கூறுகிறார்.

தொடர்ந்து, உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டுமாய் முப்பதே எழுத்தொலிகளைக் கொண்டு மூவுலகிலும் உள்ள எந்தப் பொருளைக் குறிக்கவும், எந்தக் கருத்தை விளக்கவும், எந்த உணர்வை உணர்த்தவும் ஆற்றல் கொண்ட உலகப் பெருமொழியாகத் தமிழ்மொழி விளங்குவது வெள்ளிடைமலை. அப்பெருமொழியே வான்புகழ் வள்ளுவனின் திருநாவிலும் திருக்கரத்திலும் விளையாடி தனக்கு நிகராக வேறு நூல் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த திருக்குறள் மலர வித்திட்டிருக்கிறது.

மேலும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் கருத்துகளைச் சுலபமாக வெளிக்கொணர அரிய அமைப்பை வகுத்துத் தந்திருக்கும் ஒரே மொழியாகத் திகழ்வது தமிழ்மொழியே. பல இலக்கிய, இலக்கண செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் வாழ்வைச் செழிப்புறச் செய்திருப்பது அதன் வள்ளல் தன்மையை மெய்ப்பிக்கிறது எனலாம். எந்த மொழியை ஒப்பிட்டாலும் அந்த மொழிக்கு மூத்ததாக இருக்கும் தமிழ்மொழி நம் தாய்மொழி எனப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ளலாம். இவ்வாறு முதன்மை வகிக்கும் தமிழ்மொழி மதவேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து மதத்தின் கொள்கைகளையும் சுலபமாக மக்களிடம் போய்ச்சேர வழிவகுத்துள்ளது.வேறுபட்ட சமயக் கொள்கை இருப்பினும் தமிழ்ப்பற்று மேலோங்கி இருப்பதால் அவர்களிடையே உள்ள இணக்கம் பாதிப்புறவில்லை. தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதன் வாயிலாக தமிழர்கள் என்ற சிறப்பு அடையை நாம் பெற்றுள்ளோம். உயர்ந்த பண்பாட்டைப் பெற்று நாம் பெருமைகளுக்குரிய இனமாக உலகத்தில் வாழும் பேறும் பெற்று கிட்டியுள்ளோம். தமிழ்மொழியே நமக்கு இவ்வுலகில் அடையாளத்தையும் சிறப்பையும் வழங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள், தங்கள் முகத்தையும் முகவரியையுமே புறக்கணித்தவர்கள் ஆவார்கள் என்ற இன்றியமையாத கருத்தையும் மறைமுகமாகச் சுட்டி நம்மை உய்த்துணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.

ஆகவே, தொன்மை, தாய்மை, பொதுமை, தூய்மை, தனித்தன்மை, இனிமை, இளமை போன்ற செம்மொழித் தகுதிகளைக் கொண்டு அதன் நலம் கெடாது மென்மேலும் சிறப்பை எய்திட நம்மால் ஆன ஆக்கக் காரியங்களைச் செய்திட வேண்டும்.
(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )

Monday, March 14, 2011

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

பிறப்பு

9-11-1937 மதுரை, தமிழ்நாடு


கல்வி / தொழில்

முதுகலை (தமிழ்) பட்டமும், 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின் தமிழ்த்துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று முழுநேர இலக்கியப் பணியாற்றுகிறார்.


துறைகள் / திறன்கள்

கவிதை, உரைவீச்சு (புதுக்கவிதை), ஆய்வு.


பணிகள்

தமிழ்நாடு, தமிழன், அன்னம் விடுதூது ஏடுகளில் ஆசிரியர்; எண்ணற்ற ஆய்வுரைகள் ஆற்றியவர். உருதுக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். புதிய இலக்கியக் கோட்பாடுகளை ஆய்ந்து படைப்புகளில் கையாண்டுள்ளார்.


படைப்புகள்

பால்வீதி, நேயர்விருப்பம், சுட்டுவிரல், ஆலாபனை, விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, பித்தன், சொந்தச்சிறைகள், அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, கரைகளே ந்தியாவதில்லை ஆகியன இவருடைய நூல்கள்.


சிறப்பு அடை

கவிக்கோ.


விருதுகள் / பரிசுகள்

கவியரசர் விருது, ராணா இலக்கிய விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, அட்சர விருது, கலைஞர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.

(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

முகம் நீ! முகவரி நீ! - கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்

முகம் நீ! முகவரி நீ!
(கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு, இந்தியா)

ஒலிக்கடலில் முதன்முதலாய்
உதித்துவந்த பேரலையே!
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே!


பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காணநிதம்
இளமைபெற்று வந்தவளே!!


நயந்த மொழிகளிங்கு
நாலா யிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயர்மெய்யோ டிருப்பவர்யார்?


வல்லினமும் மெல்லினமும்
வளமான இடையினமும்
நல்லினமாய் ஒன்றுபட்டு
நடக்கவழி செய்தவளே!


உயர்மொழிநீ தனிமொழிநீ
உன்னதமாம் செம்மொழிநீ
உயிர்மொழிநீ மெய்மொழிநீ
உயர்வைத் தருபவள்நீ


வைதாலும் தித்திக்கும்
மதுரமே! காலத்தைக்
கொய்தாலும் மலர்வனத்தில்
குறையாத பூவனமே


நில்லாத காற்றைப்போல்
நிமிருகின்ற ஒளியைப்போல்
எல்லார்க்கும் பொதுவாக
இருப்பவளே உன்னைநாம்


உச்சரிக்கும் போதினிலே
ஊறுகின்ற வாயதன்
எச்சிலும் தேனாகும்
இதழ்களும் பூவாகும்


முப்பதே ஒலிகளுக்குள்
முழுவுலகும் அளப்பவளே!
ஒப்பதே இல்லாத
உயர்குறளைப் பெற்றவளே!


வலஞ்சுழித் தோடுகின்ற
வாக்கிய நதியே
நலஞ்செழித் தோங்குகின்ற
நாணய நாநயமே!


எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந் திருப்பவளே!


தேவாரம் தொடுத்தவளே!
திருவா சகத்தேனே!
நாவார ஆழ்வாரின்
நயங்களிலே ஆழ்ந்தவளே!


ஏசு மதத்தார்
ஈந்ததொரு கொள்கையினால்
ஏசா மதத்தை
எந்தமிழர்க் களித்தவளே!


மக்கா மதீனாவின்
மக்காத கொள்கையுடன்
நிக்கா முடித்தவளே!
நேயம் வளர்த்தவளே!


உன்னாலே பிறந்தோம்
உன்னாலே வளர்ந்தோம்
உன்னாலே பெருமைபெற்று
உலகத்தில் வாழுகின்றோம்!


அகம்நீ புறம்நீஎம்
ஆருயிரும் நீஎங்கள்
முகம்நீ முகவரிநீ
முடியாத புகழும்நீ!


கவிதைப் பூங்கொத்து

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9

பயிற்சி 9

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. இரயில் சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி மோகினியை எந்தக் கோயிலில் சந்தித்தான்? (1 புள்ளி)


ஆ. பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியர் எடுத்துக் கையாண்ட இரண்டு தமிழ் இலக்கிய நூல்களைக் குறிப்பிடவும். (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் தன் தகப்பனாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சிரியமாக இருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத்தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்து விட்டது." (அத்தியாயம் 7, பக்கம் 102)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நான் மற்றும் 'உங்களை' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 9
மாதிரி விடை

அ. மதுரை மீனாட்சியம்மன் கோயில்


ஆ.குறுந்தொகை, திருக்குறள்


இ. மோகினியோடு கொண்டுள்ள நட்பும் காதலும்.
தாம் பெரிய மனிதராக எண்ணிக் கொண்டிருக்கும் கண்ணாயிரத்தைத் துச்சமாக நினைத்து நடத்தல்.
தன் தந்தை வேண்டாம் என்று கூறிய இந்த ஆசிரியர் தொழிலை இவன் தேர்ந்தெடுத்தது.
தாம் விரும்பாத குமரப்பனோடு சகவாசம்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. பாரதி, சத்தியமூர்த்தி


  2. பாரதியின் ஆலோசனைக்கேற்ப சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் உரிதையாளர் பூபதிக்குக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில் விரிவிரையாளர் பணியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்ரத்த முனைகின்றான். அதன் பயனாக அவனுக்கு நியமனக் கடிதம் கிடைக்கின்றது. அவனும் வேலை நிமித்தம் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Wednesday, March 9, 2011

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8

பயிற்சி 8

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. விரிவுரையாளராக வரவேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? (1 புள்ளி)


ஆ. எதிர்மறை கதைமாந்தர்களில் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்திக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழக் காரணம் யாது?(4 புள்ளி)


ஈ. "நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏணியைப் போல நீ சாத்திய இடத்திலேயே சாத்திக்கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது." (அத்தியாயம் 4, பக்கம் 56)


  1. இவ்வுரையாடலில் வரும் 'நீ' யார்? 'தொழில்'எதைக் குறிக்கிறது? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 8
மாதிரி விடை

அ. பாரதி


ஆ.கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார்


இ. மாணவர்களைக் கவரும் வகையில் செயல்படுவது.
பாரதியுடன் நெருக்கம்.
தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காமை.
மாணவர்களுக்காகப் போராடும் மனப்போக்கு.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சத்தியமூர்த்தி, விரிவிரையாளர்


  2. மல்லிகைப்பந்தலு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேர்க்காணலை முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவ்வேளையில் நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் அவன் மனதை நெருடுகின்றன. இந்த விரிவுரையாளர் வேலை தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் கேள்வியும் அவன் மனத்தில் எழும்புகிறது. மேலும் தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பும் தன் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இச்சூழலில் தன் தந்தை தான் செய்த இந்த ஆசிரியர் தொழிலை தன் மகனும் செய்யக்ககூடாது என்று கூறுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7

பயிற்சி 7

பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

அ. சத்தியமூர்த்திக்குத் துணை நின்ற நண்பன் யார்? (1 புள்ளி)


ஆ. மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களின் பெயரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


இ. சத்தியமூர்த்தி விரிவுரையாளராக வரவேண்டுமென்று பாரதி எண்ணியதன் காரணம் என்ன?(4 புள்ளி)


ஈ. "இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற கல்லூரி உரிமையாளர் அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப்பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படி பேசி இருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது." (அத்தியாயம் 3, பக்கம் 40)


  1. இவ்வுரையாடலில் வரும் 'தனக்கு' மற்றும் 'கோடீஸ்வரர்' யாவர்? (2 புள்ளி)

  2. இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

பயிற்சி 7
மாதிரி விடை

அ. குமரப்பன்


ஆ.சத்தியமூர்த்தி, சுந்தரேசன்


இ. சத்தியமூர்த்தி ஒரு வசீகரமிக்க, அறிவார்ந்த இளைஞன்.
தமிழை நன்கு கற்றுணர்ந்தவன்.
ஆழ்ந்த அறிவும் உயர் பண்பும் கொண்டவன்.
(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

  1. சத்தியமூர்த்தி, பூபதி


  2. நேர்க்காணலின் போது சத்தியமூர்த்தியின் இளமை ஒரு குறையாகக் கருதப்படுகிறது. சத்தியமூர்த்தி உணர்ச்சி வயப்படுவதோடு இளமை குறையள்ள என்றும், முதுமை நற்பண்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுவதன்வழி பூபதியைப் புண்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. தான் கூறிய அந்த வார்த்தைகள் பூபதியின் மனத்தை புண்படுத்தியிருக்குமோ என்று எண்ணுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)

Saturday, March 5, 2011

சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி

மலேசித் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும்

சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டி


சிறுவர், இளையோருக்கான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) இணைந்து RM10,000.00 பரிசு திட்டத்தில் சிறுகதைப் போட்டியை நடத்தவிருக்கின்றது. இப்போட்டிக்கு மலேசிய உமா பதிப்பகமும், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றமும் ஆதரவு அமைப்புகளாக உள்ளன.

மாணவர்களின் வாசிப்புக்கான இலக்கியங்கள் நம் நாட்டில் படைக்கப்படுவது அரிதாகி விட்ட காரணத்தினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நோக்கங்கள்
  1. மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் ‘சிறுவர் & இளையோர் சிறுகதை (Cerpen Kanak-kanan & Cerpen Remaja) இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல்.

  2. தமிழ்ப்படைப்பாளர்களிடையே சிறுவர் & இளையோர் சிறுகதை இலக்கியம் படைத்தலை ஊக்குவித்தல்.


  3. தமிழ்ச்சிறுவர்க்கும் தமிழ் இளையோருக்கும் இலக்கியச் சுவையூட்டி அதன்பால் ஆர்வத்தைத் தூண்டுதல்.


  4. இலக்கியத்தின் வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் சிந்தனையை வளப்படுத்திப் பண்படுத்துதல்.


  5. இலக்கியத்தின்வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தி, பெற்றோரும் இளையோருடன் தொடர்புடைய மற்றோரும் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுதல்.


  6. தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றின் காரணங்களையும் மூலங்களையும் சிறுகதை இலக்கியத்தில் அடையாளங்காட்டுவதன்வழி, உரிய தரப்புகள் அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளைக்கான வழிவகுத்தல்.


பிரிவுகள்
இப்போட்டி இரு பிரிவாக நடத்தப்படும்.
முதல் பிரிவு: சிறுவர் சிறுகதை (Cerpen Kanak-kanak – 7 முதல் 12 வயதினர் வாசிப்புக்கான படைப்பிலக்கியம்)

இரண்டாம் பிரிவு: இளையோர் சிறுகதை (Cerpen Remaja – 13 முதல் 19 வயதினர் (பதின்ம வயதினர்) வாசிப்புக்கான படைப்பிலக்கியம்.

பரிசுகள்
மொத்தப் பரிசுத் தொகை: ரொக்கப் பணம் RM10,000.00

சிறுவர் சிறுகதைக்கு: RM5,000.00
10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.

இளையோர் சிறுகதைக்கு: RM5,000.00
10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.

(குறிப்பு: முதல் இரண்டாம், மூன்றாம் பரிசுகள், ஆறுதல் பரிசுகள் என்று வகை பிரிக்கப்படாமல் தேர்வாகின்ற 10 சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகள் (பரிசுக்குரியவை) என நடுவர்களால் அறிவிக்கப்படும்)

விதிமுறைகள்

  1. மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்


  2. போட்டியில் பங்கு பெறுபவர் இப்போட்டிக்கான சிறுவர் சிறுகதை, இளையோர் சிறுகதை ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கு கொள்ளலாம்.


  3. சிறுவர், பதின்ம அகவையினராகிய நம் நாட்டுத் தமிழ் இளையோர், இன்றைய பல்வகை மலேசிய வாழ்க்கைச் சூழல்களில் எதிர்கொள்கின்ற சவால்களையும் சிக்கல்களையும், உணர்வுகளையும், அதோடு அவர்கள அடைகின்ற சாதனைகள் அல்லது வெற்றிகளை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை எழுத வேண்டும்.


  4. சிறுகதை நல்ல தமிழிலும், எளிய நடையிலும், மொழிநயம், கலைநயம், பொருள் நயம் (கருத்து நயம்) ஆகிய கூறுகள் பொருந்தியதாகவும் அமைய வேண்டுவதோடு அந்தந்த வயதினர்க்கேற்ற மொழியிலும் அவர்களின் மன நிலைக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.


  5. சிறுகதைப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும், இதற்கு முன் அச்சேற்றப்படாததாகவும் இருத்தல் வேண்டும். (இதற்கான உறுதி மொழியை சிறுகதை படிவத்தின் இறுதியில் வழங்கி கையொப்பமிட்டிருக்க வேண்டும்). கதைப் படிவத்தில் கதைத் தலைப்பு மட்டுமே இருத்தல் வேண்டும்; எழுதியவரின் பெயர் அப்படிவத்தில் இருத்தல் கூடாது.


  6. சிறுகதை அளவு.
    A4 அளவுத்தாள்
    12 புள்ளி எழுத்துரு அளவு (Font Size)
    1.5 அளவு வரி இடைவெளி (Line Spacing)
    1,000 சொற்கள் (சிறுவர் சிறுகதைக்கு)
    1,500 சொற்கள் (இளையோர் சிறுகதைக்கு)

    கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அச்சுப்படிவத்தை (Hard Copy) மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.


  7. சிறுகதையைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

  8. நடுவர்களின் முடிவே இறுதியானது.


  9. படைப்பின் பதிப்புரிமை ஏற்பாட்டாளர்களுக்கு உரியதாகும். (படைப்பாளர், தங்களுடைய சிறுகதைகளை நூலாக்கும் உரிமையை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் உறுதிக்கடிதம் ஒன்றை வழங்கவேண்டும்.)


  10. போட்டி விதிகளுக்கு உட்படாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.3.2011
மேல்விபரங்களுக்கு
:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
No.6-B, Jalan Murai 1, Batu Complex, Bt.3 Off Jalan Ipoh,
51200 Kuala Lumpur, Malaysia.
Tel/Fax: 03-6250 4544
H/P: 012-2668416 குணநாதன் H/P: 012-6025450 ந.பச்சைபாலன்

    Tuesday, March 1, 2011

    நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6

    பயிற்சி 6

    பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)

    அ. மல்லிகைப் பந்தலிலிருந்து சத்தியமூர்த்திக்கு எத்தனைக் கடிதங்கள் வந்தன? (1 புள்ளி)


    ஆ. பொன்விலங்கு நாவலை எழுதிய நா.பார்த்தசாரதியின் பிற நூல்கள் இரண்டிணைக் குறிப்பிடுக. (2 புள்ளி)


    இ. பணி ஓய்வுக்குப் பின் சத்தியமூர்த்தியின் தந்தையை வருத்திய இரண்டு கவலைகள் யாவை?(4 புள்ளி)


    ஈ. "சித்திரா பௌர்ணமியன்று மாலை ஒரு மணி தமுக்கம் பொருட்காட்சியில் அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமுன்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வா'ன்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்." (அத்தியாயம் 12, பக்கம் 165)


    1. இவ்வுரையாடலில் வரும் 'நீங்க' மற்றும் 'நான்' யாவர்? (2 புள்ளி)

    2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

    பயிற்சி 6
    மாதிரி விடை


    அ. மூன்று


    ஆ. குறிஞ்சி மலர், ஆத்மாவின் ராகங்கள்


    இ. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுதல்.
    மகள் ஆண்டாளின் திருமணம்.
    (ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

    1. சிறுவன், சத்தியமூர்த்தி


    2. ஒரு சிறுவன் சத்தியமூர்த்தியை வந்து சந்திக்கிறான். தமுக்கம் பொருட்காட்சியில் நடைபெறும் மோனியின் நடனத்தைக் காண வருமாறு மோகினி அழைத்ததாக அச்சிறுவன் கூறுகிறான். சத்தியமூர்த்தியோ சிறுவனிடம் தான் வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறான்.
      சிறுவனோ சத்தியமூர்த்தி உறுதியா பதில் சொல்லும்வரை விடாப்பிடியாக இருக்கிறான். அப்போது,
      பல வகையில் மனம் புண்பட்டுப் போய் இருக்கும் மோகினியைப் பற்றி யோசிக்கிறான்.
      தானும் புண்படுத்தக்கூடாது என்று எண்ணி அந்தச் சிறுவனிடம் அவசியம் வருகிறேன் என்று கூறி அவனை வழியனுப்புகிறான்

    (நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

    Thursday, February 24, 2011

    யார் தமிழ்படிப்பார் (கவிஞர் பொன்முடி) - கவிதையில் காணப்படும் சிறப்புகள்

    கவிஞர் பொன்முடி (மலேசியா) புனைந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்
    தலைப்பு
    யார் தமிழ் படிப்பார்

    கவிஞர்
    பொன்முடி(இயற்பெயர் : திரு.சுப்பிரமணியம்) - மலேசியா

    மையக்கரு
    மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி பயில்வது தொடர்ந்தால்தான் நம் நாட்டில் தமிழ் வளரும்.

    யாப்பு வகை
    ஆசிரியப்பா

    அணிச்சிறப்புகள்
    உருவக அணி
    உதாரணம்:
    "தமிழ்மொழித் தேனே"
    தமிழ் மொழி தேனாக உருவகம்.

    உதாரணம்:
    "தாய்நலங் காப்பது சேய்கடன் தானே"
    தமிழ் தாயாக உருவகம்.

    உதாரணம்:
    "தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
    இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா"

    தமிழ்மொழி, சுமக்கப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டதொரு பொருளாக உருவகம்.

    உதாரணம்:
    "தாயா அருமைச்சேயினுக் கெதிராய்த் தீயாய் மாறித் தீய்க்க
    முனைவாள்"

    தமிழ் தாயாக உருவகம்.

    உவமை அணி
    உதாரணம்:
    "பொற்றதாயைப் பிள்ளை மறுப்பது"
    தாய் மொழியை மறுப்பது தாயை மறுப்பதைப் போன்றது.

    உதாரணம்:
    "உற்ற தாய் அன்பினை உதறிப் போவது"
    தமிழ்ப்பற்றை உதறிப் போவது தாயன்பை உதறிப் போவதைப் போன்றது.
    உதாரணம்:
    "சொந்தம் என்று வந்த பந்தம் சோறு போடுமா"
    தமிழ்மொழி சோறு போடுமா என்று கேன்பதைப் போன்றது.

    உதாரணம்:
    "இமயச் செயல்"
    இமயம் போன்ற உயர்ந்த செயல்.

    (நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)

    Wednesday, February 16, 2011

    நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5

    பயிற்சி 5

    பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


    அ. குத்துவிளக்குப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைபவர் யார்? (1 புள்ளி)


    ஆ. ஏன் மோகினி சத்தியமூர்த்தியை இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்கு அழைத்தாள்?.(2 புள்ளி)


    இ. குமரப்பன் மல்லிகைப் பந்தலுக்கு வருகை தந்ததன் காரணம் என்ன?(4 புள்ளி)


    ஈ. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளை காலையிலிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டபோது அவள் முகம் வாடிவிட்டது.(அத்தியாயம் 16, பக்கம் 218)


    1. இவ்வுரையாடலில் வரும் 'அவன்' மற்றும் 'அவள்' யாவர்? (2 புள்ளி)


    2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)

    பயிற்சி 5
    மாதிரி விடை

    அ. குமரப்பன்

    ஆ. நீலக்கல் பொருந்திய மோதிரத்தைச் சத்தியமூர்த்திக்கு அணிவிப்பதற்காக

    இ. குத்துவிளக்குப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணி.
    நிர்வாக உரிமை மஞ்சள் பட்டி ஜமீந்தாருக்கு மாறியதால்.
    நண்பன் சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்திற்குச் செல்லுதல்.
    தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்ய எண்ணுதல்.
    (ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

    ஈ.

    1. சத்தியமூர்த்தி, பாரதி

    2. கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் உபசாரம் செய்கிறான்.
      சத்தியமூர்த்தி பாரதியின் பிடிவாதத்திற்கு உடன்படுகிறான்.
      தனது காரில் கல்லூரிக்கு அனுப்பி வாட்ச்மேனை கொண்டு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறாள். அதன்பிறகே அவள் வீடு திரும்புகிறாள்.

    (நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

    Monday, February 14, 2011

    கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

    கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு
    (இயற்பெயர் : சுப்பிரமணியம்)


    பிறப்பு

    27-11-1939


    கல்வி / தொழில்

    இடைநிலைக் கல்விபெற்று, 1959-1971 வரை ஆசிரியராகவும், 1972-1994 வரை தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


    துறைகள் / திறன்கள்

    கவிதை, உரைவீச்சு, கட்டுரை


    பணிகள்

    மணிமன்ற அமைப்பாளராகவும்; திருமணத் துணைப் பதிவதிகாரியாகவும்; ஆலயத் தலைவராகவும்; ம.இ.கா. கிளையில் பல பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி சிறப்புப் பயிற்றுநராகவும்; மாவட்டக் கல்விப் பொறுப்பாளராகவும்; புதிய பாடத்திட்டக் குழு, பாட நூல் ஆக்கக் குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைப் பயிலரங்குகளும் சமய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.


    படைப்புகள்

    35 ஆண்டுகளாக எழுதுபவர். கவிதை, சிறுவர் கவிதை, சிறுவர் இலக்கியம் என இவர் எழுதி வெளியானவை 16 நூல்கள்.


    புனைப்பெயர்

    பொன்முடி.


    விருதுகள் / பரிசுகள்

    PJK, ASA அரசவிருதுகளைப் பெற்றவர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம், இலக்கியக் கழகத்தின் குழந்தை எழுத்தாளர் விருது, கவிதை மாநாட்டில் தங்கப் பதக்கம் ஆகியவற்றுடன் பல அமைப்புகளின் இலக்கியப் பரிசுகளும் பெற்றுள்ளார்.

    (நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

    Saturday, February 12, 2011

    யார் தமிழ் படிப்பார்? (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா )

    யார் தமிழ் படிப்பார்?
    (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா)



    தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
    தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
    தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
    இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
    தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
    தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
    தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
    இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
    ஓராண் டல்ல ஈராண் டல்ல
    ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
    அளித்த மொழியின் அருமை மறந்து
    புளித்தது என்று புகல்வதா இன்று!
    ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
    பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட
    எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
    உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
    தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
    கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
    பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
    உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
    மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
    கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
    சொந்தம் என்று வந்த பந்தம்
    சோறு போடுமா என்று கேட்கும்
    ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
    வேறினம் இல்லை விதிவிதி என்றே
    வீறு குறைந்த வீணன் இவனைக்
    கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
    தீரா தென்றன் சினம்தீ ராது!
    எந்த நாட்டினில் எந்த மொழிதான்
    எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
    துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?
    உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
    மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
    தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
    தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
    தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
    இப்படி யாஇவன் செப்பித் திரிவது
    ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
    தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
    தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
    மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
    மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
    உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
    பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
    மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
    மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
    தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
    தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
    தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
    இமயச் செயலாம் என்மா ணவரே!

    (கவிதைப் பூங்கொத்து)

    Friday, February 11, 2011

    நீண்ட கேள்வி (நாவல்) - கதைப்பின்னல்

    பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக.


    பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம்.

    முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனைக் கையும்களவுமாகப் பிடித்துவிடுகிறான். பிறகு இத்திருடனுக்கு அறிவுரைகள் கூறி அவனது செயலை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.

    இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.

    மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

    இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.

    கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.

    இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.

    படைப்பு:
    செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, நிபோங் திபால், தென் செபெராங் பிறை, பினாங்கு.

    Wednesday, February 9, 2011

    மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (பொதுக் கட்டுரை 2)

    2012ஆம் கல்வியாண்டில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தில் அறிமுகப்படுத்த இருக்கின்ற மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியத்தைப் பற்றி மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்த செய்தி.
    (நன்றி, மலேசிய நண்பன் ஞாயிற்றுக்கிழமை 6-2-2011)


    உள்நாட்டுப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழ் நூல்களை எஸ்.பி.எம். இலக்கியப் பாடத்திற்குக் கல்வி அமைச்சு ஏற்பதில்லை என்னும் குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

    அக்குறையை நீக்கும் வண்ணம் 2012-2015ஆம் ஆண்டுகளுக்குரிய இலக்கியப் பாடத்திற்கு (கவிதை) அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை அரசு ஏற்றுள்ளது. நாவல் பிரிவிற்கு ஐ.இளவழகு எழுதி, சன்ரைஸ் ஸ்டோர் வெளியிட்ட இலட்சியப் பயணத்தைத் தெரிவு செய்துள்ளது. இது மலேசியத் தமிழ்ப் படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும். உள்நாட்டு இலக்கியம், எதிர்காலத் தலைமுறையான மாணவர்களிடையே பரவவும், அவர்களுக்கு நாட்டுப் பற்று, சமுதாய உணர்வு, தன்முனைப்புப் போன்றவை மேலோங்கவும் இது வழிவகுக்கும்.

    மலேசியக் கல்வி அமைச்சு, பாட நூலாக அங்கீகரித்துள்ள மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலைப் பற்றி இங்குச் சிறிது குறிப்பிடுவது முதன்மையாகும்.

    முனைவர் முரசு.நெடுமாறன் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரிதின் முயன்றுதேடித் திரட்டிய முயற்சியாகும். அவர் நியமித்த தகுதி வாய்ந்த குழுவினர்தம் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் உருவானது இக்களஞ்சியம். இது 254 மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழ்க் கூறு நல்லுலகம் நிமிர்ந்து பார்க்க வைத்த ஓர் அரும்படையல் ஆகும். புலம் பெயர்ந்த ஒரு தமிழினப் பிரிவு, தாய் தமிழுக்குச் சூட்டிய ஒப்பற்ற ஓர் அணியாகும். இக்களஞ்சியம் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு தலைமைத் தொகுப்பாசிரியருக்கு உயரிய பாவேந்தர் பாரதிதாசன் விருதளித்துச் சிறப்புச் செய்தது (1978). இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அந்நூலுக்கு முதல் பரிசளித்தது. 1977ஆம் ஆண்டின் ‘சிறந்த நூலாசிரியர்’ என்னும் விருதையும் தலைமைத் தொகுப்பாசிரியருக்கு அளித்தது.

    சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் களஞ்சியத்தில் இடம் தந்தமையைப் பாராட்டி ‘தமிழவேள்’ விருதளித்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு வெ.5000.00 வழங்கி, அவ்வாண்டின் சிறந்த நூல் என்னும் சிறப்பைக் களஞ்சியத்திற்கு வழங்கியது. இப்பொழுது மலேசியக் கல்வி அமைச்சும் தன் அங்கீகாரத்தை அளித்துள்ளளது.

    இங்ஙனம் தமிழ்க்கூறு நல்லுலகால் ஒரு சேரப் பாராட்டப்பெற்ற இக்களஞ்சிய உருவாக்கத்திற்குத் துணை நின்றவர்களைக் குறுப்பிடுவது நன்றிக்குரிய செயாலாகும். நூல் உருவாக்கப் பெரும் பணிக்குத் தமிழறிஞர் டத்தோ ஆ.சோதிநாதன் போன்ற சான்றோர் பெருமக்கள் தகவுரை நல்கி வழிநடத்தியுள்ளனர். பெரும் புலவர்களாகவும் பதிப்புச் செம்பல்களாகவும் விளங்கிய நினைவில் வாழும் பேரா இராம சுப்பிரமணியரும் புலவரடல் அ.நக்கீர அடிகள் இங்குவந்து ஆறு மாதங்கள் தங்கி ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டி நூலை உரிய பதிப்பாக உருவாக்க அரும்பாடுபட்டனர். முனைவர் முரசு நெடுமாறனுடன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற புலவர் ப.மு.அன்வர், எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன், செவ்விசைச் சித்தர் ரெ.சண்முகம் ஆகியோர் ஆற்றிய பணி போற்றுதற்குரிய அரும்பணியாகும். பல்லாயிரக்கணக்கான கவிதைகளைப் படித்து, ஆய்வுக்குரிய கவிதைகளைத் தெரிவு செய்யும் பணியில் கவிஞரேறு அமலதாசன் (சிங்கப்பூர்), சதாசிவம் வீரையா (சிங்கப்பூர்), சை.பீர்.முகம்மது, பி.கோவிந்தசாமி, மணிக்கவிஞர் பாதாசன், கவிச்சுடர் காரைக்கிழார், கவிஞர் மைதீ.சுல்தான் ஆகியோர் ஈடுபட்டு ஒத்துழைத்தனர்.

    1887 முதல் 1987ஆம் ஆண்டு வரையாலான நூறு ஆண்டு காலக் கவிதைகளை ஆய்வு செய்து 650 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் பணியும் தமிழபம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாட்டுத் தமிழர் வரலாற்றைத் தேடித் திரட்டி வரலாற்று வாயில் எழுதும் பணியும், கவிஞர்களைப் பற்றிய குறிப்புகள், பாடல்களில் புலங்கள் போன்றவற்றைத் தொகுத்தெழுதவும் பத்தாண்டு காலம் செலவானது.

    இந்த நீண்ட காலகட்டத்தில் எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், தொகுப்புப் பணி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துத் தொகுப்புக் குழுவும் பதிப்புக் குழுவும் தம் பணிகளைச் செம்மையாய் நிறைவேற்றி தமிழ்க்கூறு நல்லுலகில் ஓர் அழுத்தமானவரலாற்றைப் பதித்தன. மேற்படி பட்டியலில் இடம்பெறாத இன்னும் பல தொண்டு மனங்களின் உழைப்பும் இங்குக் குறிக்கத்தக்கனவாகும்.

    ஓர் அரசோ, பல்கலைக்கழகமோ மேற்கொள்ள வேண்டிய பெருஞ் செயலை, தனி மாந்தர் ஒருவர் தலைமையேற்று, உறுதியாக நின்று எல்லாரையும் அரவணைத்துச் செயலாற்றி வெற்றிக்கண்டிருப்பது வியந்து பாராட்டுதற்குரிய தென்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகின்றனர்.

    1080 பக்கங்கள் கொண்ட பெருநூலான இத்தொகுப்பிலிருந்து இலக்கியப் பாடத்திற்கேற்ற முப்பது கவிதைகளை மட்டும் தொகுத்து மாணவர்ப் பதிப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது.

    Monday, February 7, 2011

    கவிதை பாகம் 2 - (‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக)

    ‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.


    நற்றமிழ்க் கவிஞர் க. பெருமாள் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தமிழ்க்கவிதை’ என்ற தலைப்பிலான கவிதை, ‘கவிதைப்பூங்கொத்து’ எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வு கலந்த கலையாக்கமே தமிழ்க்கவிதை என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதை உருவாகியுள்ளது.

    கவிதை என்பது கடினமான இலக்கிய வடிவம் என்ற மனப்போக்கு கொண்டவர்களுக்கு, தமிழ்க்கவிதை தனித்தன்மை வாய்ந்தது எனவும் இலக்கிய இன்பத்தினை ஊட்ட வல்லது என்ற முகாமையான கருத்து இக்கவிதையில் வெளிப்படுகிறது. தான் பெற்ற அனுபவத்தையும் இன்பத்தையும் யாவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிஞர் பல கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.

    அவ்வகையில், கவிதை என்பது எதுகை, எழுத்து, அசை, சீர், தளை போன்றவற்றை முயன்று தேடி வலிந்து உருவாக்குவது அன்று எனவும் ஊக்கத்துடன் கவிதை இயற்றும் கலையை உரிய முறையில் படிப்படியாக முயன்று கற்றால் அதன் சுவையில் மெய்மறந்து ஒன்றிப் போய்விடலாம் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இவ்வாறே தானும் தமிழ்க்கவிதையைப் பயின்று கோடி இன்பம் பெற்றதாகக் கவிஞர் தன்னையே முன்னுதாரணமாகக் கூறுகிறார்.

    மேலும், தமிழ்க்கவிதை இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் திறன் பெற்றது. தமிழர்களிடையே, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே’ என்ற கவிதை வரிகளை மொழிந்தறியா வாய் இருப்பது அரிதே. பாவேந்தர் பாரதிதாசனின் அந்த இனிய கவிதை வரிகள், ஆழக் கடலில் மூழ்கி முத்தை எடுத்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சியைப் பொங்கச் செய்து அருமைமிகு தமிழர்களின் நாவில் எல்லாம் மணம் பரப்புகிற, அமுதின் சுவை கொண்ட பாட்டாகத் தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து நின்று சுடர்வீசிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. யாழும் குழலும் போன்ற இசைக்கருவிகளால் பெறக்கூடிய இசைவகைகளை எல்லாம் ஒன்றாக இணைத்து வழங்குகிற இன்பச்சுவையின் உச்சநிலை வளர நம்மை இட்டுச் செல்லக்கூடியது கவிதை என்று அதன் மேன்மையைக் கவிஞர் தெளிவுறுத்துகிறார்.

    தொடர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தொடங்கியதெல்லாம் வெற்றிபெறும் வகையில், உள்ளத்தில் வெளிச்சம் தரக் கூடிய வல்லமை பெற்றது தமிழ்க்கவிதை. வீரச் சுவை கொண்ட எழுச்சிப் பாட்டு, மழலைச் செல்வங்களுக்கு அமைதியான உறக்கத்தைத் தரும் தாலாட்டு, வெற்றியின் பெருமிதத்தை உணர்த்தும் பரணி பாட்டு, புகழுக்கு மேலும் சிறப்பூட்டும் வாழ்த்துப் பாட்டு போன்ற பல்வகை கவிதைகள் தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருமித்து வாழ்ந்து கொண்டிருப்பது வெள்ளிடைமலை. இதனாலேயே தமிழர் வாழ்வு பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறதெனவும் கவிஞர் உணர்த்துகிறார்.

    கவிதை என்பது உலகப்பொதுநிலையில் ஓர் இலக்கிய வடிவம் என்னும் நிலையில் பல பயன்களையும் சுவைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால், ‘தமிழ்க்கவிதை’ என்பது அவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழர்களின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு கூறாக காலங்காலமாக விளங்கி வந்திருக்கிறது என்ற கருத்தினை கவிஞர் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தவிர்த்து தொன்று தொட்டு வளர்ந்து வரும் தமிழ்க்கவிதை உலகமயமாக்குதல் என்னும் பெருவெள்ளத்தில் தனது தனித்தன்மையை இழந்துவிடுமாறு விட்டுவிடக் கூடாது என்பதையும் மறைமுகமாகக் கவிஞர் வலியுறுத்துகின்றார்.

    ஆகவே, செம்மொழியாம் தமிழ்மொழியின் குழந்தையான தமிழ்க்கவிதை சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட வேண்டும். நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட தமிழ்க்கவிதையையின் தனித்தன்மை போற்றி காக்கப்பட வேண்டியது நம் கையில்தான் உள்ளது.


    (ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல், SMK Taman Selesa Jaya, Johor Bahru, Malaysia)

    Wednesday, February 2, 2011

    கவிதை (பாகம் 1 : பிரிவு மூன்று) தமிழ்க்கவிதை பயிற்சி 1

    பயிற்சி 1
    பாகம் 1- பிரிவு மூன்று (கவிதை : தமிழ்க்கவிதை)


    துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
    தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
    நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
    நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
    விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
    வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
    மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
    மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!

    அ. இக்கவிதையின் பாடுபொருள் என்ன?.(1 புள்ளி)

    ஆ. மேற்காணும் கவிதையை இயற்றியவர் யார்?.(1 புள்ளி)

    இ.
    1. "பரணிப்பாட்டு" எனும் சொல்லின் பொருள் யாது?. (1 புள்ளி)

    2. மேற்காணும் கண்ணியின் வாயிலாக்க் கவிஞர் வலியுறுத்தும் கருத்து யாது?. (3 புள்ளி)

    ஈ.
    1. "இக்கவிதையில் வரும் எதுகை மோனையைக் குறிப்பிடுக?. (2 புள்ளி)

    2. இக்கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் அணிச்சிறப்புகள் இரண்டனைக் குறிப்பிடுக?. (4 புள்ளி)


    பயிற்சி 1
    மாதிரி விடை

    அ. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வுகலந்த கலையாக்கமே தமிழ்க் கவிதை.(1 புள்ளி)


    ஆ. க.பெருமாள்.(1 புள்ளி)

    இ.
    1. போரில் பெற்ற வெற்றியை மகிழ்ந்து கொண்டாடிப் பாடும் செய்யுள்வகை. (1 புள்ளி)

    2. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடங்கியதெல்லாம் வெற்றி பெறும் வகையில் உள்ளத்தில் வெளிச்சம் தரக்கூடியது கவிதை. நாம் கவிதையால் உணர்வு பெற்று வீறு கொண்டு அச்சத்தை ஒழிப்போம் என கவிஞர் உணர்த்துகிறார். பெறுமையும் சிறப்பும் மிக்க தமிழர்கள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பது கவிதையாகும். (3 புள்ளி)

    ஈ.
    1. எதுகை
      துறைதோறும் - நிறைவான (1 புள்ளி)

      மோனை
      எதுகையென்ன - எழுத்தசையும்(1 புள்ளி)

    2. உவமை அணி
      பூந்தாலாட்டு. (2 புள்ளி)

      உருவக அணி
      தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும். (2 புள்ளி)

    (நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1- பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)

    தமிழ்க்கவிதை (கவிஞர் க.பெருமாள் - கவிதையில் காணப்படும் சிறப்புகள்

    கவிஞர் க.பெருமாள் (மலேசியா) புனைந்த தமிழ்க்கவிதை என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்


    தலைப்பு

    தமிழ்க்கவிதை


    கவிஞர்

    க.பெருமாள் (கவியழகர்) - மலேசியா


    மையக்கரு

    வாழ்வோடு கலந்து நிற்கும் நிகழ்ச்சியின் உணர்வு கலந்த வெளிப்பாடே தமிழ்க்கவிதை


    யாப்பு வகை

    ஆசிரியப்பா


    அணிச்சிறப்புகள்

    இரட்டுறமொழிதல் / சிலேடை
    உதாரணம் :
    எழுத்தசையும் சீர்தலையும்.

    உவமை அணி
    உதாரணம்:
    "ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க"
    ஆழமான கடலிலிருந்து முத்து எடுத்த மகிழ்ச்சி போன்று

    உதாரணம்:
    "அமுதப் பாட்டு"
    அமுதம் போன்ற பாட்டு

    உதாரணம்:
    "யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
    இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்"

    கவிதையின் சுவையானது யாழ் மற்றும் குழலின் இசையைப் போன்றது.

    உருவக அணி
    உதாரணம்:
    "தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்"
    கவிதை ஒளியைப் பாய்ச்சும் விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.


    (நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)

    Tuesday, February 1, 2011

    கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு

    கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு


    பிறப்பு

    5-5-1938 கூலாத் தோட்டம், கோலக்குரோ, பேரா மாநிலம், மலேசியா


    கல்வி / தொழில்

    தமிழ்ப்பள்ளி மாணவர்; 7ஆம் வகுப்புவரை பயின்று ஆசிரியர் ஆயத்தப் பயிற்சி பெற்றவர்


    துறைகள் / திறன்கள்

    கவிதை, கட்டுரை


    பணிகள்

    1954இல் ஈவேரா பெரியாரின் உரையை நேரிடையாகக் கேட்ட உணர்வெழுச்சியில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை மலேசியத் திராவிடர் இயக்கத்தில் பல நிலைகளில் தொடர்ந்து பணியாற்றுபவர். பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவதுடன், பூக்களம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்


    படைப்புகள்

    பள்ளி நாள்களில் மாணவர் மணி மன்ற மலரில் தொடங்கி, அறுபதுகளில் யாப்புப் பயின்று தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். தமது கவிதைகளைத் தொகுத்து 2004இல் நூலாக வெளியிட்டுள்ளார்.


    சிறப்பு அடைகள்

    கவியழகர்.


    விருதுகள் / பரிசுகள்

    பினாங்கு ஆளுநரிடமிருந்து PJK, PJM ஆகிய அரசவிருதுகளைப் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார்.

    (நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)

    மலேசிய எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ்வாழ்த்து

    நிலைபெற நீ வாழியவே!

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ் வாழ்த்து கடந்த வாரம் வெளியீடு கண்டது. கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதி, ஆர்.பி.எஸ். ராஜூ இசையமைத்து, துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இங்கு இடம்பெறுகிறது.

    காப்பியனை ஈன்றவளே!
    காப்பியங்கள் கண்டவளே!
    கலைவளர்த்த தமிழகத்தின்
    தலைநிலத்தில் ஆள்பவளே!
    தாய்ப்புலமை யாற்புவியில்
    தனிப்பெருமை கொண்டவளே!
    தமிழரொடு புலம்பெயர்ந்து
    தரணியெங்கும் வாழ்பவளே!


    எங்களெழில் மலைசியத்தில்
    சிங்கைதனில் ஈழமண்ணில்
    இலக்கியமாய் வழக்கியலாய்
    இனக்காவல் தருபவளே!
    பொங்கிவளர்அறிவியலின்
    புத்தாக்கம் அத்தனைக்கும்
    பொருந்தியின்று மின்னுலகில்
    புரட்சிவலம் வருபவளே!


    செவ்வியலின் இலக்கியங்கள்
    செழித்திருந்த பொற்காலம்
    சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
    செம்மாந்த பழையவளே!
    அவ்வியலில் வேரூன்றி
    அறிவுயர்ந்த தற்காலம்
    அழகழகாய் உரைநடையும்
    ஆளுகின்ற புதியவளே!


    குலங்கடந்து நெறிகடந்து
    நிலவரம்பின் தடைகடந்து
    கோமகளாய்த் தமிழர்மனம்
    கொலுவிருக்கும் தமிழணங்கே!
    நிலவினுக்கே பெயர்ந்தாலும்
    நினதாட்சி தொடருமம்மா!
    நிறைகுறையாச் செம்மொழியே
    நிலைபெறநீ வாழியவே!


    இந்த தமிழ் வாழ்த்து குறுந்தட்டுகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தேவைப்படுகிறவர்கள் 012-2668416(மலேசியா) என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    Monday, January 31, 2011

    தமிழ்க் கவிதை - கவிஞர் க.பெருமாள், மலேசியா

    தமிழ்க் கவிதை
    (கவிஞர் க.பெருமாள், மலேசியா)

    எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்,
    எழுத்தசையும் சீர்தளையும் தேடிச் சோர்ந்து
    பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!
    பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடு
    மெதுமெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம்
    மெய்மறந்தேன் அதன்சுவையில் ஒன்றிப் போனேன்!
    இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடி
    யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!


    வாழ்வுமெங்கள் வளமும்உயர் தமிழே என்று
    வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!
    ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க
    அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய்ச்
    சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்
    சுடந்திருக்கும் உண்மையதை மறுப்பா ருண்டோ!
    யாழ்குழலின் இசையெல்லாம் இணைந்து வார்க்கும்
    இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!


    துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
    தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
    நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
    நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
    விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
    வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
    மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
    மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!


    கவிதைப் பூங்கொத்து

    Sunday, January 30, 2011

    நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 4

    பயிற்சி 4
    பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)


    அ. சத்தியமூர்த்தியின் இலட்சியத்திற்குத் தடையாக இருந்த முக்கியக் கதைமாந்தர் யார்(1 புள்ளி)


    ஆ. சத்தியமூர்த்தியின்பால் காதல் கொண்ட இரு பெண்களைக் குறிப்பிடுக?.(2 புள்ளி)


    இ. சத்தியமூர்த்தி தமிழ் விரிவுரையாளராவதற்கு அவன் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)


    ஈ. "இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறி இருந்தாலும் நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது நான் பயப்படுவது நியாயம்தானே?".(அத்தியாயம் 2, பக்கம் 27)
    1. இவ்வுரையாடலில் வரும் 'நான்' மற்றும் 'நீங்கள்' யாவர்? (2 புள்ளி)


    2. இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)


    பயிற்சி 4
    மாதிரி விடை

    அ. கண்ணாயிரம்


    ஆ. மோகினி, பாரதி


    இ. ஏழ்மையிலிருந்து மீள முடியாது.
    சமுதாயத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமை.
    ஏணியைப்போல் பிறரை உயர்த்திவிட்டு தான் மட்டும் எந்த உயர்வுமில்லாமல் இருக்கும் தொழில் என்பதால்.
    (ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்)

    ஈ.
    1. சத்தியமூர்த்தி, பூபதி


    2. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி என்பதாலும், அக்கல்லூரியைச் சிறப்பாக நடத்திவரும் பூபதியும், தன்னை இந்த இலட்சியக் கல்லூரியில் வேலை செய்ய ஆர்வப்படுத்துவதற்குக் காரணமென்று சத்தியமூர்த்தி பதிலுரைக்கிறான்.நேர்க்காணலில் அறிவுப்பூர்வமாகவும் திறமையாகவும் பதிலளிக்கிறான்; துணிவுடன் வாதிடுகிறான்: மதுரைக்குத் திரும்பி தன் நியமனக் கடிதத்திற்காக்க் காத்திருக்கிறான்.

    (நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.)